இந்தியாவில் எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் அதனால் கட்டாயம் பலன் பெறுவார்கள். அதே நேரத்தில், பாதிப்புகளையும் சந்திப்பார்கள் என்றால்.. அது நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் தான்.
இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால் மாதம் 5,000 ரூபாய் சம்பாத்தியத்தில் கிராமத்தில் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருப்பவர்கள் தொடங்கி, பெரு நகரங்கள் மாதம் லட்சம் ரூபாய் சம்பாதித்து கார், வீடு, ஐஃபோன் போன்றவைகளுக்கு இ எம் ஐ செலுத்திக் கொண்டு இருப்பவர்கள் வரை அனைவரும் தங்களை ஒரு நடுத்தர குடும்பம் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்.
நடுத்தர மக்களுக்கான இந்த பரந்த எல்லையில் இந்தியாவில் வாழும் சுமார் 80 சதவிகிதம் பேர் வந்து விடுவோம் என்பதால் நாமும் ஒரு மிடில் க்ளாஸ் தான். சரி விஷயத்துக்கு வருவோம்.
ஆர்பிஐ முடிவு
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 0.25 சதவிகிதம் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது ஆர்பிஐ. வட்டி விகித குறைப்புக்கு முன் ஆர்பிஐ-ன் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் 5.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ரெப்போ ரேட் வட்டி விகிதம் குறைத்திருப்பதால் இனி ஆர்பிஐ-ன் அடிப்படை ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.15 சதவிகிதமாக இருக்கும்.
நன்மை
இதனால் நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்கு ஒரு பெரிய நன்மை என்ன என்றால்... நாம் இனி புதிதாக கடன் வாங்கப் போனால், குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். அதோடு, இந்தியாவில் இருக்கும் பல வங்கிகளும் தற்போது ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக எஸ்பிஐ, வீட்டுக் கடன் திட்டத்தையே வகுத்து மக்களிடம் அறிவித்து இருக்கிறார்கள். எனவே இனி இந்த ஆர்பிஐ ரெப்போ ரேட் அடிப்படையில் கடன் வாங்கினால் ஆர்பிஐ வட்டி குறைத்தால் இங்கும் வட்டி குறையும்.
நன்மை பழைய கடன்
ஏற்கனவே வாங்கிய பழைய கடன்களுக்கும் நாம் செலுத்தும் இ எம் ஐ-கள் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஃப்ளோட்டிங் ரேட்டில் கடன் வாங்கி இருந்தால் அவர்களுக்குத் தான் இந்த வட்டி விகிதங்கள் குறையும். ஃபிக்ஸட் ரேட்டில் வாங்கி இருந்தால் அவர்கள் கடனுக்குச் செலுத்தும் இ எம் ஐ குறையாது. ஒருவேளை இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைத்து சில நாட்களுக்குப் பின்னும் ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்கள் குறையவில்லை என்றால் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்து வட்டி விகிதங்களைக் குறைக்கச் சொல்லிக் கேளுங்கள்.
சிக்கல்
இந்த 2019-ம் ஆண்டில் மட்டும் ஆர்பிஐ இதுவரை ஐந்து முறை (இன்று குறைத்ததையும் சேர்த்து) ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்கள். எஸ்பிஐ கடந்த ஆகஸ்ட் 2019-ல் இருந்து இப்போது வரை சுமார் 3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்களாம். எனவே தற்போது எஸ்பிஐ வங்கியில் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.5 சதவிகிதம் தான் வட்டி நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
இவ்வளவு குறைத்து இருக்கிறார்கள்
கடந்த செப்டம்பர் 10, 2019 அன்று தான் கடைசியாக எஸ்பிஐ தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து இருப்பதாக எஸ்பிஐ வங்கியின் வலைதளம் சொல்கிறது. ஆக இந்த வலைதள தரவுகளின் படி, ஒன்று முதல் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.7 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். 2 முதல் 3 வருடங்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
மற்ற திட்டங்கள்
அஞ்சலக டெபாசிட் திட்டங்கள் 1 - 3 ஆண்டுகள் 6.9% வட்டி,
5 வருட டெபாசிட் திட்டங்கள் 7.7% வட்டி,
5 வருட அஞ்சலக ஆர்டி 7.2% வட்டி,
5 வருட மாதாந்திர வருமான திட்டம் 7.6% வட்டி,
கிஷான் விகாஸ் பத்திரம் (113 மாத முதிர்ச்சி) 7.6% வட்டி எனக் கொடுக்கிறார்கள்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் 8.4 போன்றவைகள் சாதாரண வங்கி டெபாசிட் திட்டங்களை விட அதிக வருமானத்தைக் கொடுக்கிறார்கள்.
வட்டியில் ஓடிய குடும்பம்
இன்று வரை நம் குடும்பங்களில் ஒரு பெரிய சொத்து பத்துக்களை எல்லாம் விற்றால் வரும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டாகத் தான் போடச் சொல்வார்கள். அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்தே வாழ்கையை ஓட்டும் பலரையும் நாம் பார்த்து இருப்போம். ஆனால் இனி அப்படி வாழ்கையை ஓட்ட முடியாது. சுமார் 6.5 - 7 சதவிகிதம் மட்டுமே வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வட்டி என்றால் எப்படி ஓட்ட முடியும்.
ஒரே வழி
எனவே இனி வங்கிகளில் டெபாசிட் செய்வது நம்மைப் போன்ற மிடில் க்ளாஸுக்கு ஒத்து வராத ஒன்றாக இருக்கிறது. அதற்கு பதிலாக நாம் மேலே சொன்ன சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. குறிப்பாக, பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு இல்லாத மக்களுக்கு இது தான் ஒரே வழி என்பதும் வருத்தப் பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.