இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான நஷ்டத்தை அடைந்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தக நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்தது. இந்தச் செய்தி உறுதியான நாள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் எஸ்பிஐ வங்கியிடம் இந்நிறுவனத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்குகள் இருப்பதால் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என முதலீட்டாளர்கள் பெரிதும் நம்பத் துவங்கினர்.
ஆனால் இப்போது கொரோன எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை பாதித்துள்ளது.
எஸ்பிஐ கார்ட்ஸ்
இந்நிறுவனத்தின் ஐபிஓ பங்கு விற்பனை மார்ட் 2ஆம் தேதி துவங்கிய நிலை ஒரு பங்கு விலை 750 முதல் 755 ரூபாய் வரையிலான மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்நிறுவனப் பங்குகள் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும், தனியார் முதலீட்டாளர்களுக்கும் ஐபிஓ-விற்கு முன் விற்பனை செய்யப்பட்டது.
பங்கு விலை சரிவு..
அப்படி எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும், தனியார் முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்ட பங்குகளின் மதிப்புத் தற்போது unlisted சந்தையில் ஒரு வாரத்திலேயே பாதியாகக் குறைந்துள்ளது. இந்தச் செய்து முதலீட்டாளர்கள் மத்தியில் அபாய மணியை அடித்துள்ளது என்றால் மிகையில்லை.
130-140 ரூபாய்
unlisted சந்தையில் இருக்கும் டீலர்கள் கூறுகையில், கடந்த வாரம் ஒரு பங்கு விலை 380 முதல் 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிவையில் தற்போது 130-140 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. கிட்டதட்ட 65 சதவீத சரிந்துள்ளது. ஆனால் புதன்கிழமை இதன் விலை சற்று உயர்ந்து 180-190 ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ்
உலக மக்களையும், பங்குச்சந்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் டெல்லியைத் தாக்கியுள்ள நிலையில், இந்திய முதலீட்டாளர்களும் பயத்தில் உள்ளனர். இத்தாக்குதல் ஏற்கனவே சரிவில் இருக்கும் இந்திய பங்குச்சந்தை மேலும் பாதிக்கப்படும் என வல்லுனர்கள் கூறிவரும் இந்தச் சூழ்நிலையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ பாதிக்கப்படும் என்று கருத்து நிலவுகிறது.
87 சதவீத பங்குகள்
எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் ஐபிஓவில் 2வது நாள் முடிவில் சுமார் 87 சதவீத பங்குகள் விற்பனையாகியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி முடியும் இந்நிறுவன ஐபிஓ பங்கு விற்பனை குறைந்தபட்சம் 1 மடங்கு அதிகமான அளவிற்கு முதலீட்டாளர்களால் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 206.30 புள்ளிகள் சரிந்து, 38,417.40 புள்ளிகளை அடைந்துள்ளது. நிப்டி குறியீடு 50.10 சதவீத வீதம் சரிந்து 11,253.20 புள்ளிகளை அடைந்துள்ளது.