10 வருடத்தில் மோசமான பொருளாதார வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், சிறு குறு வர்த்தகங்கள் தொடர் மூடல், கடுமையான வரி விதிப்பு, அன்னிய முதலீட்டில் நிலையற்ற தன்மை, மோசமான வர்த்தக வளர்ச்சியால் வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்பு, பல முன்னணி நிறுவனங்கள் வர்த்தகச் சிக்கலில் தவிப்பு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழ்நிலை இல்லாமல் தவிப்பு, தனிநபர் வருமானத்தில் சரிவு, தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்வு, ஏழைகள் கண்ணீர், இவை அனைத்தையும் விட்டுவிட்டுக் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வருகிறது மத்திய அரசு.
இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் பொருளாதார ஜீனியஸ்-ம் நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
வரி வசூல் பற்றாக்குறை
இந்தியாவின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் இலக்கிற்குச் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பற்றாக்குறை இருப்பதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதனால் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபருக்குப் பயன் அளிக்கும் வகையில் வருமான வரிக் குறைப்பு எதுவும் இருக்காது. இதற்கான வாய்ப்புகளும் இல்லை எனப் பொருளாதார வல்லுனர்களும், வர்த்தகச் சந்தை வல்லுனர்களும் தெரிவித்து வருகின்றனர்.
2 லட்சம் கோடி ரூபாய்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி 2020 நிதியாண்டின் இலக்கில் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி வசூலில் 1.5 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையும், மோசமான பொருளாதாரத்தால் ஜிஎஸ்டி வரி வசூலில் 50000 கோடி ரூபாய் அளவிலான வரி வசூல் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
கார்பரேட் வரி
கடந்த செப்டம்பர் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியைக் குறைத்தது. இதேபோல் தனிநபருக்கான வருமான வரி அளவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வரி வசூல் இலக்கில் பின்னடைவு, பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொய்வு ஆகியவை வரி குறைப்புக்கு இடம் அளிக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
28 வருட வரலாறு
கடந்த 28 வருடத்தில் நடக்காத வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகச் சுமார் 10 சதவீதம் கார்பரேட் வரியைக் குறைத்தது. இதனால் மத்திய அரசுக்கு சுமார் 1.45 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
30 சதவீதம் இருந்த கார்ப்பரேட் வரியை 22 சதவிதாமாகவும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு இருந்து 25 சதவீத வரியை 15 சதவீதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார்.