உங்களிடம் கிரிடிட் கார்டு உள்ளதோ இல்லையோ, அது உங்களை அதிகம் செலவாளிக்கத் தூண்டுவதாகவும், நீங்கள் சேமிப்பதை கடினமாக்குவதாகவும் அடிக்கடி எண்ணுவீர்கள். உங்கள் கிரிடிட் அட்டையின் அதிகபட்ச கடன் வரம்பை அடையும் வரை செலவழிப்பதை உங்களாலேயே தடுக்க முடியாமல் போகும் பிரச்சனை அடிக்கடி ஏற்படுவதுண்டு. மேலும் உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரிடிட் அட்டைகள் இருக்கும் பட்சத்தில், தொடர்ந்து நிறையச் செலவாளிக்க விரும்புவீர்கள்.
கடன் வரம்பு என்றால் என்ன?
'கிரிடிட் கார்டு லிமிட்' எனப்படும் கடன் அட்டை வரம்பு என்பது, ஒவ்வொரு மாதமும் கிரிடிட் அட்டையைப் பயன்படுத்திக் கூடுதல் வட்டி கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பது தான்.
இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் இன்ன பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.
உங்களின் மாத சம்பளம் ரூ50,000 ஆக இருந்து, கடன் வரம்பு ரூ2 லட்சமாக இருப்பதால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ1 லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவாளிக்க உதவியாக இருக்கும் மற்றும் அந்த வரம்பையும் தாண்டி செலவுகள் போகாது என நினைப்பீர்கள். ஆனால் அதை ஏன் செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ.
கிரிடிட் ஸ்கோருக்குப் பாதிப்பு
அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணிற்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவாளிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல பண மேலாண்மைக்கான குறியீடும் ஆகும்.
சிறப்பாகச் செலவாளிக்க உதவாது
ஏற்கனவே குறிப்பிட்டபடி, கடன் மதிப்பெண் என்பது உங்களின் பண மேலாண்மை திறனை சார்ந்தது. எடுத்துக்காட்டாக, உங்களின் கடன் வரம்பை ரூ2 லட்சத்தில் இருந்து ரூ1 லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். இதுவும் உங்களின் சம்பளமான ரூ50,000 ஐ கொண்டு திரும்பச் செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும் மற்றும் விலையுயர்ந்த பொருட்களில் செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.
செலவழிக்கும் சதவீதத்தில் மாற்றம்
ரூ2 லட்சம் வரம்புள்ள கடன் அட்டையில் ரூ50,000 செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25% ஆக இருக்கும். அதுவே ரூ1 லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50% ஆக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30% வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். எனவே அதிக வரம்புள்ள அட்டையில், 30% என்பது மிகப்பெரிய தொகையாக இருக்கும்.
அவசரக்காலத்தில் உதவும்
கடன் அட்டைக்கான முக்கியப் பயன்பாடே, அவசரக்காலச் செலவுகளில் உதவுவது மற்றும் விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்குவது. அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் இயந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரக்கால மற்றும் திட்டமிட்ட செலவுகளின் போது பணத்தை மேலாண்மை செய்யலாம்.
முடிவு தான் என்ன?
கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, கிரிடிட் கார்டு பணத்தைத் திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கக்கொள்ள வேண்டாம். அதற்குப் பதிலாகத் திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள். உங்களின் நோக்கம் கிரிடிட் அட்டை வரம்பை உயர்த்துவதாகத் தான் இருக்க வேண்டுமே தவிரக் குறைப்பது அல்ல. இது எதிர்காலத்தில் கனவு இல்லம் அல்லது கார் போன்ற தனித்துவப் பொருட்களை வாங்க பெரிய அளவில் கடன் பெற முயற்சிக்கையில் உதவியாக இருக்கும்.