நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு (MSME) நிறைய புதிய அறிவிப்புகளைச் செய்தார்.
Recommended Video
அதிலும் குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களின் வரையறைகளை மாற்றி அமைத்து, நிறைய தொழில்முனைவோர்கள், அரசின் தொழில் துறை சார்ந்த நலத் திட்டங்களை அடைய வழிவகுத்து இருக்கிறார்.
நேற்றைக்குப் போலவே இன்றும் நிதி அமைச்சர் மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில், முக்கிய அறிவிப்புகளைச் செய்து இருக்கிறார். நிதி அமைச்சரின் முக்கிய அறிவிப்புகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
யாருக்கு இன்று
நேற்று அதிக அளவில் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான (MSME) அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இன்று புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் (தெரு வியாபாரிகள்) மற்றும் சிறு விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
விவசாயிகள் கடன்
விவசாயிகள் வாங்கி இருக்கும் கடன்களுக்கான மானியம் மே31, 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள். 25 லட்சம் கிசான் க்ரெடிட் கார்ட்கள் (KCC - Kisan Credit Card) வழியாக 25,000 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம்.
கடன் கணக்கு
கடந்த மார்ச் 01 முதல் ஏப்ரல் 30 வரை மட்டும், சுமாராக 63 லட்சம் கடன்கள் வழங்கி இருக்கிறார்களாம். மொத்தம் 86,600 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகள் வழியாக சுமார் 29,500 கோடி ரூபாய் கடன் ரீஃபைனான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறதாம்.
கடன் தவனை ஒத்திவைப்பு
அதோடு சுமாராக 3 கோடி விவசாயிகளின் 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கான தவணைகள் 3 மாதம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.25 லட்சம், புதிய கிசான் க்ரெடிட் கார்ட்கள் மூலம் 25,000 கோடி கடன் கொடுத்திருக்கிறார்களாம்.
புலம் பெயர் தொழிலாளர்கள்
தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் மக்களை பாதுகாக்க, மாநில அரசுக்கு, மத்திய அரசு 11,000 கோடி ரூபாயை கொடுத்து இருக்கிறார்களாம். இதை வைத்து புலம் பெயர் தொழிலாளர்களை தங்க வைப்பது, உணவு, தண்ணீர் போன்ற செலவுகளைச் செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார்களாம்.
3 வேளை உணவு
புலம் பெயர் தொழிலாளர்கள், நகர் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு shelter home-ல் மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறதாம். மத்திய அரசுக்கு புலம் பெயர் தொழிலாலர்களைப் பற்றி அக்கறை இருக்கிறது. அரசு தொடர்ந்து அவர்களின் நன்மைக்காக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.
சுய உதவி குழு
இந்த நெருக்கடியான கொரோனா காலத்திலும், மார்ச் 15, 2020-ல் இருந்து, நகர் புற ஏழைகளுக்கு, சுமாராக 7,200 சுய உதவிக் குழுக்களை (Self Help Group) அமைத்து இருக்கிறார்களாம். சுமார் 12,000 சுய உதவிக் குழுக்கள் வழியாக 3 கோடி மாஸ்குகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
இந்தியா முழுக்க இருக்கும் 1.87 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வழியாக 2.33 கோடி நபர்களை சேர்த்து இருக்கிறார்களாம். குறிப்பாக இந்த திட்டத்தின் வழியாக புலம் பெயர் தொழிலாளர்கள், அதிகம் பயனடைந்து இருக்கிறார்களாம்.
தொழிலாளர் சட்டம்
இந்தியா முழுக்க, தொழிலாளர்களுக்கு ஒரே அளவுக்கு கூலி கொடுக்கும் விதத்தில் மத்திய அரசு வேலை பார்த்து வருகிறதாம். அதே போல ஒரு தொழிலாளரை வேலைக்கு எடுத்தால் அவருக்கு பணி நியமனக் கடிதம் (Appointment Letter) வழங்குவது, ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதை கட்டாயம் ஆக்கப் போகிறார்களாம். பெண்கள் இரவு ஷிஃப்ட் பணி செய்யவும் வழி வகை செய்யப்படுகிறதாம்.
ESI வசதி
தற்போது ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இ எஸ் ஐ சி வசதிகளை, அனைத்து சிறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில், 100 ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் கம்பெனிகளுக்கும் இ எஸ் ஐ நீட்டிக்க இருக்கிறார்களாம்.
