மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் மத்தியில் கடந்த வாரம் பெரும் தடுமாற்றத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை, இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஒருபக்கம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இரு முக்கியக் காரணத்திற்காகப் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வரும் நிலையில், சர்வதேச சந்தையிலும் இன்று அதிகப்படியான சரிவை பதிவு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவு பதிவாகியுள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் உட்பட முன்னணி நிறுவன பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 334.98 புள்ளிகள் சரிந்து 60,506.90 புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக சென்செக்ஸ் 60,345.61 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 89.45 புள்ளிகள் சரிந்து 17,764.60 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்று நிஃப்டி அதிகப்படியாக 17,698.35 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதானி குழும பங்குகள்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 0.74 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 9.46 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 2.24 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.54 சதவீதம் உயர்வு
NDTV - 1.37 சதவீதம் உயர்வு
அதானி குழுமம்
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று இந்திய சந்தையில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய முக்கியமான காரணம் அதானி குழுமம் பங்குகளின் பெரும் வீழ்ச்சியும். சர்வதேச சந்தை சூழ்நிலைகளும் தான்.
அமெரிக்க மத்திய வங்கி
அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழையும் என்ற அச்சம் அனைத்து தரப்பினரையும் பாதித்து வரும் வேளையில் புதன்கிழமை அந்நாட்டின் மத்திய வங்கி வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.
நாணய புழக்கம்
இதனால் அமெரிக்காவின் நாணய புழக்கத்தில் கூடுதல் நெருக்கடி உருவாகும் வேளையில் சில நாட்கள் அமைதியாக இருந்த டெக் நிறுவனங்கள் மீண்டும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடத் துவங்கியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வால் இன்று சர்வதேச சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஜெரோம் பவல்
இதேவேளையில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் நாளை அந்நாட்டின் நாணய கொள்கை குறித்துப் பேச உள்ளார். ஜெரோம் பவல் இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் பணிநீக்கம் குறித்துப் பேச உள்ளார், இது கட்டாயம் சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிசர்வ் வங்கி
இதே வேளையில் தான் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கி 8 தேதி கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியை போலவே ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கொள்கை கூட்டம்
2023 ஆம் ஆண்டில் முதல் முறை இரு மாத நாணய கொள்கை கூட்டம் மட்டும் அல்லாமல் மத்திய பட்ஜெட்-க்குப் பின் நடக்கும் நாணய கொள்கை கூட்டம் என்பதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உரையில் கட்டாயம் அதானி குழுமம் மற்றும் இந்திய வங்கிகளின் அதானி குழும வெளிப்பாடுகளும் இடம்பெறும்.
கணிப்பு
பிப்ரவரி 6-8 ஆம் தேதி வரையில் நடக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ராய்ட்டர்ஸின் கணித்துள்ளது.