கொழும்பு: பசுமையான நெல் வயல்வெளிகளுக்கு நடுவே கம்பீரமாக எழுந்து நிற்கிறது நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை. அதன் சுவர்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன பிரதமர் லீ கெகியாங், மற்றும் இலங்கை தலைவர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன.
67 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனாவின் பரிசுதான், இந்த அதிநவீன மருத்துவமனை.
கிட்னி தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மருத்துவமனை, இலங்கை மக்கள் மத்தியில் சீனாவுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும் என்பது இதன் பின்னணியில் உள்ள அஜெண்டா.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ள வெற்றி, சீனாவை இலங்கையில் மறுபடியும் டிரைவர் சீட்டுக்கு கொண்டுவந்து அமர்த்தி விட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
குடிநீர், வானொலி
தொழில்துறை முதலீடுகளை தவிர்த்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சீன வானொலி நிலையம் போன்ற இன்னும் பல திட்டங்களையும் சீனா அங்கு செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு சீனா முதலீடுகளை செய்துள்ளது. இதில் 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு என்பது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் சார்ந்த கடன் தொடர்பானது.
மின் உற்பத்தி
சீன நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. ஏற்கனவே துறைமுகம் கட்டும் பணியை சீனா ஆரம்பித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கும் வேலைகளில் சீனா மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது.
விமர்சனங்கள்
அதேநேரம் இந்த பணிகள், சில இலங்கை அரசியல்வாதிகளாலும், பிற நாட்டு அரசியல் தலைவர்களாலும், விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இலங்கையை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கடல் வலை
ஆனால் சீனாவின் மிகப்பெரிய ஆர்வம், மெகா திட்டங்களில் உள்ளது. உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹம்பந்தோட்டாவில் புதிய தெற்குத் துறைமுக கட்டுமானம் 1.4 பில்லியன் டாலர் செலவில், உள்நாட்டு போருக்குப் பின்பாக தொடங்கியது. ஆனால், இது ஒரு "கடன் பொறி" என்ற அச்சத்தையும் இலங்கையில், எழுப்பியது. துறைமுகத்திற்காக வாங்கிய கடனை இலங்கை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால், 2017 ஆம் ஆண்டில் 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் துறைமுக கட்டுப்பாட்டை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டது.
வேலைவாய்ப்பு
ஆனால் சீன தூதர் செங், சீனாவின் கட்டுமானத் துறையால், 100,000 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன என்றார். இலங்கையின் மக்கள் தொகை, 22 மில்லியன்களாகும். எனவே இது கணிசமான வேலைவாய்ப்பு விகிதம் என்பது கவனிக்கத்தக்கது. சீன செய்தியைப் பரப்புவதற்கு, சீன அரசு நடத்தும் வானொலி நிலையம் உதவுகிறது. இலங்கையில் சீன ஆதரவு பொருளாதார மற்றும் சமூக திட்டங்கள் பற்றிய செய்திகளை அவை சிங்கள மொழியில் ஒலிபரப்புகிறது.