உலகின் 3வது மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியட்நாம் சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்தியாவிடம் இருந்து அரிசியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் பெரியதாக வளர்ந்து வரும் நிலையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இரு நாடுகளுக்கு உணவளித்து வருகின்றனர் இந்திய விவசாயிகள். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அரசி உற்பத்தி குறைந்தது, தனது நடப்பு நாடுகளிலும் இதே நிலை நிலவும் காரணத்தால் அரிசியை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனால் இந்தியா- சீனா எல்லை பிரச்சனையையும் தாண்டி இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசி சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வியட்நாம் நாட்டிற்கும் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வியட்நாம்-க்கு அரிசி ஏற்றுமதி
அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் மிகவும் சில நாடுகளில் வியட்நாம் 3வது இடத்தில் உள்ளது. வியட்நாம் நாட்டில் தற்போது அரிசி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இதன் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த வியட்நாம் அரசு சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க முடிவு செய்துள்ளது.
அரிசி உற்பத்தி பாதிப்பு
ஆசிய மக்களின் முக்கிய உணவான அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகளில் அரிசி தட்டுப்பாடு அதிகரித்து இதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் சீனாவைத் தொடர்ந்து தற்போது வியட்நாம்-க்கு இந்திய வியாபாரிகளும், இந்திய விவசாயிகளும் அரிசியை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
70,000 டன் அரிசி ஏற்றுமதி
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் இந்திய வர்த்தகர்களுக்குச் சுமார் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்யும் ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த 70,000 டன் அரிசியை ஒரு டன்னுக்குச் சராசரியாகச் சுமார் 310 டாலர் என்ற விலையில்
விற்பனை செய்ய உள்ளது. முதல் முறையாக வியட்நாம் நாட்டிற்கு அரிசியைப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய உள்ளோம் என அரிசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
அரிசி விலை உயர்வு
வியட்நாம் நாட்டில் அரிசி உற்பத்தி குறைந்து, தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து அரசி வாங்கி வரும் காரணத்தால் ஒரு டன் அரசி விலை தற்போது 500 முதல் 505 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் இருந்து வாங்கப்படும் அரிசி விலை 381 முதல் 387 டாலராக இருக்கும் நிலையில் வியட்நாம் நாட்டில் அரிசி விலை குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வியட்நாம் திட்டம்
கடந்த வருடம் கொரோனா தொற்று உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வந்த நிலையில் வியட்நாம் தனது நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படக் கூடாது என முடிவு செய்து சுமார் 2,70,000 டன் அரிசியைச் சேமிக்க உள்ளதாக அறிவித்தது. ஆனால் வறட்சியின் காரணமாக உற்பத்தி பெரிய அளவில் பாதித்தது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
2020ல் வியட்நாம் நாட்டில் நெல் உற்பத்தி 1.85 சதவீதம் சரிந்து வெறும் 42.69 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி ஆகியுள்ளது. இதன் மூலம் 21.35 மில்லியன் டன் அரிசி மட்டுமே கிடைக்கும் என வியட்நாம் அரசு தரவுகள் கூறுகிறது. இந்த உற்பத்தி சரிவால் இந்நாட்டின் அரிசி ஏற்றுமதி அளவு சுமார் 3.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அரிசி ஏற்றுமதி
ஆசியச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையின் மூலம் 2020ல் மட்டும் இந்தியா சுமார் 14 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதன் அளவு 2021லும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் காரணத்தால் இந்திய ரீடைல் சந்தையில் அரிசி விலை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.