நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் 2021ல், அதன் உற்பத்தியானது பாதி அளவுக்கும் மேலாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 81,278 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில், 1,66,086 வாகனங்கள் உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உதிரி பாகங்கள் பற்றாக்குறை
மூலதனப் பொருட்களின் பற்றாக்குறையினால் இந்த உற்பத்தி சரிந்து உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மின்சார உதிரிபாகங்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களில் மீண்டும் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் வாகன உற்பத்தி சரிவு
இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ள அறிக்கையில் பயணிகளின் வாகன உற்பத்தி ஆனது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 77,782 யூனிட்டுகள் ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் 2020ல் 1,61,668 யூனிட்டுகள் ஆக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிய ரக கார்கள் உற்பத்தி
இதே சிறிய ரக கார்களான ஆல்டோ, எஸ்- பிரஸ்ஸோ உள்ளிட்ட மாடல்களின் உற்பத்தியானது 17,163 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்திருந்ததாகவும், இது முந்தைய ஆண்டில் 30,492 வாகனங்கள் உற்பத்தி செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே காம்பாக்ட் ரக கார்கள் ஆன செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், டிசையர், பலினோ உள்ளிட்ட வாகனங்களில் உற்பத்தியானது 29,272 யூனிட்டுகள் ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 90,924 யூனிட்டுகள் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பயன்பாட்டு வாகனங்கள் உற்பத்தி
இதே பயன்பாட்டு வாகனங்களான ஜிப்ஸி, எர்டிகா, எஸ் கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் xl6 உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தியானது 21,873 யூனிட்டுகள் ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 26,648 யூனிட்டுகள் ஆக இருந்தது. இதே மாருதி சுசுகியின் ஈகோ வேன் உற்பத்தியானது 8,025 வாகனங்களாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 11,183 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை
இதேபோல லைட் கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்தியானது 3,496 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டில் 4,418 யூனிட்களாகவும் இருந்துள்ளது.
மாருதி சுசுகி அதன் மொத்த உற்பத்தி ஆனது ஆகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 8% குறைந்து 1,13,937 யூனிட்டுகள் சரிவினைக் கண்டிருந்தது. ஆகஸ்ட் 31 அன்று இது குறித்த அறிக்கையில் இதன் ஹரியானா மற்றும் குஜராத் ஆலைகளில் செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும், உற்பத்தி 40% மட்டுமே இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
சுசூகி மோட்டார் குஜராத் சப்ளை
இந்த நிறுவனத்தின் குர்கான் மற்றும் மானேசர் ஆலைகளில் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் அளவு திறன் கொண்டவை. ஆனால் மூலதன பற்றாக்குறை காரணமாக இந்த அளவு உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது. இதுதவிர ஜப்பான் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான சுசுகி மோட்டார் குஜராத், ஆண்டுக்கு 7.5 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த சுசுகி மோட்டார் குஜராத் நிறுவனம், மாருதி சுசுகி நிறுவனத்திற்கு கார்களை தொடர்ந்து சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் பயன்பாடு
செமிகண்டக்டர்கள் மற்றும் சிலிக்கான் சிப் உள்ளிட்டவற்றின் சப்ளை சரிவைக் கண்டுள்ளது. இது மொபைல் போன், கணினிகள் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்களிலும் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆகையால், தேவையானது மிக அதிகம் உள்ளது. எனினும் பற்றாக்குறை காரணமாக இதன் விலையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே மாருதி தனது கார்களின் விலையை நடப்பு ஆண்டில் பலமுறை விலை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
ஒருபுறம் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு வரும் நிலைக்கு மத்தியில், உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியில் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மேற்கொண்டு மூலதன பொருட்கள் பற்றாக்குறையும் இந்த உற்பத்தியினை மோசமாக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கிடையில் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்பது கார் பிரியர்களுக்கு இன்னும் மோசமான செய்தியாகவே உள்ளது.