மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள கொலாபாவில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளஸ் வரை செல்லும் மெட்ரோ திட்டத்துக்கு தடை விதித்தார்.
ஆரே என்ற பகுதியை சேர்ந்த ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் இந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதால் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒருபுறம் ஆதரவு இன்னொருபுறம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மெட்ரோ பாதை
மும்பை கொலாபாவில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளஸ் வரை பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்லும் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்காக மும்பையின் நுரையீரல் என்று கருதப்படும் ஆரே பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராடினர்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த பிரச்சனை உச்சநீதிமன்றம் சென்ற போது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான மரங்களை வெட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு தேவையான மரங்கள் வெட்டப்படும் பணிகள் தொடங்கிய போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அதன்பின் இந்த திட்டத்தின் பணிகளுக்கு அவர் அதிரடியாக தடை விதித்தார்.
மீண்டும் ஆட்சிமாற்றம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர் இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க முதல்வர் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இந்த திட்டம் மீண்டும் தீவிரம் அடைந்திருப்பதாகவும், மரங்களை வெட்டும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரங்களை வெட்ட வில்லை
ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தற்போதைய மாநில அரசு உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டவில்லை என்றும் மரங்களின் கிளைகளைத்தான் வெட்டி வருகிறோம் என்றும் அது மட்டுமின்றி புதர்கள், புல்கள் போன்றவற்றை மட்டுமே வெட்டி வருவதாகவும் மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.
இரவோடு இரவாக மூடப்பட்ட சாலை
இந்த நிலையில் மரம் வெட்டும் பணிகள் நடந்தபோது ஆரே செல்லும் சாலை இரவோடு இரவாக மூடப்பட்டதாகவும், போலீசார் மற்றும் மரம் வெட்டுபவர்கள் செல்தற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
இதுகுறித்து மும்பை மெட்ரோ வொர்க் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்தபோது, 'மரங்களை வெட்டும் போது மக்களின் போராட்டம் அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சாலையை மூடியதாகவும், எந்தெந்த மரங்களை வெட்ட வேண்டும் என்பது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் அடையாளம் கண்டு தேவையான மரங்களை நீதிமன்ற அனுமதி பெற்று வெட்டப்பட்டதாகவும், அதிலும் முழு மரங்களை வெட்ட வில்லை என்றும் மரங்களின் கிளைகள் மட்டுமே வெட்டப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்தபோது, 'அடுத்த விசாரணை நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை எந்த வகையிலும் மரங்களை வெட்டக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆரே வனப்பகுதி
மும்பையின் நுரையீரல் என்று கூறப்படும் ஆரே வனப்பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா (SGNP) உள்ளது என்பதும், இதன் அருகில் உள்ள ஆரே பால் காலனி, உலகின் மிகச்சிறந்த ஒரு வகையான நகர்ப்புற காடு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமார் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியில் 27க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன என்றும், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்கு இனங்கள் இந்த வனப்பகுதியில் வாழ்கின்றன என்றும் கூறப்படுகிறது.