இலங்கை-யின் பொருளாதார சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது, சமீபத்தில் உலக வங்கி கொடுத்த கடனும் அத்தியாவசிய பொருட்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பல நாட்களாக இலங்கை மக்கள் பெட்ரோல், டீசலை 11 முதல் 12 மணிநேரம் வரிசையில் காத்திருந்து வாங்கி வரும் நிலையில் தற்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ள காரணத்தால் இலங்கை அரசு இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இலங்கை
இலங்கை பெட்ரோல், டீசல் இல்லாமல் தவித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கும் மேல் உயர்ந்து வரும் நிலையில், இலங்கைக்கு இது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த விலை உயர்வால் ஏற்கனவே வாங்கி வரும் எரிபொருள் அளவை காட்டிலும் குறைவாகத் தான் வாங்க முடியும்.
பள்ளி, அலுவலகம் விடுமுறை
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க வெள்ளிக்கிழமை இலங்கை அரசு பள்ளிகளை மூடவும், அரசு அதிகாரிகளை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் வேளையில் போக்குவரத்தைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அரசு அதிகாரிகள்
நாடு முழுவதும் "தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகளில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு" அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பவர்களைத் தவிர - வெள்ளிக்கிழமை பணிக்கு வர வேண்டாம் என்று இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் அரசு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளி விடுமுறை
இதேபோல் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்று இயங்கும் அனைத்து பள்ளிகளும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என்றும் இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் இலங்கை அரசு எரிபொருள் தட்டுப்பாடு எப்போது சரியாகும் என்ற விளக்கத்தையும் அளிக்கவில்லை.
பெட்ரோல் இருப்பு
இலங்கையில் இன்று காலை நிலவரப்படி பெட்ரோல் சுத்தமாக இல்லை என்றும், டீசல் மற்றும் பிற அனைத்து எரிபொருளும் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள சிறிய அளவிலான எரிபொருளையும் வாங்க மக்கள் மைல் கணக்கில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இதற்கிடையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிலையில் அரசு நிர்வாகம் மேம்படும் ஆனால் போதுமான நிதி இருப்பு இல்லாத காரணத்தால் தொடர்ந்து அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.