தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மாநிலமாக உயர்த்த முக ஸ்டாலின் தலைமையிலான அரசு மிகப்பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு Industrial Hub உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் இருக்கும் சிப்காட் எப்போதும் இல்லாத வகையில் தற்போது பரபரப்பாக விரிவாக்கம் அடைந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் இப்பகுதியில் பல்வேறு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. செய்யாறு SIPCOT பகுதியில் 3 மாபெரும் திட்டங்கள் தயாராகி வருகிறது.
இந்தியாவில் அதிகப்படியான ப்ரீமியம் பைக் விற்பனை செய்யும் ராயல் என்பீல்ட் நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் செய்யாறு சிப்காட் பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளத்தை அமைக்கும் பணிகளை ராயல் என்பீல்டு துவக்கியுள்ளது.
இதை தொடர்ந்து கிராசிம் நிறுவனம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பெயின்ட் உற்பத்தி தளத்தை அமைக்கவும், அதற்கான முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்கட்டமைப்பு, கட்டுமானம் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பெயின்ட் துறைக்கு அதிகப்படியான வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்பு உள்ளது.
இதேபோல் ஆட்டோமொபைல் துறைக்கான பேட்டரி தயாரிக்கும் அமரராஜா சமீபத்தில் தெலுங்கானாவில் பிரம்மாண்ட லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது செய்யாறு சிப்காட் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் புதிய உற்பத்தி தளத்தை அமைப்பதற்கான பணிகளை துவங்கியுள்ளதாக டிவிட்டரில் சென்னை அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது.
இதே வேளையில் தென்னிந்திய மாநிலங்களில் வலிமையான பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக 2023 ஆம் நிதியாண்டின் முடிவில் 24.8 லட்சம் கோடி ரூபாய் GSDP உடன் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
இதேபோல் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் தமிழ்நாடு 87000 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த சந்தைக் கடன் (Gross Market Borrowings) பெற்று இருக்கும் வேளையில், மூலதன விரிவாக்கத்திற்காக முதலீடு செய்யப்பட்ட தொகை 39,962.27 கோடி ரூபாயில் இருந்து 45,989.81 கோடி ரூபாயாக 2022-23 நிதியாண்டில் உயர்ந்துள்ளது.
மூலதன விரிவாக்கத்தில் அதிகரிக்கப்பட்ட 1 சதவீத தொகை மூலம் தமிழ்நாட்டின் GSDP அதாவது Gross State Domestic Product அளவு 0.82 முதல் 0.84 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்தியா ரேட்டிங்க்ஸ் அண்ட் ரிசர்ச் அமைப்பின் மூத்த ஆய்வாளர் Paras Jasrai தெரிவித்துள்ளார்.