சென்னை: உலகிலேயே மிகச் சிறந்த உறவு என்றால் அது திருமண உறவுதான். திருமணத்தில் இணைவது இரண்டு மனங்கள் மட்டுமல்ல, இருவேறு கலாச்சாரக் கூறுகள் ஒன்றிணைவது தான் திருமணத்தின் முக்கியச் சிறப்பு.
வெவ்வேறு பின்னணிகள் கொண்ட இரண்டு குடும்பங்களைச் சந்தோஷமும் பொறுப்புகளும் நிறைந்த ஒரு புதிய உறவுக்குள் நுழைத்து, அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சைப் போட்டுவிடுகிறது இந்தத் 'திருமணம்'.
திருமணம்
ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில், திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. அதிலும் நிதி நிர்வாகம் என்று வரும்போது அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
திருமண வாழ்வில் குதிக்க முடிவெடுத்துவிட்டுக் கனவுகளோடு காத்திருப்பவர்களுக்காக எட்டு முக்கிய நிதி ஆலோசனைகளை இங்கு உள்ளது.. படித்துப் பயன்பெறுங்கள்..
பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
திருமணம் என்னும் நாணயத்தின் மறுபக்கம், பொறுப்பேற்றல். திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள், ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாகவும் அதனை இணைந்து நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களாகவும் உள்ளனர். நிதி அல்லது ஏதேனும் குடும்ப விஷயமோ, எதுவானாலும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம்.
ஒரு கண் அங்கு.. ஒரு கண் இங்கு..
நிதிச் செலவுகளைக் கண்காணிப்பதும், துணைவர் எவ்வளவு செலவழிக்கிறார் என்பதில் ஒரு கண்ணை வைப்பதும் இதில் முக்கியப் பங்குகள் உண்டு. இது, நல்ல முடிவுகளை எடுக்க உதவுவதோடு சரியான நேரத்தில் சரியான நிதி நிர்வாகத்துக்கும் உதவுகிறது.
ரகசியம் வேண்டாம்
சில நேரங்களில் ரகசியம் காப்பது நல்லது என்றாலும் திருமணப் பந்தத்திற்குள் வந்துவிட்ட பிறகு தம்பதிகளுக்குள் ரகசியம் காக்கத் தேவையில்லை. சாதாரண விஷயங்களிலேயே ரகசியம் கூடாது எனும்போது, பண விஷயங்களில், ரகசியம் கூடவே கூடாது.
நிதி தொடர்பான எல்லா விஷயங்களையும் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்வது பல சிக்கல்களை எளிதாக்கி விடும். சில சமயங்களில், தம்பதிகளில் ஒருவர் நிதியைக் கையாளுவதில் தடுமாறினால் மற்றொருவர் கைகொடுத்து, சூழ்நிலையைச் சமாளிக்கலாம். ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையையும் உடனுக்குடன் பகிர்வது, எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
பொருத்தமான பட்ஜெட் வேண்டும்...
சரியான பட்ஜெட்டை தயாரிக்காவிட்டால் அது உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அந்தச் சமயங்களில் உங்களால் அதைச் சரி செய்ய முடியாமல் போகலாம்.
சில கடுமையான சூழ்நிலைகளில் வரவுகளையும் கையிருப்புகளையும் விட, செலவுகளும் கடன்களும் அதிகமாகி, திவாலாகும் சூழ்நிலை கூட ஏற்படுவதுண்டு. வருமானத்துக்கேற்ப செலவுகள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகளைத் திட்டமிடுவதன் மூலம் தம்பதிகள் தங்கள் நிதிநிலைமை மோசமடையாமல் தவிர்க்கலாம்.
சரியான திட்டமிடல் மூலம் வாழ்க்கையை லேசானதாக்கிக் கொள்ளலாம். அது உங்கள் வருமானத்தை உயர்த்தாமல் போனாலும், நிச்சயமாக உங்கள் சேமிப்பை அதிகப்படுத்தும்.
