டெல்லி: கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மத்திய நிதி அமைச்சகம், ஜிஎஸ்டி கவுன்சில் என பலரும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் பல சட்டங்கள் மற்றும் விதிகள் இந்த ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
அவற்றில் எது எல்லாம் ஒரு சாமானியருக்கு முக்கியமோ அவைகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம்.
இனி இந்த ஏப்ரல் 01, 2019 முதல் கீழே உள்ள 7 மாற்றங்கள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே ஒரு முறை படித்துப் பாருங்களேன். உங்களுக்குத் தேவையான விஷயம் கூட இருக்கலாம்.
வருமான வரி 5 லட்சம் ரூபாய் வரை
இந்த நிதி ஆண்டில் இருந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு முழுமையாக வரிக் கழிவு பெறலாம். ஆனால் வரி வரம்பு இன்னும் மாற வில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஒருவருக்கு எல்லா கழிவுகளும் போக 6.50 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்றால். அவர் முதல் 2.5 லட்சத்துக்கு வரி செலுத்தத் தேவை இல்லை. அடுத்த 2.5 லட்சத்துக்கு 5% வருமான வரியும், அடுத்த 1.5 லட்சம் ரூபாய்க்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.
Notional Rent
ஒருவருக்கு ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டை பயன்படுத்தவும் முடியாமல், வாடகைக்கு விட முடியாமல் வைத்திருந்தால் அந்த வீடுகளுக்கு குறைந்தபட்சம் வாடகை வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டு வராத வருமானத்துக்கு வரி கட்டிக் கொண்டிருந்தோம். அந்த தேவை இல்லாத வரிச் சுமைகளை இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வரி செலுத்த வேண்டாம்.
நிலையானக் கழிவுகள்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு 40,000 ரூபாய் நிலையான கழிவுகளாக கொடுத்தார்கள். இப்போது இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு 50,000 ரூபாயாக நிலையான கழிவுகளை கொடுத்திருக்கிறார்கள். ஆக ஒரு நிதி ஆண்டில் வரும் மொத்த சம்பளம் அல்லது வருமானத்தில் 50,000 ரூபாயை நிலையான கழிவாக ஒதுக்கிவிடலாம். வரி செலுத்த வேண்டாம்
டிடிஎஸ் (TDS)
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் வரும் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வங்கிகள் நேரடியாக வரும் வட்டி வருமானத்திலேயே டிடிஎஸ் முறையில் வரி பிடித்தம் செய்வார்கள். இனி ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் வந்தால் தான் டிடிஎஸ். அதுவரை டிடிஎஸ் பிடிக்க வேண்டாம்.
வீடு
ஏப்ரல் 01, 2019-க்குப் பிறகு யார் வீடு வாங்கினாலும் புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் படி வரி செலுத்தினால் போதும். விலை குறைந்த Affordable homes ரக வீடுகள் என்றால் 1% வரி, மற்ற ரக வீடுகள் என்றால் 5% ஜிஎஸ்டி வரி செலுத்தினால் போதும்.
வீடு விற்ற பணம்
வீட்டை விற்று வரும் பணத்துக்கு 2018 - 19 நிதி ஆண்டு வரை நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் இந்த 2019 - 20 முதல் வீட்டை விற்று வரும் 2 கோடி ரூபாய் வரையான பணத்துக்கு எந்த ஒரு நீண்ட கால மூல தன ஆதாய வரி செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக இரண்டு வீடுகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகையை நாம் வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
டீமேட் கணக்குகள்
இனி பங்குகளை டீமேட் கணக்குகள் வழியாக மட்டுமே விற்க முடியும் என இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் செபி அமைப்பு சொல்லி இருக்கிறது. ஆக இனி டீமேட் கணக்கு இல்லாமல் பங்குகளில் முதலீடு செய்வது, பங்குகளை விற்பது கிட்டதட்ட சாத்தியமில்லை.