இந்தியாவில் நாளுக்கு நாள் மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் வேளையில் ஒரு சில விலை குறைப்பு கூட இன்றைய விலைவாசி சூழ்நிலையில் பெரிய நிவாரணத்தை மக்களுக்கு அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியிருக்கையில் ஜப்பான் நாட்டின் முன்னணி மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான Omron தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தனது முதல் இந்திய தொழிற்சாலையை மிகப்பெரிய அளவில் அமைக்க உள்ளது.
ரத்த அழுத்த அளவீட்டை அளவிடும் கருவிகள் முதல் பல முக்கிய மருத்துவ கருவிகளை தயாரிக்கும் ஜப்பான் நாட்டின் Omron நிறுவனம் தமிழ்நாட்டில் சுமார் 130 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் இந்தியாவின் முதல் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வகையில் எவ்விதமான தகவலையும் வெளியிட Omron விரும்பவில்லை என தெரிவித்ததாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
Omron நிறுவனம் ரத்த அழுத்த அளவீட்டை அளவிடும் கருவிகள் மட்டும் அல்லாமல் பல்வேறு எலக்ட்ரிக் கருவிகளையும் சொந்தமாக தயாரிக்க உள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலை மூலம் தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாலும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பணவீக்கம் தணிந்து வருவதாலும் கடந்த மாதம் Omron நிறுவனம் தனது cardiovascular கருவிகளின் விற்பனை மீண்டு வருவதாக கணித்தது. மேலும் சென்னையில் தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக டிவிட்டரில் சென்னை அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பாலும், இளைஞர்கள் மத்தியில் மாறி வரும் லைப்ஸ்டைல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் ரத்த அழுத்த அளவீட்டை அளவிடும் கருவிகளுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் எனவும் கணித்த நிலையில், இந்த சந்தை கைப்பற்ற இந்தியாவில் 130 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
Omron நிறுவனத்தின் ஹெல்த்கேர் கருவிகள் தற்போது ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை அமைப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் இந்த முதலீட்டை உறுதி செய்ய முடியாது, ஆனால் Omron நிறுவனம் குறித்த தகவல் மூலம் புதிய முதலீட்டை ஈர்க்க மெடிக்கல் டெக்னாலஜி என்ற புதிய துறை உருவாகியுள்ளது.
திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு 6 ஜப்பான் உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் சுமார் 819 கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தி தளத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ஜப்பான் பயணத்தை தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.