என்னது அம்பானிக்குக் கடனா என்று வாயப் பிழக்காதீர்கள். ஆமாம் அம்பானியாகவே இருந்தாலும் கடன் வாங்கினால் எதை எல்லாம் விற்க வேண்டி இருக்கிறது எனப் பாருங்கள்.
மொத்தக் கடன்
அனில் அம்பானி நடத்தி வரும் நிறுவனங்களான ஆர்காம், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா மற்றும் ரிலையன்ஸ் நவல் போன்ற நான்கு நிறுவனங்களுக்கு மட்டும் 1,03,158 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு சுமாராக 10,000 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டி வருகிறார்கள், இல்லை வட்டி கட்டவே தடுமாறுகிறார்கள்.
ஆர்காம் விற்கும் டெலிகாம்
இருப்பதிலேயே அனில் அம்பானி குழுமத்தில் அதிகக் கடன் கொண்ட நிறுவனம் இது. மார்ச் 2018 நிலவரப்படி இந்த நிறுவனத்துக்கு 47,000 கோடி ரூபாய் கடன் நிலுவை. இதை அடைக்க தன்னுடைய டெலிகாம் உரிமைகள், ஸ்பெக்ட்ரம், டவர்கள், ஃபைபர் போன்ற நிறுவன சொத்துக்களை விற்று 25,000 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது.
கடனுக்கு நிலம்
மேலும் தன்னுடைய நவி மும்பையில் உள்ள 125 ஏக்கர் நிலத்தை விற்று 10,000 கோடி ரூபாயைட் திரட்ட இருக்கிறார். இந்த நிறுவனம் சப் மெரைன் கேபிள் சிஸ்டத்தோடு, எண்டர்பிரைஸ் சர்வீஸ் ப்ரொவைடராக தொடர்ந்து இயங்கி வரும்.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா
இனி கண்டதை எல்லாம் பிசினஸ் செய்யாமல் நாங்கள் ஒரு ஓரமாக ராணுவம், பொறியியல், கட்டுமானம் போன்ற இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சார்ந்த பிசினஸ்களை மட்டுமே பார்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார் அம்பானி. இந்த நிறுவனத்துக்கு மார்ச் 2018 நிலவரப்படி சுமாராக 22,000 கோடி ரூபாய் கடன் நிலுவை. இதை அடைக்க ரிலையன்ஸ் பவர் முன் வந்து இருக்கிறது.
ரிலையன்ஸ் பவர் டு அதானி பவர்:
மும்பையில் இருக்கும் ரிலையன்ஸ் பவர் டிரான்ஸ்மிஷன் டிவிஷனை மட்டும் (முழு ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தை அல்ல) 18,800 கோடி ரூபாய்க்கு அதானி பவர் நிறுவனத்திடம் விற்று வரும் பணத்தை வைத்து ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் கடன்களை அடைக்க இருக்கிறாராம். மும்பை வாசிகளில் சுமார் 30 லட்சம் பேருக்கு மின்சார வசதி தரும் இந்த லாபகரமான விடிஷனைத் தான் ரிலையன்ஸ் பவர் அதானிக்கு விற்று இருக்கிறது. இதனால் ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் கடன் வெறும் 7,500 கோடி ரூபாயாக சரியும்.
ரிலையன்ஸ் பவரின் கடன்:
இந்த நிறுவனத்துக்கும் ஒரு 15,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இதுவரை இந்த நிறுவன் செயல்பாட்டில் இருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து சீராக கடனை அடைத்து வருவதால் எந்த பிரச்னையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் நவல் & இன்ஜினியரிங்:
இந்த நிறுவனத்துக்கும் 5,300 கோடி ரூபாய் கடன் நிலுவை. வட்டிக் கணக்கு தனி. இந்தியாவிலேயே இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டும் தான் கப்பல் கட்டுமானத்தில் பணியாற்றுகின்றன. அதில் ஒன்று இந்த நிறுவன்ம். இருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக நஷ்டக்கணக்கு எழுதுவது, ராணுவத்தில் இருந்து அதிகம் ஆர்டர்கள் வராமல் இருப்பது போன்ற காரணங்களில் மொத்தமும் நஷ்டத்திலேயே இருக்கின்றன. இந்த் அநிறுவனத்தின் 5,300 கோடி ரூபாய் கடனைத் தீர்க்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு முறையிட்டிருக்கிறார் அனில் அம்பானி.
போதாக்குறைக்கு மக்கள் கடன்:
ஒரு கட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அம்பானிக்கு கடன் தரத் தயங்கியது. சரி நீ இல்லன்ன என்ன என்று நான் கன்வர்டிபிள் டிபெஞ்சர்களை (கடன் பத்திரங்களை) வெளியிட்டு மக்களிடம் இருந்து பிசினஸுக்குத் தேவையான பணத்தைத் திரட்டினார். கடன் பத்திரங்களுக்கு வட்டிக் கூட தர முடியாமல் தத்தளித்தார். கடைசியாக கடந்த ஜூலை 27-ம் தேதி, என்னால் மக்களூக்கு தர வேண்டிய முதல் தொகையைக் கூடத் திருப்பித் தர முடியவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
கடன் எல்லாத்தையும் கெடுத்துடுச்சு:
உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், என் நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் நல்ல க்ரெடிட் ரேட்டிங் கொடுக்கவில்லை. அதனால் என் சொத்துக்களை விற்கப் போகும் போது எல்லாம் என் சொத்துக்கான் மதிப்பை குறைத்தே விலை கூறுகிறார்கள். என் சொத்துக்கு மதிப்பு குறையும் போது, அது நேரடியாக என் நிறுவனத்தின் மதிப்பீட்டையே பாதித்துவிட்டது. இப்போது வந்த விலைக்குத் தான் என் சொத்துக்களை விற்று கடனை திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கிறது. எவ்வளவு நல்ல சொத்துக்களாக இருந்தாலும், க்ரெடிட் ரேட்டிங் மோசமாக இருப்பதால் ஓரளவுக்கு மேல் சொத்துக்களுக்கான் மதிப்பை கூட்டி விற்க முடியவில்லை. இவர்களே இப்படி என்றால் ரேட்டிங் ஏஜென்சிகளான க்ரிசில், இக்ரா போன்றவர்கள் என்னை கடனாளியாகவே அறிவித்துவிட்டார்கள்.
இனி எல்லாம் கடனுக்கே:
என் குழும நிறுவனங்களில் இருக்கும் சொத்துக்களை விற்று வரும் ஒவ்வொரு ரூபாயும் முதலில் கடனைத் திருப்பிச் செலுத்தவும், எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடனாளி என்கிற பெயரை மாற்றவுமே பயன்படுத்துவேன்.
எப்போது மீள்வேன்
"வரும் 2020-ல் இருந்தாவது, அனில் ஏடிஆஜி என்றழைக்கப்படும் அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்கள் கடன் இல்லாத, சுதந்திர நிறுவனங்களாக செயல்படும் என எதிர்பார்கிறேன்" இது அனில் அம்பானி சொன்னது.
கடன் அம்பானியையே முறிக்கிறது என்றால் என்னையும், உங்களையும் போன்ற சாமானியர்களை என்ன செய்யும். இனி கடன் வாங்கத் தோன்றினால் இந்தக் கட்டுரையை ஒரு முறைப் படித்துப் பாருங்கள்.