முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த நிதியாண்டில் 15க்கும் அதிகமாக அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், பேஸ்புக்- கூகுள் - மைக்ரோசாப்ட் போன்ற பெரும் டெக் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 3,24,432 கோடி ரூபாய் அளவிலான தொகையை ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனப் பங்கு விற்பனை மூலம் முதலீடாகப் பெற்றது.
இதன் மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மார்ச் 2021ஆம் ஆண்டுக்கு முன்பாகவே கடனில்லா நிறுவனமாக மாறியதாகவும், இந்தியாவில் இதுவரை யாரும் 3.24 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்தது இல்லை என ரிலையன்ஸ் குழும சாதனைகளை 44வது வருடாந்திர கூட்டத்தில் பட்டியலிடத் துவங்கினார்.
ஜியோ பிளாட்பார்ம்ஸ்
2020-21ஆம் நிதியாண்டில் 86,493 கோடி ரூபாய் தொகையை மொத்த வருமானமாகப் பெற்ற ஜியோ பிளாட்பார்ம்ஸ், இக்காலகட்டத்தில் 425 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 22 டெலிகாம் வட்டங்களில் 19 வட்டத்தில் ஜியோ வருமான ஆதிக்கம் செலுத்துகிறது.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாகவும், 2வது இடத்தில் இருக்கும் நிறுவனத்தை விடவும் சுமார் 6 மடங்கு பெரிய நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ரீடைல். 2020-21ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 1,53,818 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
கச்சா எண்ணெய் வர்த்தகம்
2020 கொரோனா தொற்றுக் காலத்தில் பல பிரச்சனைகள், வர்த்தகப் பாதிப்புகள் இருந்தாலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுவீச்சில் இயங்கியது. இதன் மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் இப்பிரிவு வர்த்தகம் மட்டும் சுமார் 3,20,008 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
சவுதி ஆராம்கோ
முகேஷ் அம்பானி முதல் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விற்பனை செய்யவே திட்டமிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுப் போகவே, இந்த வருடத்தின் இறுதிக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - சவுதி ஆராம்கோ உடனான டீல் முடிவு பெறும் என அறிவித்துள்ளார் முகேஷ்.
நிர்வாக அதிகாரி மாற்றம்
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் திரிபாதி ஓய்வு பெறும் நிலையில், இந்த இடத்தில் சவுதி ஆரம்கோ நிறுவனத்தின் தலைவரான யாசிர் அல் ருமாயான் இடம்பெறுகிறார். இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - சவுதி ஆராம்கோ டீல் விரைவில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.