ஒரு வருடத்தில் 365 நாட்கள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் பிடிப்பு இன்றி முழு சம்பளமும் வழங்கப்படும் என நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவன ஊழியர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட கால அளவை விட அதிக விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சம்பளம் மற்றும் சலுகையுடன் எத்தனை நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என மீஷோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஷோ நிறுவனம்
ஈகாமர்ஸ் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று மீஷோ. இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக புதிய சம்பள விகிதத்துடன் கூடிய விடுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
365 நாட்கள் விடுமுறை
இந்த திட்டத்தின்படி ஒரு ஊழியர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுக்க முடியும். ஆனால் அந்த ஊழியர் தீவிர நோய் காரணமாக சிகிச்சை பெறுவது அல்லது அவரது குடும்பத்தின் நெருக்கமான உறுப்பினருக்கு தொடர் சிகிச்சை செய்வதோ விடுமுறைக்கான காரணமாக இருக்கவேண்டும்.
முழு சம்பளம்
ஊழியர்கள் தங்களுக்கு தீவிரமான நோய் இருந்தால் அந்த நோய் தீரும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்த விடுமுறை காலத்தில் அவருக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊழியர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தீவிர நோய் இருந்தால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஊதியத்தில் 25 சதவீதத்தை மூன்று மாதங்களுக்கு பெற முடியும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காப்பீடு - பிஎஃப் சேமிப்பு
அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கான காப்பீடு, பிஎஃப் சேமிப்பு உள்பட கூடுதல் வசதிகளையும் மீஷோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதியத்துடன் விடுமுறை திட்டம்
எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு இலக்கை வைத்து எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நாங்கள் தரும் ஒரு சின்ன திட்டம் தான் இந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறை என மீஷோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உடல் நலன் முக்கியம்
ஆனால் அதே நேரத்தில் மருத்துவம் அல்லாத காரணங்களுக்கு இந்த விடுமுறை திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தேவையான ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் விடுமுறை எடுத்தால் சம்பளம் போய்விடுமோ என்று அச்சம் காரணமாக தங்களது உடல் நலத்தை சரியாக கவனிக்காமல் இருக்கும் ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல திட்டம் என்றும் மீஷோ தெரிவித்துள்ளது.
யூனிகார்ன் அந்தஸ்து
மீஷோ நிறுவனத்தில் தற்போது 2,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும் இந்த நிறுவனம் சமீபத்தில் 300 மில்லியன் டாலர் திரட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.