இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்குத் தனியார் துறையில் இருந்து புதிய தலைவரை நியமிக்கும் திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் மோசமான ஐபிஓ வெளியிட்டு முதலீட்டாளர்களையும், அரசையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் எல்ஐசி நிறுவனத்தை மார்டன் ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு தனியார் துறையில் கைதேர்ந்த அதிகாரியை தலைவராக நியமிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஐசி நிறுவனம்
66 வருட எல்ஐசி வரலாற்றில் முதல் முறையாக எல்ஐசி நிறுவனத்தின் தலைவராகத் தனியார் துறையில் இருந்து ஒருவரை நியமிக்கும் நிகழ்வு நடக்க உள்ளது. இது மட்டும் அல்லாமல் எல்ஐசி நிறுவனத்தின் 41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், கோடிக் கணக்கான மக்களின் எதிர்காலத்தைத் தனியார் துறை அதிகாரி பாதுகாப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.
புதிய சிஇஓ
மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகத் தனியார் துறையில் இருந்து திறன்மிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதால் தகுதி பிரிவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக இதுகுறித்து அறிந்த ஒரு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சகம்
எல்ஐசி நிறுவனத்தைத் தற்போது மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்ஐசி நிறுவனம் தற்போது சேர்மன் கட்டமைப்பில் இயங்கி வருகிறது, தற்போது இருக்கும் சேர்மன் பதவி காலம் மார்ச் மாதத்திற்குள் முடியும் நிலையில், அதன் பின்பு சேர்மன் பதவி மொத்தமாக நீக்கப்பட்டுச் சிஇஓ பதவியில் தான் ஒருவரை மத்திய அரசு நியமிக்க உள்ளது.
பதில்
இதற்கான சட்ட அடிப்படையிலான மாற்றத்தை மத்திய அரசு கடந்த ஆண்டே செய்த நிலையில், தற்போது யாரை நியமிப்பது..? தனியார் துறையில் இருந்து ஒருவரை நியமிக்கலாமா..? என்ற கேள்விகளுக்குத் தான் மத்திய அரசு பதில் தேடி வருகிறது.
எல்ஐசி பங்குகள்
எல்ஐசி பங்குகள் மே மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இதுவரையில் சுமார் 24.47 சதவீதம் சரிந்துள்ளது. எல்ஐசி பங்குகளின் 52 வபா உயர்வு 918.95 ரூபாயாக இருக்கும் நிலையில் தற்போது 661.05 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் எல்ஐசி முதலீட்டாளர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.
சுபாஷ் சந்திர கார்க்
முன்னாள் நிதிச் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தை வழிநடத்தத் தகுதியான தொழில் வல்லுநர்களின் குழு மிகவும் சரியானதாக இருக்கும்.
நம்பிக்கை
தொடர்ந்து அரசு நடத்தும் நிறுவனங்களிலும், அதன் கிளை நிறுவனங்களில் தகுதியானவரைத் தேடுவதைக் காட்டிலும் இந்த யோசனையுடன் உடன்படுவதாகக் கூறினார் சுபாஷ் சந்திர கார்க். இதில் எந்தத் தீங்கும் இல்லை, இது முற்றிலும் விவேகமான நடவடிக்கை என்றும் கார் கூறினார்.
எல்ஐசி முதலீடுகள்
எல்ஐசி நிறுவனம் அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதைத் தாண்டி பல்வேறு நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது. கனரா வங்கி, எஸ்பிஐ, ஆதித்யா பிர்லா கேப்பிடல், Mphasis, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்ஸ் சர்வீசஸ், பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி எனப் பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.