பணத்திற்காகவும், லாபத்திற்காகவும் ஓடும் நிறுவனங்கள் மத்தியில் மனிதாபிமானம், நேர்மை ஆகியவற்றை எதிர்பார்க்க கூடாது என்பது சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதைச் சிலர் எதிர்த்தாலும் பலர் ஒப்புக்கொள்வார்கள்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் உலகளவில் இரண்டு இந்திய நிறுவனங்கள் மிகவும் நேர்மையான நிர்வாகம் எனப் பெயர் எடுத்துள்ளது. இது இந்த நிறுவனத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெருமையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள்
நேர்மையான வர்த்தக மற்றும் நிர்வாக முறையை வடிவமைக்கும் சர்வதேச முன்னோடியான Ethisphere Institute இந்தியாவில் 2 நிறுவனங்கள் மிகவும் நேர்மையான நிறுவனமாக அறிவித்து, சர்வதேச பட்டியலில் இதைச் சேர்த்துள்ளது.
தலைப்பைப் பார்க்கும்போதே ஒரு நிறுவனம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மற்றொரு நிறுவனம் எது தெரியுமா..?
9 வருட தொடர் சாதனை
Ethisphere Institute நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிகவும் நேர்மையான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த விபரோ மற்றும் டாடா ஸ்டீல் இடம்பெற்று அசத்தியுள்ளது. கடந்த 9 வருடமாக இவ்விரு நிறுவனங்களும் இப்பட்டியலில் இடம்பெற்று அசத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிறுவனங்கள்
வெறும் 132 நிறுவனங்கள் மட்டுமே கொண்ட Ethisphere Institute நிறுவனத்தின் உலகின் மிகவும் நேர்மையான நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறுவது என்பது இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் மிகவும் கடினமான ஒன்று. இந்த வகையில் 2 இந்திய நிறுவனங்கள் உட்படப் பல்வேறு துறை சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இந்த 132 நிறுவனங்கள் பட்டியலில் அக்சென்சர், 3எம், ஏடி&டி, கேனான், கேப்ஜெமினி, டெல், ஈபே, ஹனிவெல், ஹெச்பி, இன்டெல், ஐபிஎம், லின்கிடுஇன், மைக்ரோசாப்ட், நோக்கியா, சோனி, விசா, மாஸ்ட்ர்கார்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது.
200 காரணிகள்
Ethisphere Institute நிறுவனம் இந்த முக்கியமான பட்டியலை சுமார் 200க்கும் அதிகமாகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து பட்டியலைத் தயாரித்துள்ளது. இதில் முக்கியமாக நிறுவன கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிர்வாகம், ஊழியர்களின் நலன் ஆகியவை இடம்பெற உள்ளது.
கடந்த 14 வருடமாக Ethisphere Institute இந்தப் பட்டியலை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.