கவர்ச்சிகரமான முதலீட்டில் வருவாயை வழங்கும் சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன. தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர்வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் அடக்கம். 4 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதம் வரை இதற்கு வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உள்ளது.
அஞ்சலகச் சேமிப்பு கணக்கு
அஞ்சலகங்களில் ரொக்கப்பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர கணக்காக இருப்பின் ஆண்டுதோறும் 4 சதவீத வட்டி அதிகரிக்கப்படும். சேமிப்பின் மூலம் வளர்ந்த வட்டி 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன. இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டுகள் வழங்கப்படுகிறது.
அஞ்சலகத் தொடரவைப்புத் திட்டம்
நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு காலமான 5 ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடைவெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 விழுக்காடு அளிக்கப்படுகிறது. மாதம் 10 ரூபாய் செலுத்தியிருந்தால்,ஆண்டு இறுதியில் அதன் முதிர்ச்சித் தொகை 717.43 காசுகளாக வளர்கிறது. முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டம்
ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப் தொகையுடன் மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக (ஜாய்ண்ட் அக்கவுண்ட்)இருப்பின் 9 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 விழுக்காடு.
அஞ்சலக நிலையான வைப்புக் கணக்கு
நிலையான வைப்புத் திட்டத்தில் குறைந்த பட்சம் 200 ரூபாயுடன் கணக்கைத் தொடங்குங்கள். காலாண்டு வாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஒருவரது நிலையான வைப்புத் திட்டம் ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றப்படும். ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 விழுக்காடு வட்டியும், 2 மற்றும் 3 ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.5 ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.
சுகன்யா சம்ரிதி திட்டம்
பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம். ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 250 ரூபாய்ச் செலுத்தினால் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அண்மையில் அரசு அறிவித்தது. ஏற்கனவே ஆண்டுக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது.அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 150000 ஆயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு நிறைவடைந்தால் கணக்கைத் தொடங்கலாம். பெண்குழந்தையின் பெற்றோரோ, சட்டப்படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். அதே ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி. இரண்டு குழந்தைகளாக இருந்தால் இரு வேறு கணக்குகளைத் தொடங்கலாம்.