மும்பை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலாண்டில் புதிய குறைந்த அளவை எட்டக்கூடும், என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% க்கும் குறைவான வளர்ச்சியில் இருக்கப்போகிறது என அவை எச்சரிக்கின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் மற்றும் கேபிடல் எகனாமிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் பொருளாதார வல்லுநர்கள் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாக இருக்க கூடும் என்று கணித்துள்ளனர்.
அரசு, நவம்பர் 29 ஆம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ தரவை வெளியிட உள்ளது. அப்போது முழு விவரம் வெளிச்சத்திற்கு வரும்.

புதிய அடிப்படை ஆண்டு
2012 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளுக்கான புதிய அடிப்படை ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிலிருந்து கணக்கெடுத்தால் 4.2 சதவீத வளர்ச்சி என்பது மிகக் குறைவானதாகும். ஜூன் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 5 சதவீதமாக வளர்ந்தது. ஆனால் மறுபடியும், ரிவர்ஸ் கியர் போட்டுள்ளது என்பதேஇந்த கணிப்பின் உள் அர்த்தம்.

வட்டி குறைப்பு
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு, ஐந்து முறை வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. பணம் எளிதாக புழங்க வழி ஏற்படும் வகையில், பெரு நிறுவனங்களுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்புக்கு வரி சலுகை செய்யப்பட்டது. ஆனாலும், பொருளாதாரம் சரிவு பாதையில் பயணிக்கிறது.

கூடுதல் வட்டி குறைப்பு
"வரும் டிசம்பரில் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெரிய அளவுக்கான வட்டி விகிதக் குறைப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் கூறினார். இருப்பினும், இத்தகைய வட்டி வீதக் குறைப்பு எந்தவொரு உடனடி மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்காது." என்றும் அவர் கூற தயங்கவில்லை.

நிதியமைச்சர் கருத்து
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம், பொருளாதார மந்தநிலை குறைந்துவிட்டது என்று சொல்வது மிக விரைவில் என்று உறுதியாக கூறினார். நிறுவனங்கள் புதிய முதலீடுகளைத் திட்டமிடுகின்றன, அவை செயல்பட கால நேரம் எடுக்கும், என்று அவர் கூறினார். ஆனால் 4.7 சதவீதம்தான் ஜிடிபி வளர்ச்சி என்ற இந்த கணிப்பு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மை.