இந்தியாவில் கிரிப்டோகரன்சியில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வரும் நிலையில், இந்திய அரசு இதைத் தடை செய்ய முடியாத நிலையில் ஒழுங்கு முறைப்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான் கிரிப்டோகரன்சியில் அதிகப்படியான கருப்புப் பணம் குவியும் காரணத்தாலும், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை உருவாக்க முடியாத காரணத்தாலும் தடை செய்ய முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் அனைத்து கிரிப்டோகரன்சிகளின் பயன்பாட்டையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது, புதன்கிழமை சிந்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் கரன்சி
டிஜிட்டல் கரன்சிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சிந்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அனைத்து கிரிப்டோகரன்சிகளையும் பயன்படுத்துவதைத் தடை செய்ய ஸ்டேட் பாங்க் ஆ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகப் பாகிஸ்தான் நாட்டின் சாமா டிவி தெரிவித்துள்ளது.
கருப்பு பண முதலைகள்
கிரிப்டோகரன்சிகளின் வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் விதிகள் இல்லாததால் பாகிஸ்தானில் கிரிப்டோகரன்சிகளின் மீது கருப்பு பண முதலைகளின் ஆதிக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிந்து உயர் நீதிமன்றம்
அக்டோபர் 20 அன்று, சிந்து உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துமாறு மத்திய அரசிடம் கூறியது. கிரிப்டோகரன்சிகளின் சட்டப்பூர்வ நிலையைத் தீர்மானிக்க மத்திய நிதித்துறைச் செயலர் தலைமையில் ஒரு குழுவை அமைக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி
சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கிரிப்டோகரன்சி மோசடி செய்துள்ளதாகக் கிரிப்டோகரன்சி பரிமாற்றமான நிறுவனத்திற்குப் பினான்ஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5 கோடி டாலர் முதலீடு
பாகிஸ்தான் நாட்டு மக்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 5 கோடி அமெரிக்க டாலர் அளவிலான தொகையைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இந்த 5 கோடி டாலர் முதலீட்டை சுமார் 1064 பேர் 2923 பரிவர்த்தனைகளில் தனியார் வங்கி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் தளங்கள் வாயிலாக முதலீட்டு செய்யப்பட்டு உள்ளது.