முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ், இந்தியாவின் முன்னணி வென்சர் கேப்பிடல் நிறுவனமான கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெக் துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது திட்டமிட்டுள்ள 200 மில்லியன் டாலர் தொகையில் முதல் பகுதியாக 100 மில்லியன் டாலரையும், பின்னாளில் மற்றொரு 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாணி கோலா தலைமையிலான கலாரி கேப்பிடல் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் ஸ்னாப்டீல், அர்பன் லேடர், மைந்தரா, ட்ரீம் 11 போன்ற பல்வேறு ஸ்டார்ட்அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனத்தில் செய்த முதலீட்டின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய வென்சர் கேப்பிடல் துறையில் கலாரி கேப்பிடல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கலாரி கேப்பிடல் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணி மூலம் இந்திய டெக் மற்றும் ஸ்டார்ட்அப் சந்தையில் இந்நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தகச் சேவை சந்தையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிலையில் பல புதிய வழிகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.