கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து தடுமாற்றம் அடைந்துவந்த நிலையில் கொரோனாவின் 2வது அலையில் இந்தியா முதல் ஜப்பான் வரையில் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதேபோல் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் காரணத்தால் அதிகளவிலான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை என்பது பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாட்டில் கச்சா எண்ணெய் தேவை குறையும் இச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். இதனாலேயே தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.28 சதவீதம் சரிந்து 59.62 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.4 சதவீதம் சரிந்து 62.94 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் 2020ல் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பை ஈடு செய்ய உலக நாடுகள் வேகமான வளர்ச்சிப் பாதையில் இருக்கும் போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை அதிகளவில் உயர்த்தியது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்தும் உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகின் 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக விளங்கும் இந்தியா அரபு நாடுகளிடம் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்து விட்டு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்தது. இந்தியா அரபு நாடுகளிடம் செய்யும் வர்த்தகத்தை இழந்தால் குறுகிய காலம் மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்த OPEC அமைப்பு நாடுகள் மே முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்குச் சுமார் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைத் தினமும் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?