நீங்கள் பணியில் சேர்ந்தவுடனே அந்த ஆரம்ப வருடங்களில் நீங்கள் மிகுந்த உற்சாகமாக இருந்திருப்பீர்கள். உங்கள் 20-களின் பிற்பகுதியிலும், 30-களின் ஆரம்பத்திலும் தான் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உற்சாகமாகச் செலவழிக்க விரும்புவீர்கள். ஆனால் இத்தகைய உற்சாகமான, அனுபவிக்கும் மனநிலையிலும் உங்கள் எதிர்கால வாழ்வுக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடுகள் மூலம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
உங்கள் பணிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் பணத்தை விவேகமான முறையில் கையாள்வது சற்று சவாலான விஷயமே என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் பணத்தைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான 10 முக்கிய யோசனைகள் உங்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
நிதி தொடர்பான இலக்குகளை நிர்ணயுங்கள்
நீங்கள் சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கியவுடன் உங்கள் நிதி தொடர்பான இலக்குகளைப் பற்றித் திட்டமிட வேண்டும்; அதிலும் முக்கியமாக, குறைந்த அளவு தொகையே முதலீடுகளுக்கெனத் தேவைப்படுவதும், நீண்ட-கால ஃபைனான்ஷியல் இலக்காக இருப்பதுமான, பணி ஓய்வு காலத்திற்கான திட்டமிடலில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். சொத்து சேர்த்தல், கல்விக்கான திட்டமிடல், திருமணத்திற்கான திட்டமிடல், கார் வாங்குவது, வீடு வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா, போன்ற இதர பல இலக்குகளும் கூட உங்களுக்கு இருக்கலாம்.
சீக்கிரமாகவே சேமிக்கத் தொடங்குங்கள்
வெகு சீக்கிரமே முதலீடுகள் செய்ய ஆரம்பிப்பது, உங்கள் பண வரவை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர உதவுவதோடு, காம்பவுண்டிங் என்று சொல்லப்படும் கூட்டு சேர்மத்தின் பலன் முழுவதுமாக உங்கள் முதலீடுகளுக்குக் கிடைக்கும் வண்ணம், அவற்றிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் உதவும். இது, முக்கியமாக உங்கள் ஓய்வுகாலத்துக்கான தொகையைச் சேர்த்து வைப்பது போன்ற பிக்-டிக்கெட் ஃபைனான்ஷியல் இலக்குகளுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில், சீக்கிரமே சேமிக்க ஆரம்பிப்பது, குறைந்தளவு பணப் பங்களிப்பின் மூலம் உங்கள் ஓய்வு காலத்திற்கெனத் தேவைப்படும் கணிசமான தொகையைச் சேர்ப்பதற்கு உதவும்.
3 வருடங்கள்
உங்கள் நிதி தொடர்பான இலக்குகளை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பின்னர், ஆன்லைன் எஸ்ஐபி கால்குலேட்டர்களின் உதவியைக் கொண்டு மாதாந்திர பங்களிப்பாக எவ்வளவு செலுத்தியாக வேண்டும் என்பதைக் கணித்துக் கொள்ளுங்கள். சுமார் 3 வருடங்களில் மெச்சூர் ஆகக்கூடிய ஃபைனான்ஷியல் இலக்குகளுக்குக் குறைந்த-கால டெப்ட் ஃபண்ட்களிலும், 3-5 வருடங்களில் மெச்சூர் ஆகக்கூடிய இலக்குகளுக்கு ஹைப்ரிட் ஃபண்ட்களிலும், 5 வருடங்களுக்குப் பின் மெச்சூர் ஆகக்கூடிய இலக்குகளுக்கு ஈக்விட்டி ஃபண்ட்களிலும் முதலீடு செய்வது நல்லது.
நீண்ட-கால முதலீடு
யுஎல்ஐபிக்கள் நீண்ட-கால முதலீடுகளுக்கான மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். தற்போதைய குறைந்த-விலை யுஎல்ஐபிக்கள், அதிக-அளவு ரிட்டர்ன்களுக்குச் சிறப்பாகப் பொருந்துவன. வெகு சீக்கிரமே தொடங்கப்படும் யுஎல்பிஐ முதலீடுகள் ஒய்வுக் காலத்தின் போது தேவைப்படக்கூடிய தொகையைக் கணிசமாகச் சேர்க்க உதவும். ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட யுஎல்ஐபிக்கள், சுமார் 10-15 வருடங்களுக்கு முதலீடு செய்யப்பட்டால், 12-15% வரை ரிட்டர்ன்களைக் கொடுக்கும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை கட்டமைத்துக் கொள்ளுங்கள்
எதிர்காலத்தில் லோன் பெறுவதற்கென அணுக வேண்டுமெனில், கிரெடிட் ஸ்கோரை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். "இதுவரை கிரெடிட் ஹிஸ்டரி இல்லாதோர், தினசரி செலவுகளுக்குக் கிரெடி கார்டை உபயோகித்து, டியூ தேதியில் முழுப் பில் தொகையைச் செலுத்துமாறு பார்த்துக் கொள்வது மட்டுமே அத்தகைய ஹிஸ்டரியை உருவாக்கிக் கொள்வதற்குரிய ஒரே எளிய மற்றும் விலை குறைவான வழி ஆகும். கிரெடிட் டிரான்ஸாக்ஷன்கள் கிரெடிட் பீரோக்களிடம் ரிப்போர்ட் செய்யப்படுகின்றன.
