இந்தியாவின் முன்னணி ரேட்டிங் ஏஜென்ஸிகளில் ஒன்றான இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் (India Ratings and Research) என்கிற கம்பெனி, இந்தியாவில், 2021 - 22 நிதி ஆண்டில், கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கும் கடன் அளவு 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனக் கணித்து இருக்கிறது.
இந்தியாவில், அதிகம் கடன் வாங்கி கம்பெனியை நடத்தும் (Debt Heavy Company), டாப் 500 கம்பெனிகள் மட்டும் 1.67 லட்சம் கோடி ரூபாயை கூடுதலாக கடன் வாங்குவார்கள் எனவும் கணித்து இருக்கிறது.
கடந்த மார்ச் 2020-ல், மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில், நாடு முழுக்க கடுமையான லாக் டவுனை அறிவித்தது. இந்த லாக் டவுனால், சாதாரண டிரேடிங் கடைகள் தொடங்கி மிகப் பெரிய உற்பத்தி ஆலைகள் வரை எல்லாமே இழுத்து மூட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். மிகப் பெரிய அளவில் வியாபாரங்கள், உற்பத்திகள் மற்றும் சேவைகள் முடங்கின.
தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும், லாக் டவுன் தளர்த்தப்பட்டு இருக்கிறது, இருப்பினும் வியாபாரம் பழைய படி இன்னும் சூடு பிடிக்கவில்லை. சொல்லப் போனால் வழக்கம் போல, நிறுவனங்களாலும் உற்பத்தி ஆலைகளாலும் செயல்படவே முடியவில்லை.
இந்த லட்சணத்தில், தொழில் துறையை மேம்படுத்த மட்டும் கடன் வாங்கி விரிவாக்கம் செய்வார்களா என்ன..? அப்படி செய்தாலும் உற்பத்தி செய்யும் பொருளை வாங்க ஆட்கள் இருக்கிறார்களா..? எனவே, இந்த நிதி ஆண்டில் கடன் வளர்ச்சி சிரமம் தான் என்கிறது இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் கம்பெனி.
எனவே, அடுத்த நிதி ஆண்டான 2021 - 22 நிதி ஆண்டில், ஏற்கனவே கணித்து இருந்த 2.54 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கடன் தொகைகளுடன், இந்த 1.67 லட்சம் கோடி ரூபாயை கூடுதலாக வாங்குவார்கள் எனக் கணித்து இருக்கிறது இந்தியா ரேட்டிங்ஸ் கம்பெனி. ஆக மொத்தம் 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்க இருக்கும் கடன் அளவு 4.21 லட்சம் கோடி ரூபாயைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது.