இன்று (ஏப்ரல் 04, 2019) சில மணி நேரத்துக்கு முன் தான் மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கமிட்டி, 0.25 சதவிகித ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை குறைத்தார்கள்.
இப்படி வட்டி விகிதத்தை குறைத்ததற்கு ஆர்பிஐ இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணப் புழக்கம் குறைந்திருப்பதை காரணமாகக் காட்டி வட்டி விகிதங்களைக் குறைத்திருக்கிறது.
அதோடு உணவுப் பணவீக்கத்தையும் அடுத்த ஆறு மாதங்களில் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ரெப்போ ரேட் வட்டி வகிதத்தை அறிவித்ததாகச் சொல்கிறது ஆர்பிஐ. சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் நபர்களுக்கு என்ன பிரச்னை..?
வட்டி குறையும்
பொதுவாக வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு இந்த ஆர்பிஐ வட்டி விகித அறிவிப்புகள் ஒரு வித பதற்றத்தைக் கொடுக்கும். ஆர்பிஐ-ன் வட்டி விகிதங்கள் குறைந்தால், தங்களுக்கு கிடைக்கும் வட்டியும் குறைந்து விடும். வட்டி குறைந்தால், தங்களுக்கான வருமானமும் குறைந்து விடும் எனப் பதறுவார்கள்.
வங்கி செயல்பாடு
இதைப் புரிந்து கொள்ள முதலில் வங்கி எப்படி செயல்படும் எனப் பார்த்துவிடுவோம். ஒரு வங்கி தன்னிடம் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு ஒரு 8% வட்டி கொடுக்க சம்மதித்து பணத்தை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ளும். 8% வட்டி தருவதாகச் சொல்லி வாங்கிய பணத்தைத் தான் 10% வட்டிக்கு வீட்டுக் கடனாகவும், 12% வட்டிக்கு பொருட்களுக்கான இ.எம்.ஐ-களாகவும், 14%-க்கு தனி நபர் கடன்களாகவும் என பல்வேறு கடன் திட்டங்கள் வழியாக கடன் கொடுக்கின்றன.
இது தான் லாபம்
இப்போது 8% வட்டிக்கு வாங்கிய பணத்தை வைத்துக் கொண்டு 14% வட்டி ஈட்டினால் லாபம் மட்டும் 6%. இப்படித் தான் உலகில் உள்ள பல வங்கிகளும் செயல்படுகின்றன. ஆக டெபாசிட் தான் ஒரு வங்கிக்கு பணம் வரும் முதல் வழி. இந்த டெபாசிட்டுகளுக்கு எப்படி வட்டி நிர்ணயிப்பார்கள். இதை ஆர்பிஐ ரெப்போ ரேட் விகிதங்கள் பாதிக்குமா..?
பாதிக்கும்
சமீபத்தில் தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதன் படி எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கும் சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு ஆர்பிஐ அறிவிக்கும் ரெப்போ ரேட் படி மட்டுமே வட்டி கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது. இப்படி இன்னும் சில டெபாசிட் திட்டங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட திட்டங்கள் மட்டும் ஆர்பிஐ-ன் ரெபோ ரேட் குறைந்தால் வட்டியும் உடனடியாக குறையும். ஆர்பிஐ வட்டி அதிகரித்தால், இவர்களின் வட்டியும் அதிகரிக்கும்.
இன்றைய சூழ்நிலை
பொதுவாக டேர்ம் டெபாசிட்டுகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் நபர்களுக்கு வழங்கும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் அடிப்படையில் வட்டியை மாற்றுவதில்லை. காரணம் கடந்த ஆண்டில் வங்கிகளின் கடன் அளவு வளர்ந்த அளவுக்கு, வங்கிகளில் போடும் டெபாசிட்டுகள் அதிகரிக்கவில்லையாம்.
பணம் எங்கே
ரெப்போ ரேட் அடிப்படையில் கடனுக்கான வட்டியைக் குறைக்கலாம், ஆனால் டெபாசிட்டுகளுக்கான வட்டிகளைக் குறைக்க அனைத்து வங்கிகளும் யோசித்து வருகிறதாம். மேலும் கடன் கொடுத்து லாபம் சம்பாதிக்க ஆசை இருக்கிறது. ஆனால் வங்கிகளிடம் பணம் இல்லை. ஆக கடன் கொடுக்கத் தேவையான பணத்தைப் பெற வங்கிகள் இப்போதைக்கு வட்டி விகிதங்களை மாற்றாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.
யாருக்கு எல்லாம் மாறாது
கால அளவு அடிப்படையில் நிலையான வட்டி விகிதம் தருவதாகச் சொன்ன டேர்ம் டெபாசிட்டுகளுக்கு எப்போதுமே வட்டி விகிதங்களை மாற்ற முடியாது. சொன்ன படி முழு வட்டித் தொகையையும் கொடுக்க வேண்டி இருக்கும். இனி புதிதாக டெபாசிட் செய்பவர்களுக்கு தான் முன்பை விட குறைந்த வட்டி விகிதத்தில் டெபாசிட் வாங்குவார்கள் எனச் சொல்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.