வலிமையான பொருளாதார அடிப்படை, நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து ஆகியவை இந்த வருடம் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை விடவும் இந்தியா வேகமான வளர்ச்சி அடையும் பொருளாதார நாடாக இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளதாக இந்தியா குளோபல் பிஸ்னஸ் தளம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் 2வது கொரோனா தொற்றுக் காலத்தில் நாட்டின் வர்த்தகச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுக் குறைவான அளவீட்டில் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டது, ஆனால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2021ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் கார்பரேட் வருவாய் 15 - 17 சதவீதம் வரையில் அதிகரிக்கும் எனக் கிரிசில் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றும், லாக்டவுன் அறிவிப்புகள் மூலம் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் பெரிய அளவில் பாதிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்தப் பாதிப்புகளுக்குப் பின்பு இந்தியாவின் வளர்ச்சி வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியப் பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீதமும், 2022ல் 6.9 சதவீதமும் வளர்ச்சி அடையும் என ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் சமீபத்தில் வெளியிட்ட உலகப் பொருளாதார அவுட்லுக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் 2020ல் உலகிலேயே வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் சீனா 2.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், 2021ல் இது 8.6 சதவீதமாகும், 2022ல் 5.6 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என ஐஎம்எப் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் 2021 முடிவில் இந்திய வல்லரசு நாடுகளைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்து உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என இந்தியா குளோபல் பிஸ்னஸ் (India Global Business) தளம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை மற்றும் அதன் மூலம் ஏற்பட்டு வரும் வர்த்தகப் பாதிப்புகள் ஐபிஎம் அறிவித்த அளவீட்டை அடையுமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் வந்துள்ளது. நாட்டின் பல முக்கிய நகரங்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பது புதிய பிரச்சனையாக உள்ளது.