தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள ஒரு விலையுயர்ந்த உலோகம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
அதிலும் அரசின் ஒரு முதலீட்டு திட்டம் எனும்போது இன்னும் பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது.
இதனுடன் வட்டி விகிதமும் கிடைக்கும் என்றால் வேண்டாம் என்ற கூற முடியுமா? நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.
எந்த சீரிஸ் தொடக்கம்?
ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த பத்திரங்கள் இறையாண்மை தன்மை கொண்ட ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் ஏழாவது சீரீஸ் அக்டோபர் 25 அன்று தொடங்கவுள்ளது. அக்டோபர் 29 அன்று முடிவடையவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி நவம்பர் 2 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்க பத்திரம் மீதான ஆர்வம்
இது பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது அதிகம். குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகம். தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தங்கத்தின் மீதும் தற்போது ஆர்வம் கூடிக் கொண்டே செல்லும் நிலையில், இந்த பேப்பர் தங்கம் என்பது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் பற்றிய அச்சமும் எழுந்துள்ளது. உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது, இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த போகின்றதோ? என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் முதலீடு
பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக இந்த தங்க பத்திரங்கள் அமையலாம். குறிப்பாக பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ளன. அவற்றோடு பாதுகாப்பு பிரச்சனை உள்ளது. தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாக உள்ளது. ஆக வெறுமனே பிசிகல் தங்கமாக அல்லாமல், அவற்றை டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கவர்ச்சிகரமான முதலீடு
தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் டிஜிட்டல் தங்கமும் சிறந்த முதலீட்டு ஆப்சனாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயம்
இந்த தங்க பத்திரங்கள் கிராமுக்கு 4,765 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
எப்படி வாங்குவது?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அங்கு இணைய டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
என்னென்ன சலுகை?
தங்க பத்திரங்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள், டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்கினாய் நீங்கள் 4,715 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பிணையமாக வைத்து கடன் பெறலாம்
தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிகாலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
மூலதன ஆதாய வரி
தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் மூலதன வரி உண்டு.
பிசிகல் தங்கமாக கிடைக்குமா?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திரம் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். அதோடு பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு தான் அரசு இதனை அறிவித்தது. ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது.
அடுத்த சீரிஸ் எப்போது?
சீரிஸ் 7
சந்தா தேதி அக்டோபர் 25 - 29, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி நவம்பர் 2,2021
சீரிஸ் -8
சந்தா தேதி நவம்பர் 29 - டிசம்பர் 3, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி டிசம்பர் 7,2021
சீரிஸ் 9
சந்தா தேதி ஜனவரி 10 - 14, 2022, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 18, 2022
சீரிஸ் 10
சந்தா தேதி பிப்ரவரி 28 - மார்ச் 04, 2022, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி மார்ச் 04, 2022
இது தான் பெஸ்ட்
தங்கத்தினை ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று அரசின் தங்க பத்திரங்கள் வாங்கி வட்டியுடன் லாபத்தினையும் பெறலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் பாதுகாப்புடன் உள்ள திட்டமானதால் பாதுகாப்பும் உண்டு.