இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் வளர்ச்சிக்குத் துவக்க புள்ளியாக இருந்த பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் பன்சால், தற்போது இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் நிதித்துறையில் மிகப்பெரிய அளவில் கவனத்தைச் செலுத்தி வருகிறார். பிளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்க ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கைப்பற்றிய நிலையில் சச்சின் பன்சால் தன்னிடம் இருந்து பிளிப்கார்ட் பங்குகளை முழுமையாக விற்பனை செய்துவிட்டு மொத்தமாக வெளியேறினார்.
இந்தப் பணத்தைத் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாலும், அவரது முக்கியமான இலக்கு நிதித்துறை தான்.
நாவி டெக்னாலஜிஸ்
சச்சின் பன்சால் உருவாக்கிய நிதியியல் சேவை நிறுவனமான நாவி டெக்னாலஜிஸ் தற்போது யுனிவெர்சல் பேங்க்கிங் உரிமத்திற்காக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில் சச்சின் பான்சால் சுமார் 400 முதல் 450 மில்லியன் டாலர் அளவிலான தொகையைத் தனது நாவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார். இந்நிறுவனத்தில் சச்சின் பன்சால் செய்யும் மிகப்பெரிய முதலீடு இது என்பதால் ஸ்டார்ட்அப் மற்றும் நிதித்துறை மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது நாவி டெக்னாலஜிஸ்.
சச்சின் பன்சால்
இதுகுறித்து சச்சின் பன்சால் கூறுகையில், அடுத்த சில நாட்கள் அல்லது வாரத்தில் என்னுடைய மொத்த பணத்தையும் முதலீடாகச் செய்யப்போகிறேன் எனச் சச்சின் பன்சால் தெரிவித்துள்ளார்.
100 கோடி ரூபாய் டீல்
சச்சின் பன்சால் யாரும் எதிர்பார்க்காத வகையில், DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை 100 கோடி ரூபாய்க்கு முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த 4 மாதத்தில் சச்சின் பன்சால் செய்ய 2வது அதிரடி முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி துறையில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறும் சச்சின் இப்பிரச்சனைகளை டெக்னாலஜி வாயிலாகத் தீர்வு காண வேண்டும் என்று திட்டமிட்டு இத்துறையில் இறங்கியுள்ளார்.
DHFL ஜெனரல் இன்சூரன்ஸ்
வாதவான் குளோபல் கேப்பிடல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சச்சின் பன்சால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய போது உருவாக்கிய முதலீட்டு நிறுவனமான நாவி டெக்னாலஜி நிறுவனத்தின் வாயிலாக இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளார் சச்சின் பன்சால்.
இந்த விற்பனையின் மூலம் DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் சச்சின் பன்சால் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இரு நிறுவனங்கள்
தற்போது சச்சின் பன்சால் தலைமையிலான நாவி டெக்னாலஜிஸ் DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ESSEL மியூச்சுவல் பண்ட் ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றுப் பணியில் தீவிரமாக இருக்கிறது. இந்தப் பணிகளை முடிந்த பின்பு இந்நிறுவனத்தின் மூலம் இன்சூரன்ஸ் மற்றும் asset management சேவைகளை இந்நிறுவனம் அளிக்க உள்ளது.
ஸ்டார்ட்அப் முதலீடுகள்
சச்சின் பன்சால் தலைமையில் நாவி டெக்னாலஜிஸ் Kissht என்கிற NBFC நிறுவனத்திலும், வோகோ, பவுன்ஸ், கிரேஸிபீ, ஆல்டிகோ கேபிடல், கிரிட்ஸ் என 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.
அதில் மிக முக்கியமானது கிரிட்ஸ்.
கிரிட்ஸ்
Chaitanya Rural Intermediation Development Services என்பதன் சுருக்கமே கிரிட்ஸ் (CRIDS). வெறும் 4 மாதத்திற்கு முன்பு தான் நாவி டெக்னாலஜிஸ் சுமார் 95 சதவீத தொகையை முதலீடு செய்து மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்திற்குச் சச்சின் பன்சால் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.