அக்கிரெடிட் பீரோக்கள் அவற்றைக் கொண்டு உங்கள் கிரெடிட் ஸ்கோரை கால்குலேட் செய்வர். தகுதியின்மை காரணங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி, கிரெடிட் கார்டுகள் மறுக்கப்பட்டோர், அவர்களுக்கெனக் கிரெடிட் ஹிஸ்டரியை உருவாக்க, ஸெக்யூர்ட் கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்து உபயோகிக்கலாம்." என்று பைசாபஸார்.காம் நிறுவனத்தின் சீஃ புராடக்ட் அதிகாரியான ராதிகா பினானி, மணிகன்ட்ரோலிடம் தெரிவித்துள்ளார். உங்களுக்குக் கல்விக்கடன் ஏதும் இருப்பின், உங்கள் முழு இஎம்ஐகளைச் சரியான நேரத்தில் செலுத்தி, ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக உபயோகியுங்கள்
உடனடி கிரெடிட் வழங்குவது மற்றும் கிரெடிட் ஹிஸ்டரியை உருவாக்குவது தவிர்த்து, கிரெடிட் கார்டுகள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன. கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் மூலம், உங்கள் பொருளாதாரத்திற்கு எவ்வித பங்கமும் வராது, முழு அவுட்ஸ்டாண்டிங் தொகையையும் டியூ தேதிக்குள் செலுத்தி விடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
செலவீனங்கள்
உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படக்கூடிய செலவீனங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதோடு, உங்கள் பெருவாரியான செலவுகளுக்குப் பல்வேறு டிஸ்கவுண்ட்கள், கேஷ் பேக்கள் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்கள் போன்ற அதிகபட்ச ஆதாயங்களையும் வழங்கக்கூடியதான கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
ரிவார்ட் பாயிண்ட்
அவ்வாறு வழங்கப்படும் ரிவார்ட் பாயிண்ட்களை அவை காலாவதியாகும் முன் ரெடீம் செய்ய வேண்டியது அவசியம். "உங்கள் கிரெடிட் கார்டின் மூலம் ஏடிஎம் வித்டிராயல்கள் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் கிரெடிட் யுடலைஸேஷன் ரேஷியோ நிர்ணயிக்கப்பட்ட 30-40% அளவை மிஞ்சும் பட்சத்தில், உங்கள் கிரெடிட் கார்டின் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்குமாறு உங்கள் கிரெடிட் கார்டு இஷ்யூயரிடம் கேட்டுக் கொள்ளலாம் அல்லது கூடுதலான கார்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிஸி ஒன்றை எடுக்கவும்
நிதி தொடர்பான திட்டமிடலில் டெர்ம்-இன்ஷூரன்ஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் தன்னைச் சார்ந்திருக்கக்கூடிய நபர்கள் இருக்கக்கூடிய யாருக்கும் இது பாதுகாப்புக் கவசம் போன்றதாகும். ஒரு டெர்ம் ப்ளானின் முக்கியக் குறிக்கோள், அசம்பாவிதமான சம்பவம் எதுவும் நிகழ்ந்தால், அந்நபரின் குடும்பத்தாருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை அளிப்பதே ஆகும்.
டெர்ம் இன்ஷூரன்ஸ்
மிகக் குறைந்த வயதிலேயே நீங்கள் டெர்ம் ப்ளான் ஒன்றை வாங்கத் திட்டமிட்டால், அது சிக்கனமானதாக இருப்பதோடு, அப்பாலிஸி காலம் வரை அதன் ப்ரீமியம் ஒரே அளவில் இருக்கக்கூடிய அனுகூலமும் உங்களுக்குக் கிடைக்கும். இப்போதெல்லாம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிகமான பாலிஸி டெர்ம் அல்லது ஆயுள் முழுமைக்குமான காப்பீட்டுடன் கூடிய டெர்ம் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் பொருந்திய பாலிஸிகளை வழங்கி வருகின்றன.
