சமுக வலைத்தள நிறுவனங்கள் அடுத்தடுத்து மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு வரும் நிலையில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க் இரண்டு வாரத்தில் 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கிடையில் இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களைத் திரும்பவும் பணிக்கு அழைத்துள்ளது டிவிட்டர்.
இந்த நிலையில் சமுக வலைத்தளப் பிரிவில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மெட்டா நிறுவனம்
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் வர்த்தகம் மற்றும் வருவாய் அளவிலான பதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் மெட்டா நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து யூடியூப் மற்றும் டிக்டாக் நிறுவனத்தின் போட்டியால் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவை சந்தித்து வந்தது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்தில் இருக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய 3 முக்கியத் தளத்திலும் வாடிக்கையாளர் சரிவு, வருமான சரிவு பிரச்சனை இருந்த காரணத்தால் மெட்டா பங்குகள் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது.
எச்சரிக்கை
இதைச் சமாளிக்க மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான நிர்வாகம் கடந்த 3 மாதமாகச் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைந்தது மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் 200 சதவீதம் திறனை வெளிப்படுத்துங்கள், இல்லையெனில் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிர்வாகம் இந்த வாரத்தில் மாஸ் லேஃஆப் அதாவது அதிகப்படியான ஊழியர்களை ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ் லேஃஆப்
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் எடுத்த நடவடிக்கையைத் தற்போது மெட்டா நிறுவனத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் எடுக்க உள்ளார். தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி புதன்கிழமைக்குள் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
87000 ஊழியர்கள்
செப்டம்பர் 30ஆம் தேதி தரவுகள் படி மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய தளத்தில் மொத்தமாகச் சுமார் 87000 ஊழியர்கள் உலகளவில் பணியாற்றி வருகின்றனர்.
காலாண்டு முடிவுகள்
மெட்டா தனது மோசமான 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட மார்க் ஜூக்கர்பெர்க் 2023ல் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் திட்டம் இல்லை என அறிவித்தார், மெட்டா நிறுவனத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணிகளை மொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
அமெரிக்காவில் கடந்த 6 மாதத்தில் மைக்ரோசாப்ட் முதல் மெட்டா வரையில் கணிசமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், Stripe, Lyft, டிவிட்டர் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மெட்டா அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் (Mass Layoff) செய்ய முடிவு செய்துள்ளது.
அஜித் மோகன்
மெட்டா நிறுவனத்தின் இந்திய கிளை-யின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாகச் சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அஜித் மோகன் இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் எனப் படு தீவிரமாக இருக்கும் மெட்டா-வின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க்-ல் சேர உள்ளார்.