உலக வல்லரசு நாடுகளே கொரோனாவிற்கு பயந்து என்ன முடங்கி போயுள்ள நாடுகளுக்கு மத்தியில், சீனா மட்டும் தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
இதற்கிடையில் சீனாவின் பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் படிப்படியாக தங்களது முதலீடுகளை இந்தியாவில் அதிகரித்து வருகிறன்றன.
அதிலும் இந்த கொரோனா ரணகளத்திலும் கூட சீனாவின் மக்கள் வங்கி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடு
இப்படி நாடே கொரோனா ரணகளத்தில் சிக்கித் தவித்து வந்தாலும், சீனா சத்தமேயில்லாமல் முதலீடுகளை அதிகரித்து வருகிறது எனலாம். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் சீனா நிறுவனங்கள், சீனாவின் மக்கள் வங்கி என பலரும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அரசு FDI விதிகளில் சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளை விதித்தது.
முதலீடு குறையும்
அதன் படி அன்னிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment) கட்டுப்பாடுகளில் புதிய முதலீடுகள் வரத்தானது குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் சீனா மட்டும் அல்ல மற்ற நாடுகளில் இருந்தும் முதலீடுகள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இனி முதலீடு செய்யப்படும் போது அரசின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதால், இது சற்று குறையவே வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு திருத்தம்
எனினும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
முதலீடுகளை சமமாக நடத்த வேண்டும்
ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் எல்லா நாடுகளில் இருந்தும் இந்தியா முதலீடுகளை சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வளர்ச்சியினை உந்துகின்றன
மேலும் திறந்த நியாயமான சமமான அனைத்து வணிகச் சூழலை இந்தியா வளர்க்க வேண்டும். இந்திய உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களை மீறுகின்றது. நிறுவனங்கள் சந்தைக் கொள்கைக் அடிப்படையில் தேர்வுகளை செய்கின்றன. சீன முதலீடுகள் இந்திய தொழில்துறையின் வளர்ச்சியினை உந்துகின்றன. ஆக இந்தியா அனைத்து நாடுகளையும் முதலீட்டில் சமமாக நடத்த வேண்டும் என்றும் ரோங் கூறியுள்ளார்.
கட்டாயம் அனுமதி பெற வெண்டும்
இந்திய நில எல்லையை ஒட்டிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள மத்திய அரசின் முன்னனுமதி பெறுவதை கட்டாயமாக்கி இருக்கிறது வா்த்தக அமைச்சகம். இந்திய நிலப்பரப்புடன் ஒட்டிய நாடுகள் என்பது சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகியவை.
அனுமதி பெற்றே ஆக வேண்டும்
இவற்றில் சீனாவைத் தவிர, ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக இந்தியாவில் மிகக் குறைந்த முதலீடு மட்டுமே செய்திருக்கின்றன. இதே பாகிஸ்தான், பூடான் இரண்டு நாடுகளின் முதலீடுகளே இல்லை. பாதுகாப்பு, தொலைத்தொடா்பு உள்ளிட்ட 16 துறைகளைத் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகளிலும், தொழில்களிலும் சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற நிலைமையே இதுவரையில் இருந்து வந்தது.
இனி இப்படித்தான்
இதுவரை முதலீடு செய்துவிட்டு பின்னர் ரிசா்வ் வங்கியிடம் தெரிவித்தாலே போதுமானதாக இருந்தது. அதனால் இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகளினால் இனி அனுமதி பெற்றே முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வருகிறது.
இது நல்ல விஷயம் தான்
கொரோனாவினால் நாடு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் புதிய முதலீடுகள் அவசியம் தான் என்றாலும், முழுக்க முழுக்க அண்டை நாடுகளை சார்ந்திருப்பதை குறிப்பாக, சீனாவினை சார்ந்திருப்பதை குறைக்க அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பது வரவேற்க தக்க விஷயமே. இந்த தீர்க்கமான முடிவினை அரசு எடுத்துள்ளது பலரின் பாராட்டினையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.