பொறுப்புகளைப் பிரித்துக் கொள்ளுங்கள்
சரியான வரவு-செலவு அறிக்கை இருந்தாலும் பொறுப்புகளைப் பிரித்துக் கொள்ளாமல் இருப்பது தோல்விக்கே வழிவகுக்கும். யோசனைகளைப் பரிமாறிக் கொள்வது அல்லது திட்டமிடுவது மட்டும் போதுமானதல்ல. அந்தத் திட்டத்தின் எந்தெந்த பகுதிகளை யார் நிறைவேற்றுவது என்ற பொறுப்பும் வரையறுக்கப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு, மளிகை மற்றும் காய்கறிகள் நிர்வாகத்தை மனைவியும் மாதாந்திர நிலுவைத் தொகைகளை எங்கு எப்போது செலுத்த வேண்டும் என்பதைக் கணவனும் பிரித்துக் கொள்ளலாம். இது வேலையை இருவருக்கும் எளிதாக்குவதுடன் நேரத்தையும் சேமிக்க உதவுகிறது. எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க அவசர நிதி ஒன்றையும் ஒதுக்கி வைப்பது தக்க சமயத்தில் கை கொடுக்கும்.
போதுமான அளவுக்கு இன்ஸூரன்ஸ்
பெரும்பாலானவர்கள், அதிகத் தொகைக்கு இன்ஸூரன்ஸ் எடுப்பதில்லை. இது பொறுப்பின்மையின் அறிகுறியாகும். ஒரு தனி நபர், இன்னொரு தனி நபரைத் திருமணம் செய்து இருவராக மாறும் போது, பொறுப்பும் இரு மடங்காகிறது.
திருமணத்துக்கு முன் எப்படியோ, 'எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு' என்றிருந்தாலும், திருமணத்திற்குப் பின் அப்படி இருக்க முடியாது. முந்தைய இன்ஸூரன்ஸ் தொகை சிறியதாக இருந்தால் அதை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும்.
வரிகள் மற்றும் ஆதாயங்கள்
திருமணம் கொண்டுவரும் கூடுதல் பொறுப்பு, இன்னும் சற்றே பெரிய வீடு, கொஞ்சம் வசதியான கார், அவ்வப்போது ஹாஸ்பிட்டல் செலவு என்று விரிவடைந்து கொண்டே போகும்.
இந்திய வருமான வரித்துறை, நாம் செலுத்தும் வரிகளைக் குறைத்துக் கொள்ளச் சில சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது.
வீட்டுக் கடன்தொகை திரும்பச் செலுத்துதல், இன்ஸூரன்ஸ் பிரிமியம், தேசிய சேமிப்புத் திட்டங்கள் போன்றவை நாம் செலுத்தக்கூடிய வரியைப் பெருமளவு குறைக்கும். புதுமணத் தம்பதிகள், வரி-ஆலோசகர் ஒருவரிடம் எப்படி வரியைச் சேமிப்பது என்பது குறித்து ஆலோசனை பெறுவது நல்லது.
ஆவணங்களைப் புதுப்பித்தல்
திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக் கொள்வது இந்தியாவில் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழக்கம். சிலர் அதைத் திருமணத்தின் ஒரு சடங்காகவே வைத்துள்ளனர். திருமணத்தின் போதோ அல்லது அதற்குப் பிறகோ இந்தப் பெயர் மாற்றம் நிகழும்.
எப்படியாயினும், மாற்றப்பட்ட பெயரை எல்லா ஆவணங்களிலும் பதிவு செய்ய வேண்டும். வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் பெயர் மாற்றங்கள் பதிவு செய்யப்படவேண்டும்.
மாற்றுத் திட்டம் வைத்துக் கொள்ளுங்கள்
விபத்து முன்கூட்டி சொல்லிவிட்டோ, அல்லது அதிகப் பணமிருக்கும்போதோ வருவதில்லை. அப்படி வந்தால் அதற்குப் பேர் விபத்தும் இல்லை.
இம்மாதிரி சமயங்களில் செலவுகளைச் சமாளிப்பது ஒரு தனி மனிதருக்குச் சவாலான காரியம். திருமணம் ஆனவர், ஆகாதவர் யாராக இருந்தாலும், எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிக்க ஒரு மாற்று ஏற்பாடு இருக்க வேண்டும். விபத்தால் ஏற்படும் நிதிச் சுமை மற்றும் நிதி இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க இது உதவும்.
உங்கள் மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!