ஜனவரி, பிப்ரவரி எல்லாமே வரிக் காலங்கள். நாம் வேலை பார்க்கும் அலுவலகங்களில் நம்மிடம் வீட்டு வாடகை, முதலீடுகள் என எல்லாவற்றையும் கேட்டிருப்பார்கள்.
நாம் கொடுத்திருந்தால் நல்லது. கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வரி பிடித்தம் செய்த தொகையை மீண்டும் refund கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
எப்படி..? அதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். ஹெல்த் இன்ஷூரன்ஸ், இ.எல்.எஸ்.எஸ், மற்ற 80C முதலீடுகள். அவ்வளவு தான் இதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலேயே சுமார் 8,250 முதல் 10,000 ரூபாய் வரை டிடிஎஸ் பிடித்த வரியை refund கேட்டு வாங்கலாம்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
உங்கள் வருமானம் எவ்வளவு, என்ன பதவியில் இருக்கிறீர்கள் என்பதையெல்லாம் தாண்டி, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டும். இந்த ஒரு ஹெல்ஹின்ஷூரன்ஸ் உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த்தை உறுதிப் படுத்தும். அதாவது ஒரு நல்ல ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பெரிய அளவிலான மருத்துவச் செலவுகளை காத்துவிடும்.
அட்மிஷன்
பள்ளி அட்மிஷன் ஆனாலும் சரி, மருத்துவமனைகளில் அட்மிஷனானாலும் சரி செலவு கொஞ்ச பலமாகத் தான் இருக்கும். உங்கள் வாழ்நாள் சேமிப்புகளை ஒரு நொடியில் காலி செய்யும் வல்லமை இந்த இரண்டு அட்மிஷன்களுக்கும் உண்டு. ஆக மொத்த சேமிப்பை பலி கொடுப்பதற்கு பதிலாக கொஞ்சமே கொஞ்சம் செலவு செய்து நல்ல ஹெல்த் இன்ஷூரன்ஸை எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு செய்யும் செலவுகளை அப்படியே 80D பிரிவின் கீழ் கணக்கு காட்டி 25,000 முதல் 55,000 ரூபாய் வரை வரிக் கழிவு பெறலாம். இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதால் 1250 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை வரியை சேமித்துக் கொள்ளலாம்.
இ.எல்.எஸ்.எஸ்
இந்திய வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80C-ன் படி வரிச் சலுகை பெற இந்த சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ELSS - Equity Linked Savings Scheme என்பது தான் இதன் விரிவாக்கம். இ.எல்.எஸ்.எஸ் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யக் கூடிய சேமிப்புத் திட்டம் என்பதால் வளர்ச்சி நன்றாக இருக்கும். இ.எல்.எஸ்.எஸ் வகை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும்.
பிரித்துச் செலுத்துங்கள்
இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் 12 மாதத் தவணையாகவோ, நிதியாண்டில் ஒருமுறை என மொத்தமாகவோ முதலீட்டுத் தொகையைச் செலுத்தலாம். இந்த ஃபண்ட் நீண்ட கால அளவில் அதிக வருமானத்தைத் தரக்கூடியது. முன்பே சொன்னது போல இதில் முதலீடு செய்யும் பணம் முழுமையாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதால் நீண்ட காலத்தில் நலல் வளர்ச்சி இருக்கும். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்திருக்கிறது. லாபத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்.
இ.எல்.எஸ்.எஸ் குறிப்பு
இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் சேர மார்ச் 25-ம் தேதிக்குள் எல்லா ஏRபாடுகளையும் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மார்ச் 31-ம் தேதிக்குள் பணம் முதலீட்டுக்கு போய் இருக்க வேண்டும் அப்போது தான் அது 2018 - 19 நிதி ஆண்டோடு சேர்க்கப்படும். 80C பிரிவு முதலீடுகளிலேயே அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு இது மட்டும் தான்.
80C முதலீடுகள்
செல்வமகள் சேமிப்புத் திட்டமோ, கிஷான் விகாஸ் பத்திரா, மூத்த குடிமக்கள் எஃப்.டி, 5-ஆண்டு எஃப்.டி, லைஃப் இன்ஷூரன்ஸ், டேர்ம் இன்ஷூரன்ஸ், பென்ஷன் ஃபண்டுகள் என எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் மார்ச் 25-க்கு முன்பே அதற்கான வேலைகளைத் தொடங்கி விடுங்கள். ஏறத்தாழ இ.எல்.எஸ்.எஸ் தவிர மற்ற எல்லா முதலீடுகளுமே 8 - 9 சதவிகிதம் வரை மட்டுமே வருமானம் கொடுக்கக் கூடியவைகள். இந்த எல்லா முதலீடுகளும் அஞ்சலக அலுவலகங்களிலும், ஆன்லைனிலுமே செய்துவிடலாம். எனவே விரைவில் முதலீடு செய்து 7,500 ரூபாய் வரை வரியை சேமியுங்கள்.