10 ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் சிறு சிறுவனங்களில் அதை voluntary- ஆக இருக்குமாம்.
உணவு தானியம்
அடுத்த 2 மாதங்களுக்கு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க இருக்கிறார்களாம். ரேஷன் அட்டை இல்லாத புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை + 1 கிலோ பருப்பு வழங்கப்படுமாம். இதனால் 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுவார்களாம். மத்திய அரசு 3,500 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறதாம்.
ஒரே தேசம் ஒரே ரேஷன்
இந்தியாவின் மொத்த ரேஷன் அட்டை பயனர்களில் 83 சதவிகிதம் பேர், அதாவது 67 கோடி ரேஷன் அட்டை பயனர்கள், நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கான பொருட்களை வாங்கிக் கொள்Laலாமாம். வரும் மார்ச் 2021-க்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.
வாடகை வீடு திட்டம்
புலம் பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்கும், நகர் புற ஏழைகளுக்கும் குறைவான வாடகையில் தங்குவதற்கான வசதிகளை, PM Awas Yojana வழியாக, செய்ய இருக்கிறார்களாம். உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழில் துறையினர்கள், தங்கள் சொந்த நிலத்திலேயே மலிவு விலை வீடுகளைக் கட்ட அரசு ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
பி பி பி மாடல்
மெட்ரோ நகரங்களில் காலியாக இருக்கும் கட்டடங்களை வீடுகளாக மாற்ற ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். Public Private Partnership மூலம் இந்த வேலைகளைச் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதைப் பற்றிய விவரங்கள் பின்னே விரிவாக அமைச்சகத்திடம் இருந்து வரும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
கடன் மானியம்
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிசு கடன் (50,000 ரூபாய்க்குள் கடன்) வாங்கி இருப்பவர்களுக்கும் 2 % வட்டி மானியம் நீட்டித்து இருக்கிறார்கள். இதனால் சுமார் 3 கோடி பேர் பயன் பெறுவார்களாம்.
தெரு வியாபாரிகளுக்கு
சாலையில் கடை போட்டு வாழும் தெருக்கடை வியாபாரிகளுக்கு, கையில் பணம் புலங்க வேண்டும் என்பதற்காக, 50 லட்சம் தெருக்கடை வியாபாரிகளுக்கு 5,000 கோடி ரூபாய் சிறப்புக் கடன் திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்கள். இதனால் ஒரு தெருக் கடை வியாபாரிக்கு 10,000 ரூபாய் வரை கடன் கிடைக்குமாம்.
மாத சம்பளதாரர்களுக்கு
ஆண்டுக்கு 6 - 18 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு, கடந்த மே 2017-ல் credit linked subsidy scheme அறிவித்தது மத்திய அரசு. அது மார்ச் 31, 2020 வரை தான் இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் மார்ச் 31, 2021 வரை நீட்டித்து இருக்கிறார்கள். இதனால் வீடுகள் வாங்குவது அதிகரிக்கும். வீடு கட்டத் தேவையான சிமெண்ட், ஸ்டீல் போன்ற வியாபாரமும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் நிதி அமைச்சர்.
மலைவாழ் மக்களுக்கு
6,000 கோடி ரூபாய் CAMPA நிதி மலை வாழ் மக்கள் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு கிடைக்கச் செய்ய இருக்கிறார்களாம். இதனால் மலைவாழ் மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
30,000 கோடி
3 கோடி சிறு விவசாயிகள் பயன்பெறும் விதத்தில், நபார்ட் வங்கி வழியாக 30,000 கோடி ரூபாயை கூடுதலாகக் கொடுக்க இருக்கிறார்களாம். இது ராபி அறுவடைக்கும், அதற்குப் பின் கரிப் பயிர்களை, பயிரிடவும் உதவியாக இருக்கும் என்கிறது அரசு தரப்பு. மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகள் இந்த வேலையில் இறங்குவார்களாம்.
2 லட்சம் கோடி
2.5 கோடி விவசாயிகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் குறைந்த வட்டிக் கடன் (Concessional Credit) கொடுக்க இருக்கிறார்களாம். மீனவர்கள் மற்றும் விலங்கினங்களை வளர்ப்பவர்களுக்கும் இதில் பயன் பெறுவார்களாம். அரசின் பல்வேறு கடன் வசதிகளைப் பெற, விவசாயிகளை அதிகம் கிஷான் க்ரெடிட் கார்டில் பதிவு செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.