ரோட்டில் ஒருவர் நடந்து போகிறார். திடீரென நம்மிடம் காசு கேட்கிறார். அவருக்கு ஒரு 10 ரூபாய் கொடுத்தோம். வருமான வரிக் கழிவு பெற முடொயுமா..? முடியாது.
நம் நண்பர்கள் சிலர் கேரள வெள்ளத்துக்கு ஆளுக்கு 10,000 ரூபாய் கொடுத்து உதவினார்கள். சந்தோஷம் இப்போது அந்த 10,000 ரூபாயை வருமான வரிக் கழிவு பெற முடியௌமா..? முடியும். எப்படி..?
அதைத் தான் இங்கு விரிவாக பார்க்க இருக்கிறோம். சமீபத்திய கேரள வெள்ளம் தொடங்கி மிகப் பெரிய குஜராத் பூகம்ப நிதி, கார்கில் நிதி என எல்லாவற்றுக்கும் தான தருமம் செய்திருக்கிறோம். ஆனால் அவைகளை எப்படி முறையாக வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டி வரிக் கழிவு பெறுவது... என்பதைத் தான் பார்க்க இருக்கிறோம்.
யாருக்கு வரிக் கழிவு
இந்தியார்கள் அனைவரும், அவர்கள் அளிக்கும் நன்கொடை களுக்கு வரிச் சலுகை பெற முடியும். நன்கொடை வழங்குபவர்கள் தனிநபராகவோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியராகவோ (NRI), நிறுவன மாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்களாகவோ இருக்கலாம். இவர்களில் எந்தப் பிரிவினரும் வழங்கிய நன்கொடைக்கு 80ஜி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். இந்த பிரிவின் கீழ் நன்கொடை கொடுத்ததாக காட்டப்படும் தொகைக்கு வருமான வரித்துறையில் வரிக் கழிவு வேறு உண்டு.
உதாரணம்
ஒருவருக்கு ஆண்டு வருமானம் 12,50,000 ரூபாய். அவர் 2,50,000 ரூபாய் அடிப்படை வரம்புகள் போக, இப்போது 1,87,500 ரூபாய் வருமான வரியாகச் செலுத்த வேண்டும். இந்த 12,50,000 ரூபாயில் அவர் 2,50,000 ரூபாயை கேரள வெள்ளத்துக்கு தானம் செய்திருக்கிறார். அதுவும் கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு செய்திருக்கிறார் என்றால். இந்த 2,50,000 ரூபாய்க்கு வரி செலுத்தத் தேவை இல்லை. அதாவது முன்பு 12,50,000 ரூபாய்க்கு 1,87,500 ரூபாய் செலுத்த வேண்டிய வருமான வரியை இப்போது 1,12,500 ரூபாய் மட்டும் செலுத்தியான் போதும்.
எத்தனை சதவிகிதம் வரிச் சலுகை?
ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த முழுத் தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்க நிபந்தனை இருக்கிறது. நன்கொடையின் தன்மையைப் பொறுத்து தொகையில் 50 முதல் 100% வரிச் சலுகை கிடைக்கும். கீழ்க்காணும் நிதிகளுக்கு நீங்கள் நன்கொடையாகச் செலுத்தும் முழுத் தொகைக்கும் (100%) வரிச் சலுகை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த நிதிகளில் தானம் செய்து வருமான வரியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
80G 100% விலக்குத் திட்டங்கள்
தேசிய விளையாட்டு நிதி
தேசிய கலாசார நிதி
தேசிய குழந்தைகள் நிதி
மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமர் / முதல்வர் பூகம்ப நிவாரண நிதி / புயல் நிவாரண நிதி
மத நல்லிணக்கத்துக்கான தேசிய அமைப்பு நிதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
முதலமைச்சரின் பூகம்ப நிவாரண நிதி
மாவட்ட எழுத்தறிவு குழுக்கள்
தேசிய ரத்த தான கவுன்சில் அல்லது மாநில ரத்த தான கவுன்சில்
இந்திய ராணுவ மத்திய நல நிதி அல்லது இந்திய கடற்படை நல நிதி அல்லது இந்திய விமானப்படை மத்திய நல நிதி
தேசிய சுகவீனம் உதவி நிதி
முதலமைச்சர் அல்லது ஆளுநர் நிவாரண நிதி
ஆட்டிஸம், செரிப்ரல் பால்ஸி, மனவளர்ச்சி குறைபாடு மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நிதி
கிராமப்புற மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டுக் காகக் கிராம/நகரத் தலைவர், மாவட்ட ஆட்சியரிட மிருந்து அனுமதி பெற்று வசூலிக்கும் நன்கொடை.
நீங்கள் வழங்கும் நன்கொடை தொகையில் 50% மட்டும் வரிச் சலுகையாகப் பெறக்கூடியவை...
ஜவஹர்லால் நேரு நினைவு நிதி
பிரதமரின் வறட்சி நிவாரண நிதி
இந்திரா காந்தி நினைவு நிதி
ராஜீவ் காந்தி அறக்கட்டளை வேர்ல்டு விஷன் இண்டியா உதவும் கரங்கள்.
நிதிகள் நிறுவனங்கள் அல்ல
இதுவரை மேலே சொன்னது எல்லாம் நிதித் திட்டங்கள். இவைகள் நிறுவனங்கள் அல்ல. ஒரு நிறுவனத்துக்கு அல்லது ட்ரஸ்டுகளுக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்றால் கூட அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. அதை அடுத்த பத்தியில் நிபந்தனைகளில் பாருங்கள்.
