வாழ்க்கை வாழ்வதற்கே, வாழும் வரை வறுமையே இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் ராகுலின் விருப்பம். அவரிடம் ஒரு விலையுயர்ந்த கார் இருக்கின்றது., லேட்டஸ்டாக என்ன மாடல் மொபைல் வருகிறதோ, அது ஷோரூமுக்கு வருவதற்கு முன்பே ராகுலின் கையில் வந்துவிடும், அவரிடம் லட்சக்கணக்கணக்கில் மதிப்புடைய ஒரு பிளாஸ்மா டிவி உள்ளது. அவர் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐந்து இலக்க சம்பளம் வாங்கிய அவர் விலையுயர்ந்த பிராண்ட் உடையைத்தான் அணிவார். காஸ்ட்லியான மல்டி பிளக்ஸில் படம் பார்ப்பது தான் அவருடை வழக்கம். ஒவ்வொரு நாளும் பார்ட்டி, நண்பர்களுடன் மது அருந்துதல், விலையுயர்ந்த உணவு வகைகள் இதுதான் ராகுலின் ரெகுலரான வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நீங்கள் விரும்புகிறீர்களா? இவ்வளவு ஆடம்பரமாக வாழும் ராகுலிடம் எதிர்காலத்திற்கு என ஒரு பைசா கூட இருக்காது.
வாழ்க்கை என்பது ஒரு சக்கரம். எப்போதுமே அது மேலேயே இருக்காது. திடீரென கீழே வரும்போது உங்களுக்கு கை கொடுப்பது நீங்கள் சேமித்த வைத்த பணம்தான். உறவுகளும், நட்புகளும் நம்மிடம் பணம் இருக்கும் வரை தான் தொடர்பில் இருக்கும். பின்னர் மாயமாய் மறைந்து போகும்.
சம்பாதிப்பது சுலபம் சேமிப்பது..!
எனவே தற்போதைய உலகில் சம்பாதிப்பது என்பது வெகு சுலபம். ஆனால் சம்பாதித்த பணத்தை முறையாக எதிர்காலத்திற்கு எனச் சேமித்து வைப்பது நிறைய சிரமம். இந்நிலையில் இந்தக் கட்டுரையில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீணாகிப் போகும் 10 தவறான வழிமுறைகளைப் பார்ப்போம்.
வருமானத்தை விட அதிக செலவு செய்தல்:
வரவு எட்டனா செலவு பத்தணா என்ற பாடல் வரியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அதுதான் வருமானத்தை விட அதிக செலவு செய்த. உங்களுக்கு மிகக் குறைந்த வருமானம் இருக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் அந்த வருமானத்திற்குள் செலவு இருக்க வேண்டும் என்பது அவசியம். இதை நீங்கள் சரியாக செய்யாமல் பணத்தை தண்ணீர் போல் இறைத்துச் செய்தால் நீங்கள் கடனாளி ஆகிவிடுவதை யாராலும் தவிர்க்க முடியாது. எனவே வருமானத்திற்குள் செலவு செய்து பாருங்கள் அதில் கிடைக்கும் நிம்மதி உலகில் வேறு எதிலும் கிடைக்காது.
சேமிப்பா? கிலோ என்ன விலை?
சேமிப்பு என்பது சிறு வயதில் இருந்தே நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லி கொடுக்கும் ஒரு பழக்கம். சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியே இதற்குச் சான்று. நிம்மதியான எதிர்காலம் வேண்டும் என்றால் நீங்கள் நிகழ் காலத்தில் சேமித்தே ஆகவேண்டும். அதற்காக உங்களைக் கஞ்சனாக மாறச் சொல்லவில்லை.
வாழ்க்கைக்குத் தேவையானவற்றை செலவு செய்து செலவு போக மீதியைச் சேமித்து வையுங்கள். இவ்வாறு இல்லாமல் சேமிப்பா? அது எந்தக் கடையில் கிடைக்கும், கிலோ என்ன விலை? என்கிற டைப்பில் உங்கள் வாழ்க்கை சென்றால் உங்களின் எதிர்காலம் சோகத்தில்தான் முடியும். உங்களது சின்ன சின்ன சேமிப்பு எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணம், அல்லது சொந்த வீடு என்ற கனவு ஆகியவற்றை நிறைவேற்றும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
காலதாமதமாகக் கட்டப்படும் பில்கள்
நீங்கள் சம்பாதித்த பணமோ அல்லது சேமித்தோ பணமோ வீணாகப் போவதற்கு ஒரு காரணம் காலதாமதமாகக் கட்டப்படும் பில்தொகை. போன் பில்லோ, எலக்ட்ரிக் பில்லோ, கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தேதியை மாதாமாதம் பிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அந்தத் தேதியில் சரியாகக் கட்டிவிட்டால், உங்கள் பணம் வீணாவதை மிச்சப்படுத்தலாம். இந்தச் செயல் உங்களுடைய பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி உங்களுடைய நன்மதிப்பையும் அதிகரிக்கும்.
ஆபத்தான முதலீடுகள்
அதிக வட்டி வரும் என்ற போலியான விளம்பரத்தை நம்பியோ, அல்லது அதிக லாபம் கிடைக்கும் என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பங்கு வர்த்தகத்திலோ ஈடுபடுவது ஆபத்தான முதலீடுகளின் ஆரம்பம்.
