ஆட்டோமொபைல் துறையினை பொறுத்த வரையில் கொரோனா காரணமாக மிக மோசமான நிலையில் இருந்து, தற்போது தான் உயிர்பெறத் தொடங்கியுள்ளது.
ஏனெனில் கொரோனா காரணமாக ஒரு கட்டத்தில் மாதத்தில் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்தன. ஆன்லைனில் புக்கிங் இருந்தாலும் கூட, டெலிவரி என்பது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தான் சமீபத்திய மாதங்களாக படிப்படியாக மீண்டு வருகின்றன.
மீண்டு வந்து கொண்டு இருக்கும் உற்பத்தி
அதிலும் வாகனத் துறையினர் மத்தியில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் நிச்சயம் தேவையானது அதிகரிக்கும். இதனால் கொரோனா காலத்தில் இழந்த விற்பனையும் கூட, இப்போது சேர்த்து செய்து கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணப்பட்டது. அதோடு லாக்டவுன் கட்டுப்பாடுகளிலும் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரளவுக்கு இத்துறையானது மீண்டு வந்து கொண்டுள்ளது என்றே கூறலாம்.
பிரச்சனைக்கு மேல் பிரச்சனை
ஆனால் தற்போது பிரச்சனை என்பது வேறு ரூபத்தில் வந்துள்ளது. அது மூலதன பொருட்கள் பற்றாக்குறை தான். இதனால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன உற்பத்தியினை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒருபுறம் உற்பத்தி குறைந்துள்ளதால், விழாக்கால பருவ விற்பனையை இது பாதிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது. மற்றொரு புறம் விலையை அதிகரிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி பாதிப்பு
ஏனெனில் மூலதன பொருட்கள் வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் சில நிறுவனங்கள் மீண்டும் விலை அதிகரிப்பினை முன் மொழிந்துள்ளன. இதற்கிடையில் தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஆட்டோமொபைல் சந்தையில் செமி கண்டக்டர்கள் சப்ளை பற்றாக்குறை காரணமாக, அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
7 நாட்கள் மூடல்
அதோடு தனது வாகன உற்பத்தி ஆலையை செப்டம்பர் மாதத்தில் 7 நாட்களுக்கு தற்காலிகமாக மூடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் உற்பத்தி இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த உற்பத்தியில் 20 - 25% பாதிப்பு ஏற்படலாம் என பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை அதிகரிக்குமா?
மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் இந்த நடவடிக்கையால் அதன் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதோடு, அதன் வருவாயிலும் இழப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் நஷ்டத்தினை எப்படி குறைக்கலாம் என மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இதனால் விரைப்வில் மஹிந்திராவின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதன பொருட்கள் பற்றாக்குறை
இந்த செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையானது சர்வதேச அளவில் இருந்து வருகின்றது. இது கடந்த ஒரு வருட காலமாகவே இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து வருகின்றது. இதனால் உற்பத்தியினை குறைக்க வழிவகுக்கிறது. கொரோனா காரணமாக பல நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆலைகள் பலவும் மூடப்பட்டன. இதனால் தேவை அதிகரித்து வரும் இந்த சமயத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி அறிவிப்பு
முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மூலதன பொருட்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் மீண்டும் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளது என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது மகேந்திராவின் அறிவிப்பும் வருகின்றது.
டாடா மோட்டார்ஸ் குறைக்கலாம்
ஜாப்பானிய கார் தயாரிப்பாளர் இந்தியாவில் உள்ள அதன் உற்பத்தியில் 40% குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதே போல மற்றொரு பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் உற்பத்தியினை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகனங்களின் விலை அதிகரிக்கலாம்
மொத்தத்தில் கடந்த ஆண்டு கொரோனாவினால் சரிந்த வணிகம் இந்த ஆண்டில் மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் இருக்கலாம் என்ற கருத்தே நிலவி வருகின்றது. இதனால் மீண்டும் வாகனங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏற்கனவே நடப்பு ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாகன விலை அதிகரித்துள்ள நிலையில், இது இன்னும் விலையை அதிகரிக்க வழிவகுக்கும்.