பணம் செலவழிப்பதில் கவனம் தேவை
உங்கள் 20 வயதின் போது வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிப்பதற்கு முன்னுரிமை அளிப்பது இயல்பே என்றாலும், உங்கள் பொருளாதாரத்தின் மீதும் குறிப்பிட்ட அளவு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இரண்டையும் சமநிலையில் வைத்திருக்க் வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து அதீதமாகப் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவது அதிகச் செலவு வைக்கும். சில நேரங்களில், முடிவற்ற சுழலான கிரெடிட் கார்டு கடனில் சிக்க வைத்து சீரழித்து விடும், ஜாக்கிரதை! மேலும், சில இரவுகள் வெளியே செல்லாமல் மிச்சமாகும் தொகையைச் சேர்த்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃப்ண்டின் நீண்ட-கால எஸ்ஐபி ஒன்றில் முதலீடு செய்து பாருங்கள்; எவ்வளவு தொகை மிச்சமாகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
அவசரகால ஃபண்ட் ஒன்றை உருவாக்குங்கள்
ஒரு குறிப்பிட்ட அளவு தொகை உங்கள் வங்கிக் கணக்கில் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான், வேலை இழப்பு போன்ற சில அசந்தர்ப்பங்கள் நேர்ந்தாலும், உங்கள் வாழ்க்கையைச் சில மாதங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி நகர்த்த முடியும். மாத அடிப்படையிலான குறைந்தபட்ச செலவுகளை ஈடுகட்டக்கூடிய வகையில் சுமார் 3-6 மாதங்களுக்கான சேமிப்பை உங்கள் வங்கிக் கணக்கில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக, உங்கள் மாதாந்திர செலவு சுமார் 30,000 ரூபாய் என்றால், பிற்பாடு அவசரகால நெருக்கடி ஏதேனும் நேரும் பட்சத்தில் வரக்கூடிய எதிர்பாரா செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு, சுமார் 90,000 ரூபாயையாவது உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
விலை குறைந்து வரும் சொத்து வாங்குவதை நிறுத்தி வையுங்கள்
பணி நிரந்தரம் என்ற அடிப்படையில் பார்த்தால் 20 வயதுகளில் இருக்கும் பெரும்பாலானோருக்கு அவர்களின் பணி நிச்சயமற்றதாக, பலவித மாற்றங்களுக்குட்படக் கூடியதாகவே இருக்கும். ஏனெனில், இந்த வயதில் தான் ஒருவர் சுய-பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு எத்தகையைப் பணி நீண்ட-கால அடிப்படையில் பொருத்தமாக இருக்கும் என்று அறிந்து கொள்ளத் தலைப்படுவர்.
முக்கியமான காலம்
அடிக்கடி பணி மாற்றம் அல்லது துறை மாற்றம் போன்றவற்றோடு, தன்னிச்சையான சம்பளப் பிடித்தம் போன்றவையும் வாடிக்கையாக நிகழக்கூடிய காலகட்டம் இது. உங்கள் வாழ்வில் பல்வேறு ஏற்ற இறங்களுடன் கூடிய மாற்றங்கள் ஏற்படத்தக்க இக்காலக்கட்டத்தில் விலை குறைந்து கொண்டு வரும் சொத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது என்பது மிகுந்த செலவு வைத்து விடும். அதிக விலையிலான வாகனம் ஒன்றை வாங்கும் எண்ணம் இருப்போர் அதைத் தள்ளி வைத்து விட்டு, தம் பணியில் ஓரளவு ஸ்திரத்தன்மை வாய்த்தபின் அதனை வாங்கத் தலைப்படுவது நல்லது
அவசரப்பட்டு வீடு வாங்குவதைத் தவிர்க்கவும்
ரொக்கப்பணம் கொடுத்து வீடு வாங்குவது, என்பது அரிதே என்றாலும், அவ்வாறன்றி, கடன் வாங்கி வீடு வாங்குவதென்பது அதிக அளவில் செலவு வைத்து விடும். பணிக்காலத்தின் ஆரம்பநிலையிலேயே வீட்டுக்கடன் வாங்குவது பொருளாதார நெருக்கடியை உண்டாக்கி, உங்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதோடல்லாமல், உங்களின் இதர பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கும் தடையாக இருக்கும்.
நெருக்கடியான சூழல்
வேலை இழப்பு, அல்லது சிறுதொழில் செய்ய முற்படுவது போன்ற சூழல்கள், உங்கள் பொருளாதாரத்தின் மீது அதிக நெருக்கடியை உண்டாக்கும். உங்களைத் துரதிர்ஷ்டம் துரத்தும் பட்சத்தில், நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தை அவசரத் தேவைக்கென அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை கூட ஏற்படலாம்.
பணிக்காலத்தின் தொடக்கநிலையிலேயே ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடி, பணி நிமித்தம் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும் கூடக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கும்; ஏனெனில், நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குவதால், தற்காலிகமாக நிச்சயமற்ற தன்மையுடன் இருந்தாலும் நல்ல ஆதாயம் தடரக்கூடிய வேலை வாய்ப்புகளையும் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள்.
வெற்றியை எட்ட கடினமாக உழையுங்கள்
நீங்கள் கடினமாக உழைக்கத் தயங்கினால், வெற்றியை எட்ட முடியாது. ஒரு நாளின் முன்னேற்றம் கூடப் பெரிய அளவிலான நன்மையைக் கொடுக்கும்; எனவே, உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், உங்கள் இலக்குகளை எட்டுவதற்கும், அவ்வப்போது நிதி ஆலோசகர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுங்கள்.