உலகப் பணக்காரர் bill gates-க்கே 55 பில்லியன் நஷ்டமா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆனால் அதையும் தாண்டி இன்னும் சிரித்த முகத்தோடு இருக்கிறாரே அது தான் பில் கேட்ஸ். வாருங்கள் நஷ்டத்தின் கதையைப் பார்க்கலாம்.
ஆப்பிள்
1997-ல் ஆப்பிள் நிறுவனம் கடன் பிரச்னையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைக் காப்பாற்றும் ஆபத் பாந்தவனாக வந்தது பில் கேட்ஸ் தான். சில கண்டிஷன்களுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ய சம்மதித்தார் பில் கேட்ஸ்.
ஓட்டு உரிமையற்றப் பங்குகள்
ஒரு பங்கின் விலை 1000 டாலர் என்று 1,50,000 ஒட்டு உரிமை இல்லாத பங்குகளை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். ஆங்கிலத்தில் Non Voting Preference share என்று சொல்வார்கள். இந்த 1,50,000 பங்குகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்று ஒரு அடிக் கோடிட்டுத் தான் விற்றது ஆப்பிள். அதை மீறி விற்றால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை சரமாரியாக சரியத் தொடங்கும் என்பதாலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் உஷாராக இந்த சரத்தைச் சேர்த்துக் கொண்டார்.
கன்வர்ஷன்
இந்த 1,50,000 நான் வோட்டிங் பங்குகளை, நீங்கள் வேண்டுமானால் வோட்டிங் ப்ரிஃபரென்ஸ் ஷேர்களாக சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் (மாற்றம் செய்து கொள்ளலாம்) என ஆப்பிள் நிறுவனம் ஆஃபர் கொடுத்தது.
2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஆஃபரை பயன்படுத்தி, அனைத்து நான் வோட்டிங் பங்குகளையும், ஒரு பங்குக்கு 8.25 டாலர் என்று வோட்டிங் ஃப்ரிஃபரென்ஸ் பங்குகளாக (Voting Preference share) மாற்றினார். ஆக இப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கையில் 18.2 மில்லியன் ஆப்பிள் நிறுவனப் பங்குகள்.
விற்பனை
இந்த 18.2 மில்லியன் பங்குகளையும் பில்கேட்ஸ் 2003-ஆம் ஆண்டு வந்த விலைக்கு விற்று விட்டார். இதில் எவ்வளவு ரூபாய் லாபம் பார்த்தார். வந்த லாபத்தை தனக்கு பயன்படுத்திக் கொண்டாரா அல்லது வழக்கம் போல தான தர்மம் செய்துவிட்டாரா என்று கூடத் தெரியவில்லை. மீடியாக்களிலும் இதைப் பற்றி பெரிய செய்திகள் ஒன்றும் இல்லாமல் கப்சிப் என்று விற்றுவிட்டார்.
ஒரு வேளை வைத்திருந்தால்
2018-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலர். இந்த ஆப்பிள் பங்குகளை அப்படியே வைத்திருந்தார் என்றால், இன்றும் அமேஸான் நிறுவனரான ஜெஃப் பிசாஸுக்கு முதலிடம் கிடைத்திருக்காது. கிட்டதட்ட 55 பில்லியன் டாலர் ஆப்பிள் பங்குகள் மதிப்பு மட்டுமே இருந்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் 140 பில்லியன் டாலரோடு, பணக்காரர் பட்டியலில் இன்னும் சில ஆண்டுகள் ராஜாவாகவே இருந்திருப்பார்.
எப்படி...?
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நன்றாக செயல்படும் நிறுவனங்களின் பங்குகள் தானாகவே, விலை ஏறும். அப்படி ஏறிய விலை, பங்குகளுக்குக் கொடுக்கும் டிவிடெண்ட் தொகை, பங்குகளுக்குக் கொடுக்கும் போனஸ் போன்றவைகள் எல்லாம் சேர்ந்து 55 பில்லியனை விட கூடுதாலாகவே மதிப்பீடுகள் வந்திருக்கும். இப்போது ஸ்டாக் ஸ்பிலிட் மூலம் மட்டும் எவ்வளவு லாபம் வந்திருக்கும் என்று பார்ப்போம்.
ஸ்டாக் ஸ்பிலிட்
ஒரு நிறுவன பங்கின் சந்தை விலை மிக அதிகமாக, அல்லது ஒரு சாதாரண நடுத்தர முதலீட்டாளர் வாங்க முடியாத விலைக்கு போகும். அந்த நேரத்தில் பங்கின் முக மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, சந்தை விலையை குறைப்பார்கள்.
உதாரணமாக: யுனைடெட் ஸ்பிரிட் பங்குகளை எடுத்துக் கொள்வோம். கடந்த ஏப்ரல் 13, 2018 அன்று அந்த பங்கின் விலை 3480 ரூபாய். இதை ஐந்து பங்காக பிரித்தார்கள். ஆக 3480-ஐ ஐந்தால் வகுக்க வேண்டும். அவ்வளவு தான் ஸ்டாக் ஸ்பிலிட். இப்போது ஒரு பங்கின் விலை 696.
2:1 ஸ்டாக் ஸ்பிலிட்
தன் கைவசம் இருந்த 18.2 மில்லியன் ஆப்பிள் பங்குகளை, 2003-ல் விற்காமல் வைத்திருந்தால், 2005-ம் ஆண்டு அறிவித்த ஸ்டாக் ஸ்பிலிட் படி ஒரு பங்கு இரண்டாக பிரியும். ஆக 18.2 மில்லியன் பங்குகள் 36.4 மில்லியன் பங்குகளாக அதிகரித்திருக்கும்.
7:1 ஸ்டாக் ஸ்பிலிட்
2005-ம் ஆண்டு ஸ்டாக் ஸ்பிலிட்டுக்கு பிறகும், 36.4 மில்லியன் ஆப்பிள் பங்குகளை வைத்திருந்தால் சந்தையில் அபாரமான விலை ஏற்றம் கண்டதை அனுபவித்திருக்கலாம்.
அதையும் தொடர்ந்து வைத்திருந்தால், ஒரு பங்கு ஏழு பங்காகப் பிரியும். இப்போது 36.4 * 7 = 25.48 கோடிப் பங்குகள் கையில் இருந்திருக்கும். கணக்கிட்டுப் பாருங்கள். இன்றைய விலைக்கு இந்த 25.48 கோடி பங்குகளை * 218 டாலருக்கு விற்று இருந்தால் =5,554.64 கோடி டாலர் கையில் இருந்திருக்கும். அதை மீண்டும் இந்திய ரூபாய் மதிப்புக்கு கணக்கிட்டுப் பாருங்களேன். 5,554.64 * 70 ரூபாய். சுமாராக 3.88 லட்சம் கோடி ரூபாய்.
பில்கேட்ஸ் பதில்
இந்தக் கணக்கீடுகளை பில்கேட்ஸ் இடமே காட்டி, "என்னங்க அவசரப்பட்டு வித்துட்டீங்களே" என்று கேட்டதற்கு சிம்பிளாக சிரித்துவிட்டு அடுத்த கேள்வி என்று கேட்கிறார். இப்போது சொல்லுங்கள் இவர் நஷ்டம் எவ்வளவு பெரியது.
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், முதலில் கற்க வேண்டிய பாடமே, காத்திருத்தல். என்ன நிலை வந்தாலும் என் முதலீட்டு முடிவுகள் சரி என்றால் சும்மா இருந்தாலே போதும். உங்களுக்கான பணம்,உள்ளூர பெருகிக் கொண்டே இருக்கும். நல்ல முதலீடுகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.