நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு சிறந்த முடிவே ஆனால் அது எந்த வங்கிகளில் நாம் முதலீடு செய்கிறோம் என்பதைப் பொருத்து.
வணிக ரீதியான பல வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 7 முதல் 7.5 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்கும் நிலையில் சில கூட்டுறவு வங்கிகள் மட்டும் 9.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கின்றன.
சந்தேகம் வரும்
இதைப் பார்க்கும் போது அனைவருக்கும் கண்டிப்பாக சந்தேகம் வரும். ஏன் என்றால் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவே நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் 7 சதவீதம் வட்டி விகிதம் மட்டுமே அளிக்கும் நிலையில் மஹாவீர் கூட்டுறவு வங்கி, அபினவ் ஷாகாரி கூட்டுறவு வங்கி மற்றும் மாநகர கூட்டுறவு வங்கி போன்ற வங்கிகள் எப்படி 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி அளிப்பதாகக் கூறுகின்றன.
ஆச்சரியப்பட எதுவும் இல்லை
இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. பல ஓய்வூதியதாரர்கள் வழக்கமான வருமானத்திற்காக நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்துவருகிறார்கள். அதனால் கூட்டுறவு வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது ரிஸ்க் எடுக்கும் முயற்சியே ஆகும்.
கூட்டுறவு வங்கிகள் திவால்
கடந்த கலங்களில் பல கூட்டுறவு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. கூட்டுறவு வங்கிகளுடன் ஒப்பிடும் போது வணிக வங்கிகள் சிறந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது ஆகும். அது மட்டும் அல்லாமல் வணிக வங்கிகளைப் போன்று கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை சரியாக இருப்பதில்லை.
ரிஷி மெஹ்ரா,டீல்4லோன்ஸ் நிறுவனர்
இது குறித்து டீல்4லோன்ஸ் நிறுவனர் ரிஷி மெஹ்ரா, கூறுகையில் அடிக்கடி திவால் ஆகும் கூட்டுறவு வங்கிகளில் 1.5 முதல் 2 சதவீதங்கள் வரையிலான வட்டி விகிதத்திற்கு ஆசைப்படுவது சரியான மதிப்பு இல்லை என்றார்.
கூட்டுறவு வங்கிகள் அதிகமாக உள்ளூரில் உள்ள விவசாயிகள், சிறு குறுந்தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு கடன் அளிப்பதால் நாடு முழுவதும் அதிக கிளைகள் இல்லாமல் இருப்பதே இந்த வங்கிகள் திவால் ஆவதற்கான காரணம்.
1 லட்சம் இன்சூரன்ஸ்
இருந்தபோதிலும் கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிற தேசிய வங்கிகளைப் போலவே 1 லட்சம் ரூபாய் வரை வைப்புத் தொகை இன்சூரன்ஸ் திட்டம் இருக்கின்றது.
பிரித்து முதலீடு செய்யலாம்
சில வல்லுநர்கள் கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யும் தொகையைப் பிரித்து முதலீடு செய்ய அறிவுறுத்துகின்றனர்.
அதாவது உங்களிடம் முதலீடு செய்ய 2 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் அதைப் பிரித்து இரண்டு கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.