இது ஒருவகையில் சூதாட்டமும் கூட. நாம் போடுகிற முதலீட்டுக்குத் தகுந்த வட்டி அல்லது வருமானம் கிடைத்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் பாதுகாப்பான நிறுவனத்தில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்.
தேவையில்லாமல் கடன் வாங்குவது
இப்போதெல்லாம் ஒரே ஒரு போன் காலில் கடன் கொடுக்கப் பல வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் தயாராக இருக்கின்றது. கிரெடிட் கார்டு உள்படப் பல வழிகளில் உங்களைக் கடனாளி ஆக்குவதே இந்த நிறுவனங்களின் குறிக்கோள்.
கடன் கொடுக்கும் வரை உங்கள் நண்பனாக இருக்கும் இந்த நிறுவனங்கள், நீங்கள் ஓரே ஒரு தவணை கடனைக் கட்டவில்லை என்றால் உங்களைப் பரம எதிரிபோல் பார்க்கும். கார் வாங்கக் கடன், வெளிநாடு செல்ல கடன், ஆடம்பரமான பொருளை வாங்கக் கடன் என கடனோ கடன் வாங்கிக் கஷ்டப்பட வேண்டாம்.
சிந்தித்து வாங்கவும்
எந்த ஒரு பொருளை கடனுக்கு வாங்கும்போதும் அந்த பொருள் நமக்கு உண்மையிலேயே தேவைதான், அந்த பொருளுக்குரிய ஒவ்வொரு தவணையையும் கட்டும் திறன் நமக்கு இருக்கின்றதா? என்பதை யோசித்து கடன் வாங்குங்கள். அப்போதுதான் உங்களுடைய எதிர்கால வாழ்க்கை சுபமாக இருக்கும்
முக்கியமான நிதி முதலீடுகளைத் தள்ளி போட வேண்டாம்
முக்கியமான நீண்டகால முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை தள்ளி போக வேண்டாம்.
ஒரு நல்ல நிலம் வாங்க வேண்டும் என்றாலோ, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய செய்ய முடிவு எடுத்து விட்டாலோ, மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினாலோ உடனே அதை முடித்துவிட வேண்டும். காலதாமதம் செய்தால் ஒருவேளை அது நிகழாமல் போய்விடும்.
ஆடம்பர வாழ்க்கை வேண்டாமே
தற்போதைய காலத்தில் வார இறுதி என்று வந்துவிட்டால் ஆண்களும், பெண்களும், 5ஸ்டார் ஓட்டல், பப் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆடம்பரமான பார்ட்டி, விலை உயர்ந்த உணவு வகைகள் ஆகியவற்றை கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒரு மாதத்தின் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை ஒரே ஒரு நாள் பார்ட்டிக்கு செலவு செய்வது உங்கள் பணத்திற்கு மட்டும் வேட்டு வைப்பதில்லை, உங்கள் எதிர்கால வாழ்க்கை மற்றும் உங்கள் பொருளாதார நிலையையும் வேட்டு வைத்துவிடும். நம்மை நாமே கண்ட்ரோல் செய்து கொண்டு தேவையான செலவை மட்டும் செலவு செய்தால் வாழ்க்கை வசந்தமாக மாறும்.
முதலீடு செய்வதில் பயமா?
ரிஸ்க்கான முதலீடுகளில் முதலீடு செய்ய பயம் என்பது இருக்க வேண்டியது அவசியம்தான். பங்கு வர்த்தகத்தில் வர்த்தகம் செய்யும் போதும், முதலீடு செய்யும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதற்கு முன்பு அந்த முதலீடு பாதுகாப்பானதா? என்பதை ஒருமுறைக்குப் பல முறை தீர ஆராய்ந்து அதன் பின்னர் முதலீடு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாத பிக்சட் டெபாசிட் அல்லது மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சாலச் சிறந்தது.
வரிச்சலுகைகளைப் பெற தவறுவது சரியா?
தற்கால இளைஞர்கள் வரிவிலக்கு பெறுவது அல்லது வரிச்சலுகை பெறுவதில் கவனம் செலுத்துவதில்லை. ஒருசில முதலீடுகளைச் செய்யும்போது கிடைக்கும் வரிச்சலுகைகளைத் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தின் ஒரு பெரும் பகுதியை நீங்கள் வரிகளாகவே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
வரி கட்டுவது என்பது அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அதே நேரத்தில் நமக்குக் கிடைக்கும் வரிச் சலுகையை இழக்கக் கூடாது என்பது மிக முக்கியம்
இன்சூரன்ஸ் நல்லதா?
இன்சூரன்ஸ் ஏஜண்டுக்களை கண்டாலே பயந்து ஓடும் நபரா நீங்கள்? அப்படி என்றால் நீங்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாப்பின்றி விட்டுச் செல்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம். நமது வருமானத்தின் ஒரு பகுதியை கண்டிப்பாக இன்சூரன்ஸ் செய்வது நாம் உயிருடன் இருக்கும் வரை மட்டுமின்றி நாம் இல்லாமல் போன பின்பும் நமது சொந்தங்கள் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு ஒரு காரணியாக இருக்கும்.
எனவே வாழ்க்கையில் மேற்கண்ட பணம் வீணாகும் வழிகளைப் பின்பற்றாமல் பாதுகாப்பான வழிகளில் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நீங்கள் தான் வாழ்க்கையின் நாயகன்.
சுவிஸ் வங்கி
சுவிஸ் வங்கியில் அப்படி என்னதான் இருக்கு?
இங்க இருந்து தான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறாங்க!!