இந்திய வர்த்தகச் சந்தை கொரோனாவால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், மொத்த வர்த்தகச் சந்தையும் புரட்டிப்போடக் கூடிய அளவிற்குத் தீபாவளி பண்டிகை காலத்தில் வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் உள்ளூர் வியாபாரிகளை மகிழ்ச்சியூட்டும் வகையில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் பயத்தின் காரணமாக இந்திய மக்கள் இந்தத் தீபாவளி பண்டிகை காலத்தில் பெரிய கடைகளுக்கும், மால்களுக்கும் செல்ல விரும்ப மாட்டார்கள், காரணம் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும் என்பதை உணர்ந்து வருகிறார்கள் மக்கள்.
இதேபோல் இந்தியாவில் பல மாநிலங்களில் தீபாவளி ஷாப்பிங் அடித்துத் தூள் கிளப்பி வரும் வேளையில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தத் தீபாவளி பண்டிகையின் போது உள்ளூரில் இருக்கும் கடைகளுக்கு எந்த வருடமும் இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகம் இந்த வருடம் கிடைக்கும் என மக்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகிறது.
66 சதவீத மக்கள்
தீபாவளி ஷாப்பிங் குறித்து நாடு முழுவதும் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரு நகரங்கள் முதல் கிராம மக்கள் வரையில் சுமார் 16,000 பேர் கலந்துகொண்டு தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ள ஆய்வறிக்கையில் சுமார் 66 சதவீதம் பேர் இந்த வருடத் தீபாவளி பண்டிகைக்கு உள்ளூரில் இருக்கும் கடைகளுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
மால் மற்றும் மார்கெட்
மேலும் 20 சதவீதம் பேர் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் பெரிய மார்கெட் பகுதிகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதேபோல் 14 சதவீதம் பேர் தீபாவளி ஷாப்பிங்கிற்காக மால்களுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
பெரு நகரங்களில் இருக்கும் மால்கள் தற்போது வாடிக்கையாளர்களின் வருகைக்காகப் பல முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
ஜாக்பாட்
பொதுவாகத் தீபாவளி பண்டிகை காலத்தில் பெரிய கடைகளில் தள்ளுபடி அதிகமாக அளிக்கப்படும் காரணத்தால் மக்கள் கூட்டம் பெரிய கடைகளில் அதிகமாக இருக்கும், ஆனால் இந்த முறை கொரோனா பயத்தால் மக்கள் பெரிய கடைகளை விடுத்து சிறிய கடைகளை நாடி செல்ல துவங்கியுள்ளனர்.
இதனால் இந்த ஆண்டு உள்ளூர் கடைகளில் அதிகளவிலான வர்த்தகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்
இதேபோல் இந்த ஆய்வில் பெரும்பாலானோர் ஆன்லைன் ஷாப்பிங்-ஐ முக்கிய இலக்காக வைத்துள்ளனர். கடைகளில் பிடித்த பொருட்களைக் கிடைக்காத போது ஆன்லைன் ஷாப்பிங்-ஐ முக்கிய இலக்காக அனைவருக்கும் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் நாடு முழுவதும் டெலிவரி செய்யும் அளவிற்குச் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
16,000 பேர்
இந்த ஆயவில் பங்குபெற்ற 16,000 பேரில் 61 சதவீத மக்கள் பெரு நகரங்களையும், 27 சதவீதம் பேர் 2ஆம் தர நகரங்களையும், 12 சதவீதம் பேர் 3ஆம், 4ஆம் தர நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் 65 சதவீதம் பேர் ஆண்கள். 35 சதவீதம் பேர் பெண்கள்.