2022-23 நிதியாண்டின் முடிவில், இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டு, அதற்கான ரிப்போர்ட்-ஐ ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி 2022-23 நிதியாண்டின் முடிவில் தமிழ்நாடு அரசு மொத்த சந்தைக் கடனாக (Gross Market Borrowings) சுமார் 87,000 கோடி ரூபாயை வாங்கியுள்ளது.
இதன் மூலம் 2023 நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்த கடன்களில் பெரும்பாலான தொகை மூலதன சொத்துக்களை நோக்கி செலுத்தப்பட்டதால், கடன் வாங்குவதன் தரம் மேம்பட்டு உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது என்ன கடன் வாங்குவதன் தரம்..? வாங்க பார்ப்போம்
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, தமிழ்நாட்டின் மொத்த சந்தைக் கடன் அளவு 2021-22 ஆம் ஆண்டின் அளவை போல தான் 2022-23 ஆம் நிதியாண்டிலும் உள்ளது. இந்திய அளவில் 87000 கோடி ரூபாய் உடன் தமிழ்நாடு முதலிடத்திலும், மகாராஷ்டிரா 72,000 கோடி ரூபாய் உடன் 2வது இடத்திலும், மேற்கு வங்கம் 63,000 கோடி ரூபாய் உடனும், ஆந்திரப் பிரதேசம் 57,478 கோடி ரூபாய் உடனும், உத்திரப் பிரதேசம் 55,612 கோடி ரூபாய் உடனும் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
இந்தியாவில் மாநில அரசுகள் அனைத்தும், மாநில வளர்ச்சிக் கடன் (SDL) எனப்படும் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றன இதை தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் வருடத்தில் சில நூறு கோடிகள் பணத்தையாவது இதன் மூலம் திரட்டுகிறது.
இப்படி திரட்டப்பட்ட நிதியை அதிகளவில் மூலதன விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு செலவிட்டு உள்ளதை தான் கடன் வாங்குவதன் தரம் உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தரவுகளை அடிப்படையாக வைத்து இந்தியா ரேட்டிங்க்ஸ் அண்ட் ரிசர்ச் அமைப்பின் மூத்த ஆய்வாளர் Paras Jasrai தெரிவித்துள்ளார்.
இதில் மூலதன விரிவாக்கம் என்பது சொத்துக்களையும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் திட்டங்களில் முதலீடு செய்து நீண்ட கால வளர்ச்சிக்கு பாதை அமைப்பது தான் மூலதன விரிவாக்கம். இதில் சொத்துக்கள் என்பது பள்ளி, மருத்துவமனை, சாலை, மேம்பாலங்கள் ஆகியவை அடக்கம்.
இதன் படி தமிழ்நாட்டு அரசு வாங்கிய கடனில் சில பகுதி கடனை திரும்பி செலுத்தவும், வட்டியை செலுத்தவும் அளிக்கப்பட்டாலும், பெரும் பகுதி மூலதன விரிவாக்கத்திற்கு செலவிடப்பட்டு உள்ளது. 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் வாங்கிய கடன் அளவு ஓன்றாக இருக்கும் வேளையில், மூலதன விரிவாக்கத்திற்காக முதலீடு செய்யப்பட்ட தொகை 39,962.27 கோடி ரூபாயில் இருந்து 45,989.81 கோடி ரூபாயாக 2022-23 நிதியாண்டில் உயர்ந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் மூலதன விரிவாக்கத்தில் அதிகரிக்கப்பட்ட 1 சதவீத தொகை மூலம் தமிழ்நாட்டின் GSDP அதாவது Gross State Domestic Product அளவு 0.82 முதல் 0.84 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 87000 கோடி ரூபாய் கடனில் முன்பு வாங்கிய கடனுக்கு திரும்ப செலுத்தப்பட்ட தொகையை கணக்கிட்டு ரீபேமெண்ட் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யப்பட்டால் 2021-22 ல் 72500 கோடி ரூபாய் கடனும், 2022-23 ஆம் நிதியாண்டில் 65,722 கோடி ரூபாய் கடன் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளது.