மும்பை: ஐடி நிறுவனங்கள் பலவும் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் (65%) கிக் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனவாம்.
இது கடந்த 2020ல் 57% ஆக இருந்தது. நிறுவனங்கள் தற்போது செலவினை குறைக்கும் பொருட்டு, கிக் தொழிலாளார்களை ஊக்குவித்து வருகின்றன.
இந்தியாவில் கிக் தொழிலாளார்களை பணியமர்த்துவது அதிகரித்தாலும், மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 5% குறைவாகவே உள்ளது. இது 2000-க்கும் மேற்பட்ட முழு நேர ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்களுக்கு உண்மை என்றும் கூறப்படுகிறது.
சிறு நிறுவனங்களில் அதிகம்
எனினும் சிறு நிறுவனங்களில் (2000 கீழான ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்களில்) 5% அதிகமான கிக் ஊழியர்கள் உள்ளதாக ஆய்வறிக்கையானது சுட்டி காட்டியுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட 15% நிறுவனங்களில் கடந்த ஆண்டுகளில் கிக் தொழிலாளர்களின் விகிதம் 30% அதிகமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கிக் தொழிலாளர்கள் என்றால் என்ன?
அதெல்லாம் சரி, கிக் தொழிலாளர்கள் என்றால் என்ன?
கிக் தொழிலாளர்கள் எந்த விதமான எதிர்கால பாதுகாப்பும் இல்லாமல், வேலை குறித்தான எந்த வித பாதுகாப்பும் இல்லாமல், இருக்கும் வரை வேலை, சம்பளம் என்று இருக்கும் ஊழயர்களை கிக் தொழிலாளர்கள் என்பார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அன்றாடம் காய்ச்சிகள் என்பது போலத் தான். வேலைக்கு சென்றால் சம்பளம். இல்லையெனில் சம்பளம் இல்லை. இவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் பிஎஃப் சலுகை கிடையாது. இன்சூரன்ஸ் கிடையாது. வேறு எந்த விதமான சலுகையும் கிடையாது. இதனால் பல நிறுவனங்களும் கிக் தொழிலாளர்களை அதிகளவில் வைத்துக் கொள்ள விரும்புகின்றன.
கிக் தொழிலாளர்கள் தேவை
இண்டீட் இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியான சஷி குமார், ஆய்வில் தற்போதைய லெவலில் இருந்து 46% நிறுவனங்கள் கிக் தொழிலாளர்களை பணியில் அமர்த்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஐடி துறை
ஐடி துறையில் கிக் பணியாளர்களுக்கு சிறப்பு திறன்களுக்கான தேவை, பணியாளர்களின் தேவை நெகிழ்ச்சி, செலவு ஆகியவற்றினை பொறுத்து தேவை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என கூறப்படுகிறது.
ஐடி துறையினை பொறுத்தவரையில் சாப்ட்வேர் மேம்பாடு, UI/UX வடிவமைப்பு, டேட்டா அனலிடிக்ஸ் உள்ளிட்ட மூன்று துறைகளில் கிக் தொழிலாளர்களின் தேவை அதிகளவில் உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிக் தொழிலாளர்களின் நிலை
தொற்று நோய்க்கு முன்னதாக கிக் தொழிலாளர்கள் பெரும்பாலும் 9 மாதங்கள் வரையிலான திட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டனர். ஆனால் கொரோனாவுக்கு பிறகு கிக் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 25% அதிகமான நிறுவனங்கள், 12 மாதங்களுக்கு மேலான திட்டங்களுக்கும் கிக் தொழிலாளர்களை பணியில் அமர்த்த தயாராக உள்ளனவாம்.
நாஸ்காம் தேவை
இது திறமைக்கான தேவையானது அதிகரித்து வரும் சூழலில், குறுகிய காலத் தேவைகளை பூர்த்தி செய்யவும், கிக் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றனராம்.
இந்திய ஐடி துறையினை பொறுத்தவரையில் கிக் தொழிலாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும், கிக் தொழிலாளார்களின் திறனை உறுதி செய்தல், பாதுகாப்பு சோதனைகள், கட்டமைக்கப்பட்ட கொள்கைகள் இல்லாமை, சரிபார்த்தலில் உள்ள பிரச்சனைகள், ஒழுங்கு முறை வழிகாட்டுதல்கள் இல்லாமை உள்ளிட்ட பலவற்றை பற்றிய தெளிவு இல்லாமையே முக்கிய கவலைகளாக உள்ளன என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் எதிர்காலத்தில் இதுவே ஐடி ஊழியர்களுக்கு போட்டியாக வந்தாலும் வரலாம்...