முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி இருவரின் மீதும் வருமான வரித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இருக்கும் வழக்குகளை சமாளிக்கவே படாத பாடு படும் போதும் இப்போது மேலும் ஒரு வருமான வரித்துறை வழக்கா என்று ப சிதம்பரம் கவலையில் இருக்கிறார்.
அதிகார துஸ்பிரயோகம்
ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கும் போது நிதி அமைச்சகம் வழங்க வேண்டிய அனுமதி ஒரு தலைப்பட்சமாக, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த அனுமதியை தன் தந்தை ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அதிகார துஸ்பிரயோகம் செய்து வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கை மத்திய புலனாய்வுட் துறை விசாரித்து வருகிறது.
முதலீடுகளில் சொதப்பல்
வாசன் ஹெல்த் கேர் குழுமத்தில் கார்த்தி சிதம்பரம் ஒரு கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார் என்பது முதலில் வெளியே தெரிய வந்தது. அதன் பின் சிகுயா கேப்பிடல் (Sequoia Capital India) நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு அந்நிய நேரடி முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். வரும் அந்நிய நேரடி முதலீடுகளை, தன் இஷ்டத்துக்கு பணச் சலவை செய்து, பல்வேறு நிறுவனங்களுக்கும், சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் நிறுவனங்கள்
இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி எந்த ஒரு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் சொத்துக்களை வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டும். கார்த்தி சிதம்பரத்துக்கு 14 வெளிநாடுகளில் ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தும் அவைகளை குறிப்பிடாமல் மறைத்ததை வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்படி சுத்தி சுத்தி விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தற்போது மேலும் ஒரு வழக்கில் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
வீடு விற்பனை
கார்த்தி சிதம்பரம் தன் பெயரில் இருந்த நிலங்களை 26.74 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார். அதில் 19 கோடி ரூபாய் மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் சட்டப் படி வாங்கிக் கொண்டு, மீதமுள்ள 7.74 கோடி ரூபாயை காசாக (ரொக்கமாக) வாங்கி இருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தை போலவே அவரின் மனைவி ஸ்ரீநிதியும் ஐந்து கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டை விற்று விட்டு, அதில் 3.64 கோடி ரூபாயை மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் முறையாக சட்டப் படி பெற்றுக் கொண்டார். மீதத் தொகையான 1.36 கோடி ரூபாயை கணவர் வாங்கியது போல ரொக்கமாக வாங்கி இருக்கிறார்.
என்ன தவறு
சாமானியர்களே நீங்களும் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள், ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கும் போதும் சரி விற்கும் போது சரி... பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற வேண்டும். அதையும் மீறி காசு (ரொக்கம்) வாங்கினால் இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 படி அது குற்றம். தற்போது கார்த்தி சிதம்பரம் மீது இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தப்பித்த தாய் நளினி
கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் மனைவி வீட்டை விற்ற போது கார்த்தி சிதம்பரத்தின் தாயார் நளினியும் தன் பெயரில் இருந்த சில நிலங்கள் மற்றும் வீடுகளை விற்றிருக்கிறார். ஆனால் அவர் விற்ற தொகையினை முழுமயாக வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து விட்டதற்கு ஆதாரங்கள் சமர்பித்ததால், நளினியின் மீது எந்த ஒரு வருமான வரி வழக்கும் பாய வில்லை.
கார்த்தி சிதம்பரம் கல்வி
கார்த்தி சிதம்பரம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். இவருக்கு இந்த சரத்துகள் எல்லாம் தெரியாதா என்ன... என்று நம் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.