ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியான, அடுத்த நிமிடத்தில் பங்குச்சந்தை அதானி நிறுவன பங்குகள் கூடுதலாகச் சரிய துவங்கியது.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தனது FPO விலையைக் காட்டிலும் மோசமான சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் பணத்தைக் காப்பாற்றவும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றவும் FPO திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துப் பணத்தைத் திரும்பவும் முதலீட்டாளர்களுக்கே அளிக்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் கிரெடிட் சுசி ஏஜி நிறுவனம் தனது தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மார்ஜின் லோன் வழங்குவதற்கு அதானி குரூப் நிறுவனங்களின் பத்திரங்களைக் கோலேட்ரல் ஆகப் பெறுவதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்களைச் சேகரிக்கத் துவங்கியது.
அதானி குழுமம்
அதானி குழுமம் குறித்து ஜனவரி 24 ஆம் தேதி அமெரிக்காவின் ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, செபி கடந்த ஒரு வருடத்தில் அதானி குழுமம் செய்த அனைத்து ஒப்பந்தங்களையும், ஆய்வு செய்ததாக அறிவித்தது.
ரிசர்வ் வங்கி
இதைத் தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகள்
இதன் மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவில் எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடனை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளது என்பது குறித்த தகவல்களைச் சேகரிக்க உள்ளது. இந்த நடவடிக்கை ஹிண்டன்பர்க் அறிக்கை, செபி அறிவிப்பு, கிரெடிட் சூசி முடிவு ஆகியவற்றுக்குப் பின்பு எடுக்கப்பட்டு உள்ளதால் அதானி குழும பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளது.
ஐடிஎப்சி வங்கி
மேலும் ஐடிஎப்சி வங்கி அதானி குழுமத்தின் பேமெண்ட்கள் குறித்த நாளுக்கு வருவதாகவும், தனது மொத்த non-funded நிலுவையில் 0.51 சதவீதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களைச் சார்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
FPO ரத்து
கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் நிர்வாகம் அதன் FPO திட்டத்தில் முழுப் பங்குகளுக்கு முதலீட்டை பெற்ற நிலையிலும் FPO-வை ரத்துச் செய்ய முடிவு எடுத்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறது.
முதலீட்டாளர்கள் நலன்
அதானி குழும நிர்வாகம் குழு, எப்போதும் இல்லாத சூழ்நிலையில், தற்போதைய சந்தை ஏற்ற இறக்கத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுடைய முதலீட்டுச் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் FPO-வை ரத்து செய்து FPO முதலீட்டாளர்களுக்குத் தங்களது முதலீட்டுப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
FPO குறித்து கௌதம் அதானி
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தனது நிறுவன முதலீட்டாளர்களிடம், தற்போதைய சந்தை நிலவரப்படி 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO ஏற்றுக்கொள்வது தார்மீக ரீதியாகச் சரியானதாக இருக்காது எனத் தெரிவித்தார்.
அதானி குழும பங்குகள்
அதானி எண்டர்பிரைசஸ் - 7.08 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 1.07 சதவீதம் சரிவு
அதானி பவர் - 4.98 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 10.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 1.05 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 6.52 சதவீதம் உயர்வு
NDTV - 4.99 சதவீதம் சரிவு