இந்திய டெலிகாம் சந்தையில் உருவான கடுமையான போட்டியில் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற ஓரே நோக்குடன் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தனது கட்டணத்தைக் குறைத்து அதிகளவிலான வருமான இழப்பை எதிர்கொண்டது.
இதற்கிடையில் AGR நிலுவை கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று டெலிகாம் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் டாப் 3 டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா தற்போது லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தக் கூட முழுமையாகப் பணம் இல்லாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம்
வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம் அதிகளவில் கடன் மற்றும் நிலுவைத் தொகை பாக்கி மூலம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது டெலிகாம் சேவைக்கான லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்த போதுமான கட்டணம் இல்லாமல் உள்ளது.
லைசென்ஸ் கட்டணம்
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது லைசென்ஸ் கட்டணத்தைக் கடந்த இரண்டு காலாண்டுகளாகச் செலுத்தாமல் உள்ளது. இந்தக் காலாண்டிலும் செலுத்தவில்லை எனில் புதிதாக அபராதத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இதனால் ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 1.6 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையில் கூடுதலான சுமை உருவாகும்.
ரூ.150 கோடி நிதிப் பற்றாக்குறை
டெலிகாம் சேவைக்கான லைசென்ஸ் கட்டணமாக வோடபோன் ஐடியா ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கு சுமார் 690 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் நிறுவனத்தின் நிதிநிலையின் படி இந்நிறுவனத்திடம் 540 கோடி ரூபாய் அளவிலான தொகை மட்டுமே உள்ளது. இந்த அடிப்படை கட்டணத்தைச் செலுத்துவதற்குக் கூட வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் சுமார் 150 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
லைசென்ஸ் கட்டணம் கணக்கீடு
பொதுவாக டெலிகாம் துறை லைசென்ஸ் கட்டணத்தை, ஒரு நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenues - AGR) அளவில் இருந்து 8 சதவீத தொகையை லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும். இக்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஆகும் பட்சத்தில் வட்டியாக MCLR அளவு + 4 சதவீத வட்டியைச் செலுத்த வேண்டும். இக்கட்டணத்தைச் செலுத்தாத நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும்.
அபராதம் விதிக்கப்படும்
தற்போது வோடபோன் ஐடியா வட்டியுடன் அபராதமும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது தான் வருத்தமான செய்தி. மேலும் வோடபோன் ஐடியா புதிய முதலீடுகளை ஈர்க்க கடுமையாக உழைத்து வருகிறது.
புதிய முதலீடுகள்
வோடபோன் ஐடியா தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் நிர்வாகம் பங்கு முதலீட்டை ஈர்க்க முடியாத நிலையில் இருக்கும் காரணத்தால் புதிதாக வெளியில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் கிட்டத்தட்ட 1 வருடமாகப் போராடியும் எவ்விதமான பலனும் இல்லை.
குமார் மங்களம் பிர்லா கடிதம்
இந்நிலையில் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பெரும் பங்கு உரிமையாளரான குமார் மங்களம் பிர்லா தன்னிடம் இருக்கும் 27 சதவீத பங்குகளை அரசுக்கோ அல்லது அரசு கைகாட்டும் நிறுவனத்திற்கோ கொடுக்கத் தயார் என்று நாடாளுமன்ற செயலாளர் ராஜீவ் குப்பா-விற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
வோடபோன் plc சிஇஓ பதில்
இதேவேளையில் வோடபோன் plc நிறுவனத்தின் சிஇஓ நிக் இனி இந்தியாவிற்கு எவ்விதமான பங்கு முதலீடுகளும் எங்கள் தரப்பில் இருந்து வராது, இதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும் எனச் சந்தை ஆய்வாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் வோடோபோன் ஐடியா தற்போது வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் உள்ளது.