நிபந்தனைகள்!
சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு வழங்கும் வரிச் சலுகைகளுக்கு நிபந்தனை இருக்கிறது. அதாவது, ஒருவர் அவரது வரிக்கு உட்பட்ட வருமானத்தில் 10 சதவிகிதத்தை மட்டுமே நன்கொடை வழங்கி வரிச் சலுகை பெறலாம். இதிலும் 100 சதவிகிதம், 50 சதவிகிதம் வரிச் சலுகை இருக்கிறது.
100% மற்றும் 50% அமைப்புகள்
1. 100% வரிச் சலுகை..!
குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நிறுவனங்கள், சங்கங்கள்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்.
விளையாட்டுப் போட்டிகளுக்குச் செய்யும் ஸ்பான்ஸர்.
2. 50% வரிச் சலுகை..!
அரசு மற்றும் லோக்கல் அத்தாரிட்டிகள் தான தர்மமாக நன்கொடை வழங்குவது.
வருமான வரித்துறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட சபைகள், நிதிகள், நிறுவனங்கள்.
வழிபாட்டுத்தலங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நிதி.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு போன்றவைகளுக்கு வழங்கும் நன்கொடை.
கவனிக்க வேண்டியவை:
நீங்கள் நன்கொடை வழங்கிய அமைப்பு அல்லது அறக்கட்டளையிலிருந்து ரசீது. அந்த ரசீதில் உங்களின் முழுமையான பெயர், முகவரி, வழங்கிய தொகை எண்ணிலும், எழுத்திலும் இருந்தால் நல்லது. அதேபோல், நன்கொடை விவரத்தை, நன்கொடை பெற்ற நிறுவனம் ஃபார்ம் 58-ல் குறிப்பிட்டு வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். முடிந்தால் பான் எண்ணையும் சேர்த்து எழுதச் சொல்லிக் கேளுங்கள்.
80G இருக்கா..?
நன்கொடை பெறும் நிறுவனத்துக்கு வருமான வரித் துறையிடமிருந்து 80ஜி பிரிவின் கீழ் ஒரு சான்றும், அந்த சான்றிதழில் ஒரு எண்ணும் வழங்கப்படும். அந்த எண் சரியானதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதி செய்து கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் நன்கொடை கொடுத்த அமைப்பு அல்லது அறக்கட்டளைக்கு வருமான வரித் துறை 80ஜி சான்றிதழை ஒரு காப்பி வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பின் ஆடிட்டர் வழியாக இந்த பிரச்னையை டீல் செய்து கொள்ளலாம்.
எப்படி வழங்க வேண்டும்
நன்கொடை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். ரூபாய் 2,000க்கு மேல் நன்கொடையை ரொக்கமாக வழங்கினால் அதற்கு வரிச் சலுகை கிடைக்காது. காசோலையாகவோ, Neft, IMPS, RTGS வழியாகத் தான் 2,000 ரூபாய்க்கு மேலான தொகைகளைக் கொடுத்திருக்க வேண்டும். அரிசி, பருப்பு , சேலை, விவசாயப் பொருட்கள், தங்கள் நிறுவனப் பொருட்கள் என பொருளாகக் கொடுத்திருந்தால் வரிச் சலுகை கிடையாது.
பணம் எங்கிருந்து வந்தது
உதாரணமாக அப்துல் என்பவர், கேரள மழை வெள்ளத்துக்கு 5 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி இருக்கிறார் என்றால், அந்த ஐந்து லட்சம் ரூபாய் எங்கிருந்து வந்தது எனக் கேட்டு வருமான வரித் துறை நோட்டிஸ் கூட அனுப்ப வாய்ப்பிருக்கிறது. ஆக நாம் நன்கொடை கொடுக்கும் பணத்தை நாம் முறையாக கணக்கில் காட்ட தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலம் தான்
பிரதமர், முதலமைச்சர் நிவாரண நிதி அல்லது பிரத்யேகமாக மாநில நிதி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதற்கு எல்லாம் குறிப்பிட்ட காலம் வரைதான் 80ஜி-யின் கீழ் சலுகை பெறமுடியும். குறிப்பாக, பூகம்ப நிவாரண நிதி, புயல் மற்றும் சூறாவளி நிவாரண நிதி போன்றவைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரை தான் வரிச் சலுகை கிடைக்கும். நீங்கள் இது போன்ற நிதிகளுக்கு நன்கொடை வழங்கினால், அன்றைய தேதியில் அந்த நிதிகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறதா..? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கஜா புயலுக்கு 10 வருடங்கள் கழித்து நிதி வழங்கிவிட்டு அந்த திட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு கேட்டால் வரி செலுத்தி விட்டு போய் தேடுங்கள் எனச் சொல்வார்கள் வருமான வரித் துறையினர்.
நிறுவனங்களுக்குச் சலுகை!
2009 அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு பதியப்பட்ட நிறுவனம்/அமைப்பு/அறக்கட்ட ளையாக இருந்தால், அவர்கள் 80ஜி சான்றிதழை ஆண்டுதோறும் நீட்டிப்புக்கு விண்ணப்பித்திருக்கத் தேவையில்லை. வருமான வரித் துறை அதிகாரிகள் புதுப்பிக்கச் செய்யச் சொன்னால் மட்டுமே, அறக்கட்டளைகள் 80ஜி சான்றிதழின் நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் போதும் எனச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக என்ன ஆனாலும் முதலில் நன்கொடைக்கான ரசீதோடு அந்த 80G சான்றிதழை மறக்காமல் வாங்கிவிடுங்கள்.