இந்த ஜூன் 2020 காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இந்த மிகப் பெரிய பொருளாதார சரிவு ஏதோ கடந்த சில மாதங்களில் நிகழவில்லை என பொது வெளியில் விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 2019 - 20 நிதி ஆண்டிலேயே, இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதை இப்போது ஆர்பிஐ தரவுகளும் உறுதி செய்கின்றன.
ஆர்பிஐ அப்படி என்ன தரவுகளைச் சொன்னது? எந்த துறை எவ்வளவு வளர்ச்சி அல்லது வீழ்ச்சி கண்டு இருக்கிறது என விரிவாகப் பார்ப்போம்.
தரவுகள்
ஆர்பிஐ Performance of Listed Non-Government Non-Financial Companies - Sector wise என ஒரு தரவை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும், அரசு அல்லாத, நிதி நிறுவனங்கள் அல்லாத, 3,064 கம்பெனிகளின் விற்பனை, செலவுகள் என பல விவரங்களை, கம்பெனிகளின் நிதி நிலை அறிக்கைகளில் இருந்து, ஆர்பிஐ எடுத்துக் கையாண்டு இருக்கிறது. எனவே, இவைகள் கம்பெனிகளின் தரவுகள் எனலாம். அதை ஆர்பிஐ ஒருங்கிணைத்து ஒரு ஒப்பீடைச் செய்து இருக்கிறது.
உற்பத்தித் துறை
கடந்த 2018 - 19 நிதி ஆண்டை விட, 2019 - 20 நிதி ஆண்டில், உற்பத்திக் கம்பெனிகளின் விற்பனை 7.4 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது. மூலப் பொருட்கள், ஊழியர்கள் மற்றும் எரிபொருள் போன்றவைகளுக்குச் செய்த செலவுகள் கூட 7.6 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
சேவைத் துறை (ஐடி அல்லாத கம்பெனிகள்)
இந்த சேவைத் துறை சார் கம்பெனிகளில் விற்பனை 2018 - 19 நிதி ஆண்டை விட 2019 - 20 நிதி ஆண்டில் 6.9 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது. 2018 - 19-ல் 11.3 % அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மூலப் பொருட்கள், ஊழியர்கள் செலவு, எரிபொருள் போன்றவைகளுக்கான செலவுகள் 0.2 % மட்டுமே அதிகரித்து இருக்கின்றன. கடந்த 2018 - 19-ல் 16.1 % அதிகரித்து இருந்தது.
ஐடி கம்பெனிகள் - சேவைத் துறை
ஐடி சார்ந்த சேவைகளைச் செய்யும் கம்பெனிகளின் விற்பனை, 2018 - 19 நிதி ஆண்டை விட 2019 - 20 நிதி ஆண்டில் 8.4 % அதிகரித்து இருக்கிறது. 2018 - 19-ல் 16.2 % அதிகரித்தது. ஐடி கம்பெனிகளில் ஊழியர்கள் செலவு 11.8 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இது 2018 - 19 நிதி ஆண்டில் இருந்த 11.7 % வளர்ச்சியை விட 0.1 % அதிகம். ஆக 2019 - 20 நிதி ஆண்டிலேயே பொருளாதாரம் தடுமாறத் தொடங்கி இருப்பதை இந்த தரவுகள் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
எது முக்கியம்
2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் உற்பத்தி கம்பெனிகளின் விற்பனை 25.89 லட்சம் கோடி ரூபாய். ஆனால் சேவைத் துறையின் (ஐடி அல்லாத கம்பெனிகள்) விற்பனை 3.87 லட்சம் கோடி ரூபாய். ஐடி சேவை கம்பெனிகளின் விற்பனை 3.96 லட்சம் கோடி ரூபாய். ஆக இந்தியாவில் உற்பத்தித் துறை மேம்படுவது மிகவும் அவசியமாகிறது.
மக்கள் கையில் பணம்
அதே போல 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் உற்பத்தி கம்பெனிகள் ஊழியர்களுக்கு செலவழித்தது 1.70 லட்சம் கோடி ரூபாய். ஆனால் சேவைத் துறையினர் (ஐடி அல்லாத கம்பெனிகள்) 32,603 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். ஐடி சேவை கம்பெனிகள் 1.93 லட்சம் கோடி ரூபாயை ஊழியர்களுக்கு செலவழித்து இருக்கிறார்கள்.
நிறைய ஊழியர்கள் எண்ணிக்கை
ஐடி துறையில் ஒரு தனி நபரின் சம்பளம் அதிகம். ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால் உற்பத்தித் துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம், பெரிய சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே உற்பத்தித் துறை சார்ந்த வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரித்தால் தான் இந்திய பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரித்து மீண்டும் பொருளாதாரம் பழைய நிலைக்கு வரும்.