கொரோனா வைரஸ். சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாத ஒரு சின்ன வைரஸ், சுமார் 700 கோடி மக்களையும் பாடாகப் படுத்திக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 137 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. 3 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸ் பரவி இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரம் தான்.
மகாரஷ்டிராவில் கொரோனா
இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் தான், அதிகம் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. மொத்தம் 39 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதோடு கொரோனா வைரஸ் பாதித்த ஒரு நோயாளியும் மகாரஷ்டிராவில் மரணம் அடைந்து இருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
எச்சரிக்கை நடவடிக்கை
மேற்கொண்டு வைரஸ், அதிகம் பரவாமல் இருக்க, மகாராஷ்டிர அரசு, மால்கள், பள்ளிகள் , கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என மக்கள் கூடும் இடங்களை எல்லாம் மூடச் சொல்லி இருக்கிறார்கள். மேற்கொண்டும் சில நடவடிக்கைகளை எடுக்க மகாராஷ்டிர அரசு தயாராக இருப்பதாகச் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறது.
முதல்வர் பேச்சு
புறநகர் ரயில்கள், பேருந்துகள் எல்லாமே அத்தியாவசிய சேவைகள். எனவே அவைகளை தற்போதைக்கு நிறுத்தவில்லை. அரசு சொல்வது போல மக்கள் தேவை இல்லாத பயணங்களை தவிர்க்கவில்லை என்றால், நாங்கள் பேருந்து & ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளையும் ரத்து செய்வோம். அடுத்த 15 - 20 நாட்கள் மிகவும் முக்கியமானவை எனச் சொல்லி இருக்கிறார் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.
போக்குவரத்து
கடந்த மார்ச் 17, 2020 அன்று, தற்போதைக்கு மும்பை நகர போக்குவரத்துக்களை (குறிப்பாக நகர்புற ரயில் சேவைகளை) நிறுத்தப் போவதில்லை என அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் தேவை ஏற்பட்டால் அரசு, போக்குவரத்துவ் வசதிகளை ரத்து செய்யும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
மும்பை புற நகர் ரயில்
நாள் ஒன்றுக்கு சுமாராக 75 லட்சம் மக்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்கிக் கொண்டு இருக்கிறது இந்த மும்பை புறநகர் ரயில். இந்த ஒரு சேவையை மகாராஷ்டிர அரசு நிறுத்திவிட்டால் கிட்டத் தட்ட இந்தியாவின் வர்த்தக தலைநகரமே ஸ்தம்பித்தது போல் ஆகி விடும். அந்த பெரிய முடிவை இந்த குட்டி கொரோனா வைரஸ் எடுக்க வைக்குமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.