சிட் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து ஏமாறுவதை நாம் செய்திகள் மூலம் அறிந்து இருப்போம். சிலருக்கு அனுபவமும் இருக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுச் சம்பாதித்த பணத்தினை மோசடி செய்யும் சிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமல் வங்கிகள் அளிக்கும் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் அது பாதுகாப்பானதாகவும், நிலையான லாபத்தினை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
அதே போன்று சிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து ஏமாறக் கூடிய ரிஸ்க்கும் இருக்காது. எனவே எந்த அபாயமும் இல்லாமல் சிட் ஃபண்டுகள் போலவே மாத தவணையில் வங்கிகளில் தொடர் வைப்பு நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும், சிட் ஃபண்டுக்கும் ரெக்கரிங் டெபாசிட்க்கும் உள்ள வித்தியாசங்களையும் இங்குப் பார்ப்போம்.
சிட் ஃபண்டு முதலீடு - ரெக்கரிங் டெபாசிட்
சிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது 20,000 ரூபாய், 50,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய் என்ற முதலீட்டு இலக்குடன் மாத தவணையில் பணத்தினைக் கட்ட வேண்டும். பின்னர் இடையில் ஏதேனும் ஒரு மாதத்தில் பணம் தேவைப்பட்டால் அந்த மாத ஏலத்தில் பங்கேற்று குறிப்பிட்ட அளவிலான தொகையினை விட்டுத் தருவதாக ஏலத்தில் கூறி யார் அதிகபட்ச தொகையினை அந்த மாதம் விட்டு தருகிறார்களோ அவர்களால் சீட்டை எடுக்க முடியும். சிட்டை ஏலத்தில் எடுக்கும் போது விட்டுத் தரப்படும் தொகை பிற முதலீட்டாளர்களுக்கு லாபமாகக் கிடைக்கும். இதுவே பணம் தேவைப்படும் ஏலம் அதிகமாகப் போனால் எடுக்க முடியாமல் போகும். ரிஸ்க்கும் உண்டு.
இதுவே வங்கி தொடர் வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகை செலுத்த வேண்டும். இதுவே முதிர்வு காலத்தின் போது வட்டி தொகையுடன் திரும்பக் கிடைக்கும். இடையில் பணம் வேண்டும் என்றால் வட்டி விகித லாபம் சற்று குறையும். ஆனால் இதில் சிட்களை விட லாபம் குறைவாகவே இருக்கும். இதுவே சிட் ஃபண்டுகளை நம்பி சென்று மக்கள் ஏமாறுவதற்கான முக்கியக் காரணமாக மாறிவிடுகிறது.
சரி, பாதுகாப்பான வங்கிகளின் தொடர் வைப்பு நிதி திட்டங்களில் அளிக்கப்படும் தொடர் வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் குறித்து இங்குப் பார்ப்போம்.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 6.85 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 7.35 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கியின் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் 1 வருடம் 5 நாள் முதல் 1 வருடம் 11 நாட்கள் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 8.20 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியில் 27 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 7.25 சதவீத லாபம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 7.75 சதவீத லாபம் கிடைக்கும்.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கியின் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை முதலீடு செய்யும் போது 7.25 சதவீத லாபம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 7.75 சதவீத லாபம் கிடைக்கும்.
கோடாக் மஹிந்தரா வங்கி
கோடாக் மஹிந்தரா வங்கியின் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் 15 மாதம் முதல் 21 மாதம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 8.00 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.
முதலீட்டுத் தவனை வரம்பு
சில வங்கிகள் குறைந்தது மாத தவணையாக 1000 ரூபாய் வரை இருக்க வேண்டும் என்று கூறும் நிலையில் சில வங்கிகளில் 50 ரூபாய் முதல் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கின்றன.