கொரோனா தொற்றில் இருந்து இந்திய சந்தை வேகமாக மீண்டு வரும் நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பண்டிகை காலம் நெருங்கியுள்ள காரணத்தால் அனைத்து துறையிலும் அதிகளவிலான வர்த்தகம் உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 18 மாத உயர்வை அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு சந்தை
இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு சேவை நிறுவனமான டீம்லீஸ் செய்த ஆய்வில் சுமார் 41 சதவீத நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது. இது செப்டம்பர் காலாண்டு ஆய்வின் 38 சதவீத அளவீட்டை விடவும் அதிகமாகும்.

18 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக உயர்வு
இந்த எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் காலாண்டு வாரியா சராசரியாக வெறும் 18 சதவீதமாகவே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு காலாண்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தினமும் கிடைத்து வருகிறது.

650 நிறுவனங்கள்
டீம்லீஸ் நிறுவனம் இந்த ஆய்வை 21 வர்த்தகத் துறையைச் சேர்ந்த சுமார் 650 சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐடி, எப்எம்சிஜி, கல்வி சேவை, ஈகாமர்ஸ், டெக் ஸ்டாடர்ட்அப், டெலிகாம், உற்பத்தி, இன்பரா, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் அடுத்த 3 மாதத்தில் உருவாக உள்ளது.

கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அனைத்து வர்த்தகத் துறையும் வேகமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யதும், மேம்படுத்தியும் வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது.

என்டரி மற்றும் ஜூனியர் பிரிவு
இவை அனைத்திற்கும் மேலாக நடுத்தர மற்றும் உயர் பதவியில் வேலைவாய்ப்புகளைக் காட்டிலும் என்டரி மற்றும் ஜூனியர் பிரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

பெரு நகரங்கள்
மேலும் இந்த ஆய்வில் பங்கு பெற்ற 650 நிறுவனங்களில் பெரு நகரங்களில் இருக்கும் நிறுவனங்களில் 56 சதவீதம் அதிக ஊழியர்களை இந்த டிசம்பர் காலாண்டில் பணியில் சேர்க்க உள்ளதாகவும், 2ஆம் தர நகரங்களில் இதன் எண்ணிக்கை 42 சதவீதமாக உள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகிறது.