வாழ்கையில் எல்லோரும் ஒரு கட்டத்தில் கடன் வாங்குகிறோம். அப்படி வாழ்கையில் ஒரு முறை கூட பணத்தை கடனாக பெறாமல் வாழ்பவர்கள் மிகவும் சொற்பம் தான். அப்படி வாழ்பவர்களுக்கு முதல் சல்யூட்.
என்னை போல நண்பர்களிடம் தொடங்கி, வங்கிகள் வரை தவிர்க்க முடியாத சூழலில் கடன் வாங்கும் மெஜாரிட்டி அன்பர்களுக்கான கட்டுரை இது.
திடீரென நம் பெற்றோர்களுக்கோ அல்லது குழந்தைகளளுக்கோ உடல் நிலை சரி இல்லை... ஓகே கடன் வாங்கலாம். குழந்தைகளில் பள்ளிக் கூட கட்டணம், கல்லூரிச் செலவுகள், Fees... மிகவும் அவசியமானவைகள். வாங்கலாம். வருங்காலத்தில் அவர்களை விட்டே அவர்களுக்காக வாங்கிய கடனை திருப்பி கட்டச் சொல்லலாம். ஆனால் எந்த மாதிரியான 5 விஷயங்களுக்கு கட்டாயம் கடன் வாங்கக் கூடாது...? வாங்க லிஸ்ட பாத்துறுவோம்.
1. வரி கட்டாமல் இருக்க கடன்
குழப்பமா இருக்கா..? இப்போது ஜனவரி பிப்ரவரி மாதங்களில் தான் நம் அலுவலகங்களில் இருந்து வரி பிடித்தம் செய்யத் தொடங்குவார்கள். அப்படி வரி பிடித்தம் செய்யாமல் இருக்க போதுமான முதலீடுகளை 80C மற்றும் 80CCD பிரிவிவுகளிலும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அப்போது கையில் காசு இருக்காது. அதற்காக வங்கிகளில் கடன் வாங்கி 80சி மற்றும் 80சிசிடி பிரிவுகளில் முதலீடு செய்வார்கள். இந்த மாதிரியான கடன் உங்கள் நடு மண்டையைப் பிளக்கும்.
ஏன்..?
உதாரணமாக ஆறுச்சாமிக்கு 2019 - 20-ல் 5,10,000 ரூபாய் சம்பளமாக வருகிறது. வேறு வருமானங்கள் ஒன்றும் இல்லை. இந்த நேரத்தில் 2019 - 20-க்கு 2,50,000 ரூபாய் போக மீதமுள்ள 2,60,000 ரூபாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். இதை நம் அலுவலகங்களும் கணக்கிட்டு டிடிஎஸ் பிடித்தம் செய்து அரசிடம் செலுத்துவார்கள். இப்போது இந்த 2,60,000-த்தில் 40,000 ரூபாய் நிலையான கழிவுகள் (Standard Deduction) போக மீதமுள்ள 2,20,000 ரூபாய்க்கு 5 சதவிகிதம் என 11,000 ரூபாய் வரி செலுத்த வேண்டி இருக்கும். இந்த 11,000 ரூபாயை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் மொத்த 2,20,000 ரூபாயையும் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக 15% வட்டிக்கு வங்கியில் 2,20,000 ரூபாய் கடன் வாங்குகிறார்கள் என்றால் வட்டியாக மட்டும் 33,000 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு 11,000 ரூபாய் வரியாக செலுத்திவிட்டு போகலாமே..? அதற்கு ஏன் கடன் வாங்க வேண்டும்.
2. முதலீடுகளுக்குக் கடன்
பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட், தங்கத்தில் முதலீடு, நிலத்தில் முதலீடு என தனக்கு சரி எனப் படுவதில் முதலீடு செய்வதில் தவறில்லை. ஆனால் கடன் வாங்கி இவைகளில் முதலீடு செய்வது ரொம்ப தவறு. ரொம்ப ரொம்பத் தவறு. அதுவும் குறிப்பாக வங்கிகளில் 14 - 18 % கடன் வாங்கி இவைகளில் முதலீடு செய்வது ரொம்பத் தவறு.
செய்தால் என்ன ஆகும்
ஆறு மாதங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை சுமார் 300 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று வெறும் 180 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. நண்பனிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி 33 (எண்ணிக்கை) டாடா மோட்டார் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் கதி என்ன. அன்று 10,000 கொடுத்து வாங்கிய 33 டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை, இன்று வெறும் 6,000 ரூபாயாகத்தான் இருக்கும். இதையே வங்கிகளில் வட்டிக்கு கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் கூட உண்டு. இதற்கு ஒரு சமீபத்தைய உதாரணம் அடோல்ப் மெர்க்கில்.
Adolf merckle
2006-ம் ஆண்டில் உலகின் 36-வது பெரிய பணக்காரராகவும், ஜெர்மனியின் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது அவரின் சொத்து மதிப்பு சுமார் 12.8 பில்லியன் டாலர். 2008 உலக பொருளாதார பிரச்னையால் தன் பெரும் பகுதி சொத்துக்கள் காணாமல் போனது. அந்த ஒரு பிரச்னையால் 2008-ம் ஆண்டு முடிவில் அடால்ஃபின் VEM குழும நிறுவனங்களின் கடன் சுமார் 6 பில்லியன் டாலராக அதிகரித்தது. ஒரே வருடத்தில் 18 பில்லியன் டாலர் நஷ்டம். நிறுவனத்தைக் காப்பாற்ற பங்குச் சந்தைகளில் கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொண்டார். இவர் பங்குச் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) பங்குகளில் முதலீடுகளை மேற்கொண்டார். பன் மடங்கு நஷ்டத்தைக் கொடுத்தது. வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாமல், மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் 2009-ல் தற்கொலை செய்து கொண்டார். முதலீடுகள் 99% நாம் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த வருமானத்தைக் கொடுக்காது. ஆக தயவு செய்து கடன் வாங்கி முதலீடு களை மேற்கொள்ள வேண்டாம்.
3. தண்டச் செலவுகள்
அம்பானி, அதானி போன்றவர்களுக்கும், மாத சம்பளம் வாங்குபவர்களூக்கும் தண்டச் செலவுகள் என்பது மாறுபடும். உதாரணமாக இஷா அம்பானிக்கு வைத்த பத்திரிகை எடுத்துக் கொள்வோம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு கல்யாணம் என்றால் ஒரு பத்திரிகை விலை 100 ரூபாய் இருந்தாலே என்னய்யா இவ்வளவு செலவு தேவையா..? என்பார்கள். ஆனால் அம்பானிகளும் அதானிகளும் ஒரு கல்யாண பத்திரிகைக்கு 3 லட்சம் செலவழிக்கலாம். அது அவர்களின் கெத்தைக்காட்ட, பெயர் சம்பாதிக்க செய்யும் செலவுகள்.
எது எல்லாம்..?
நம் வரவுக்கு மீறி நாம் செய்யும் செலவுகள் 1. நம் எதிர்கால வாழ்கைக்கு பயனுள்ளதாக இருக்குமா..? 2. நம்மைச் சார்ந்து இருப்பவர்களின் வாழ்கைக்கு பயன் கொடுக்குமா..? ஆம் என்றால் கடன் வாங்கியாவது அந்தச் செலவுகளைச் செய்யலாம். இல்லை என்றால் கடன் வாங்கி உங்களை மீது நீங்கலே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். சனீஸ்வரன் சாகடித்து விடுவான்.
4. திருமணம்
காதல் திருமணமோ, வீட்டில் ஏற்பாடு செய்த திருமணமோ எல்லாவற்றுக்கும் இன்று லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. பொதுவாக நம் இந்திய கலாச்சாரப் படி எல்லா விழா காலங்கள் மற்றும் நல்ல காரியங்களின் போதும் விருந்தினர்களை மனமாற உபசரித்து, அவர்களை வாழ்த்தி அனுப்புவது தான் வழக்கம். அப்படி உபசரிப்பது அவர்களிடம் ஆசி வாங்கி நலமாக மண வாழ்கையைத் தொடங்குவது சரி... அதற்காக வரம்புக்கு மீறி செலவு செய்ய வேண்டுமா..? ஆம் என்கிறார்கள் நடுத்தர குடும்பத்தினர்கள்.
உதாரணம்..!
ஒரு சாதாரண குடும்பம், அப்பா ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மாதம் பென்ஷனாக 25,000 வருகிறது. அம்மா வீட்டை கவனித்துக் கொள்கிறாள. மகன் தனியார் நிறுவனத்தில் மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறான். இவர்கள் சென்னையில் ராஜா முத்தையா மண்டபத்தை ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாடகை எடுத்து, 3 லட்சம் ரூபாய்க்கு விருந்து ஏற்பாடு செய்து வெட்டி ஜம்பத்தைக் காட்ட வேண்டியது அவசியம் தானா..? காட்டுகிறார்கள். தங்கள் கையிலிருந்த சேமிப்புகள் எல்லாம் கரைந்து போவதோடு, அடுத்த சில வருடங்களுக்கு தங்களை தனி நபர் கடனில் அடைத்துக் கொள்வது தேவை தானா..?
இ.எம்.ஐ
இத்தனை ஜம்பமாக திருமணம் எல்லாம் முடிந்த பின்னும் சொகுசான Sofa set, Furniture-கள், என லட்சங்களில் வீட்டை அழகு படுத்த செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் கையில் இருக்கும் க்ரெடிட் கார்டில் இ.எம்.ஐ-களாக ஒரு எதிரியை இவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்த இ.எம்.ஐ-களை கட்டி முடிப்பதற்குள் குழந்தைகளுக்கான செலவுகள், பள்ளிக் கூட செலவுகள் என அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது. ஆக திருமணத்தை இத்தனை ஜம்பமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களை இத்தனை விலை அதிகமாகவும் வாங்கி செலவழிக்க வேண்டுமா..? என்கிற கேள்விக்கு தேவை இல்லை என செயலில் பதில் அளித்திருக்கிறார் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
ஆச்சர்ய அதிகாரி
பந்தல பசந்த் குமார், ஆந்திரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் தன் மகளுக்கு வெறும் 16,000 ரூபாயில் திருமணத்தை முடித்தார். இப்போது 36,000 ரூபாயில் தன் மகனின் திருமணத்தை முடித்துவிட்டார். தன் வாழ்நாள் சேமிப்பில் ஒரு பெரும் பகுதியை தன் மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துவிட்டார் "என் சக்திக்கு இவ்வளவு தான் முடியும். என்னால் கடன் எல்லாம் வாங்கி ஜம்பமாக செலவழித்து நடத்த முடியாது" என வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். அநேகமாக அவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வந்து கொண்டிருக்கும். அவரே 36,000 ரூபாயில் திருமணத்தை முடிக்கும் போது நாம் எல்லாம் ராஜா முத்தையா மண்டபத்துக்கு செலவழிப்பது...?
பந்தல பசந்த குமார் அறிவுரை
இன்றைய தலைமுறையினர் இ.எம்.ஐ-களை திருப்பிச் செலுத்துவதிலேயே தங்கள் வாழ்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு பொருளை சொந்தமாக காசு கொடுத்து வாங்குவதை விட இ.எம்.ஐ அதிக பிரச்னைக்குரியது. முதலில் அதிக கடன்களால் நம் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே ஒரு அவசரத்தில் எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. வீட்டுத் தேவைகளுக்கான பொருள்களை வாங்குவது செலவு கணக்கில் தான் சேரும். செலவு செய்வதற்காகச் சம்பாத்தியத்தைத் தான் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, கடன் சுமையை பெருக்கிக் கொள்ளக்கூடாது. என இன்றைய இளைஞர்களுக்கு தன் அனுபவ அறிவைக் கொடுக்கிறார் பசந்த் குமார்.
5. எந்தக் கடன் முதலில்
இன்று தனி நபர் கடன்களை வாங்கிவிட்டு இரண்டு மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் வங்கி அதிகாரிகள் போனில் பேசும் தொனியே மாறிவிடுகிறது. அதற்கு பயந்து கொண்டு ஒரு தனி நபர் கடனை அடைக்க, அதிக வட்டிக்கு இனொரு தனி நபர் கடன் வாங்குகிறார்கள். இது தவறு. ஆக எப்படி கடன் வாங்கலாம்.
வட்டி இல்லாக் கடன்
வட்டி செலுத்த வேண்டிய கடன்களை அடைக்க வட்டி இல்லாமல் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ, நாம் வேலை பார்க்கும் நிறுவனத்திலோ கடன் வாங்கி வங்கிகளில் நிலுவையில் இருக்கு க்ரெடிட் கார்ட் பாக்கிகள், தனி நபர் கடன்கள், வீட்டுக் கடன்களை அடைத்துக் கொள்ளலாம். இதே முறையில் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரணம் க்ரெடிட் கார்ட் இரு முனைக் கத்தி போன்றது ஆக அதற்கு எப்போதுமே முதல் இடம். அதற்கு அடுத்து தனி நபர் கடன் அடுத்த ஷார்ப்பான கத்தி, அதன் பின் தான் அதிகம் பாதிப்புகள் இல்லாத வீட்டுக் கடன்.
நோ வட்டி
இப்படி வட்டி கட்ட வேண்டிய கடன்களை அடைத்துவிட்டால், நாம் ஆண்டு கணக்கில் செலுத்த வேண்டிய வட்டி தொகை மிச்சமாகும். ஆக நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாங்கிய கடன் தொகையினை வங்கிக்கு செலுத்தும் இ.எம்.ஐ போல செலுத்தி தப்பித்துக் கொள்ளலாம். தயவு செய்து வங்கிக் கடனை அடைக்க இன்னொரு வங்கிக் கடனை வாங்கி உங்கள் வாழ்கையில் சனி பகவானுக்கு இன்விடேஷன் வைக்காதீர்கள். ஆக ஒரு முறைக்கு, 10 முறை யாரிடம் கடன் வாங்குவதாக இருந்தாலும் யோசியுங்கள், அப்பா, அம்மா, மனைவி, நண்பர்கள் என பலரிடமும் கலந்து ஆலோசியுங்கள். கடன் இல்லாத ஒரு வாழ்கையை வாழத் தொடங்குவோம். அப்படிக் கடன் இல்லாத வாழ்கையை வாழ அன்போடு வாழ்த்துகிறோம்